கொரோனா நோய்க்கு ஆயுர்வேத முறைப்படி மருத்துவம் பெற விரும்பும் நோயாளிகளுக்கு உதவும் வகையில் தனி சிகிச்சை மையத்தை திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாந்தா தொடங்கி வைத்தார். தமிழகம் முழுவதும் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வரும் சூழலில் உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கொரோனா தொற்று தீவிரமாக பரவி வரும் காரணத்தால் தமிழக அரசு சார்பில் கடந்த 24 ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் தளர்வில்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழக அரசின் அனைத்து துறை அதிகாரிகளும், ஊழியர்களும் கொரோனா நோய் தடுப்பு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

 

இந்நிலையில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகள் நிரம்பி வழிவதால் அரசு கல்லூரிகள், பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள், கல்லூரிகள் ஆகியவற்றில் சிறப்பு மருத்துவ வளாகங்கள் திறக்கப்பட்டு கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் திருவாரூர் மாவட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, மன்னார்குடி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை, நன்னிலம் அரசு மருத்துவமனை, திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனை ஆகியவற்றில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவை அல்லாது திருவாரூர் திருவிக அரசு கலைக்கல்லூரி, மன்னார்குடி ராஜகோபாலசாமி அரசு கலைக்கல்லூரி, வலங்கைமான் அரசு பாலிடெக்னிக் கல்லூரி போன்ற கல்லூரிகளும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை அளிக்கும்  மருத்துவமனைகளாக மாற்றப்பட்டுள்ளன.



 

மேலும் சில தனியார் பள்ளிகளும், கல்லூரிகளும் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவ மையங்களாக அரசு சார்பில் மாற்றப்பட்டுள்ளன. அந்தவகையில் திருவாரூரை அடுத்த அம்மையப்பன் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் கல்வியியல் கல்லூரியில் கொரோனா நோய்க்கு ஆயுர்வேத இயற்கை முறையில் சிகிச்சை பெற விரும்பும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெறும் வகையில் ஆயுர்வேத சிகிச்சை மையம் திறக்கப்பட்டுள்ளது.

 

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாந்தா குத்துவிளக்கேற்றி ஆயுர்வேத இயற்கை முறை சிகிச்சை மையத்தை தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து நோயாளிகளுக்காக அமைக்கப்பட்டுள்ள படுக்கை வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். ஆயுர்வேத முறைப்படி கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் விதமாக கபசுர குடிநீர், கிராம்பு குடிநீர், ஓம குடிநீர், வெற்றிலை இஞ்சி மிளகு பூண்டு ஆகியவை கலந்த குடிநீர், ஆடாதொடை சூரணம், அதிமதுர சூரணம் உள்ளிட்ட இயற்கை முறை மருந்துகள் சிகிச்சை அளிப்பதற்காக தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இந்த நிகழ்ச்சியில் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் நாகை நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசு மற்றும் அரசு ஆயுர்வேத மருத்துவர்கள் மற்றும செவிலியர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.