திருவாரூர் மாவட்டத்தில் 660 தொடக்கப்பள்ளிகள், 235 நடுநிலை பள்ளிகள், 78 உயர்நிலை பள்ளிகள், 91 அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் தனியார் பள்ளிகள் என 1,282 பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இதில் அரசு பள்ளிகளில் கிராமப்புறங்களை சேர்ந்த ஏழ்மையான குடும்பத்தைச் சார்ந்த குழந்தைகள் பயின்று வருகின்றனர். இந்த நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்றின் காரணமாக பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டிருந்த நிலையில் கடந்த 2 மாதத்திற்கு முன்னதாக தமிழ்நாட்டில் பள்ளிகளை திறக்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டிருந்தது. அதன் அடிப்படையில் தற்போது பள்ளிகள் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இருந்தபோதிலும் திருவாரூர் மாவட்டத்தில் பள்ளிகள் திறந்த நாளில் இருந்து அதிக அளவில் மழை பெய்து வருவதால் தொடர்ந்து பள்ளிகளுக்கு மீண்டும் விடுமுறை விடப்பட்டு வருகிறது. ஒரு சில நாட்கள் மட்டுமே  பள்ளிகள் செயல்பட்டுள்ளது.



 

இந்த நிலையில் திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி ஒன்றியத்திற்குட்பட்ட அம்மையப்பன் பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி கடந்த பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் அம்மையப்பன் சுற்றியுள்ள கிராமங்களான தண்டலை முகந்தனூர் வடபாதி பெண்பாதி கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவ மாணவிகள் இந்த அரசு பள்ளியில் பயின்று வருகின்றனர். இந்த நிலையில் அரசு மேல்நிலை பள்ளியின் கட்டிடம் ஆங்காங்கே இடிந்துவிழுந்து வருவதால் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை பள்ளிகளுக்கு அனுப்புவதில் அச்சம் அடைந்துள்ளனர். திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் அம்மையப்பன் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆயிரக்கணக்கான மாணவ மாணவியர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.  இப்பள்ளி கட்டிடம் கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த பல மாதங்களாக பராமரிப்பு இன்றி இருந்து வந்தது. இதனால் இப்பள்ளியில் பல்வேறு வகுப்பறைகள் பயன்படுத்த முடியாத நிலையிலும், மேலும் பல வகுப்பறைகளின் மேற்கூரை கான்கீரிட் பூச்சு பெயர்ந்து விழந்து வருகிறது.  இதுதவிர வகுப்பறைகளின் சுற்றுசுவர், பள்ளி காம்பவுண்ட், கழிப்பறைகள் என அனைத்தும் பழுதடைந்து காண்பதோடு, இடிந்துவிழும் அபாயம் ஏற்பட்டுள்ளது.



பள்ளி கட்டிடத்தின் இத்தகைய அபாய நிலையினால் தற்போது பள்ளிக்கூடம் திறக்கப்பட்ட நிலையில் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதில் அச்சம் அடைந்துள்ள தோடு,  இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பெற்றோர்கள் எதிர்பார்க்கின்றனர். தற்பொழுது தமிழக அரசு பள்ளிக்கல்வித் துறைக்கு அதிக அளவில் நிதி உதவி உள்ள சூழலில் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அம்மையப்பன் அரசு மேல்நிலை பள்ளியின் கட்டிடங்களின் வலு தன்மை குறித்து ஆய்வு செய்து உடனடியாக புதிய கட்டிடத்தை கட்டி தர மாணவர்களும் பெற்றோர்களும் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.