மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியை அடுத்த தில்லையாடியை பூர்வீகமாக கொண்ட முனுசாமி - மங்கம்மாள் தம்பதிக்கு, தென் ஆப்பிரிக்காவில் ‘ஜோகன்னஸ்பர்க்’ நகரில் 1898 -ம் ஆண்டு, பிப்ரவரி 22ம் தேதி வள்ளியம்மாள் பிறந்தார். தென்ஆப்பிரிக்காவில் இந்தியர்களுக்கு ஆங்கிலேயரால் விதிக்கப்பட்ட பல்வேறு கொடுமைகளை எதிர்த்து, 1913 -ல் காந்தியடிகள் போராட்டங்கள் நடத்தினார். காந்தியின் சொற்பொழிவுகள் சிறுமி வள்ளியம்மையின் மனதில் ஆழமாக பதிந்து, விடுதலைக் கனலை மூட்டின. அதனை தொடர்ந்து சிறுமியான வள்ளியம்மை காந்தி நடத்திய போராட்டங்களில் பங்கேற்க தொடங்கினர். 




ஆங்கிலேய அதிகாரி ஒரு முறை காந்தியை நோக்கி துப்பாக்கியை நீட்டினார். அப்போது முதலில் என்னை சுடு பார்க்கலாம் என முன்வரிசையில் நின்றார் வள்ளியம்மை. கிறிஸ்தவச் சடங்கு திருமணங்கள் மட்டுமே செல்லும், பதிவு செய்யப்படும் என்ற சட்டத்தை, எதிர்த்து ஜோகன்னஸ்பர்க்கில் போராட்டம் நடத்திய மகளிர் சத்தியாகிரகப் படையினருக்கு வள்ளியம்மை தொண்டு செய்தார். தடையை மீறி போராடியதற்காக 3 மாதம் சிறையா? அபராதம் செலுத்தி விடுதலையா? என்ற போது, பணம் செலுத்துவது சத்தியாகிரகத்துக்கு இழுக்கு என துணிச்சலுடன் மறுத்து சிறைக்குச் சென்றார்.




ஒரு கொடி கூட இல்லாத கூலிகளுக்கு இவ்வளவு வெறியா? என்றார் ஓர் ஆங்கிலேய அதிகாரி. உடனே தனது சேலையைக் கிழித்து அதிகாரியின் முகத்தில் எறிந்த வள்ளியம்மை, ‘இதுதான் எங்கள் தேசியக் கொடி’ என்றார். சுகாதாரமற்ற சூழல், அதிகப்படியான சிறைப்பணியால் வள்ளியம்மை உடல்நலம் பாதிக்கப்பட்டது. முன்கூட்டியே விடுதலை பெற வாய்ப்பு கிட்டியபோதும், அதனை ஏற்க மறுத்தார். சிறையில் இருந்து விடுதலை ஆன 10 நாட்களில் தில்லையாடி வள்ளியம்மை, 1914 பிப்ரவரி 22 -ம் தேதி இதே நாளில், தனது பிறந்த நாளிலேயே மறைந்தார்.




இந்தியாவின் ஒரு புனித மகளை இழந்துவிட்டோம். ஏன், எதற்கு என்று கேட்காமல் கடமையைச் செய்தவர் வள்ளியம்மை என்றும், வள்ளியம்மை மனோபலம், தன்மானம் மிக்கவர் என்றும், அவரது தியாகம் இந்திய சமூகத்துக்கு நிச்சயம் பலன் தரும் என்றும் தனது இரங்கல் செய்தியில் மகாத்மா காந்தி குறிப்பிட்டார். ஒரு முறை தில்லையாடிக்கு வந்த காந்தி, அந்த ஊர் மண்ணை கண்ணில் ஒற்றிக்கொண்டு கண்கலங்கினார். ‘பலன் கருதாமல் தியாக உணர்வுடன் போராடி வெற்றி கண்ட தில்லையாடி வள்ளியம்மைதான் எனக்கு முதன்முதலில் விடுதலை உணர்வை ஊட்டினார் என புகழ்ந்தார்.




வள்ளியம்மையின் தியாகத்தைப் போற்றும் வகையில், தில்லையாடியில் நினைவு மண்டபம் கட்டப்பட்டுள்ளது. பொது நூலகம் ஒன்றும் செயல்பட்டு வருகிறது. 16 -வது வயதிலேயே ஆங்கிலேயருக்கு எதிராகப் போராடி உயிர்நீத்த ‘முதல் விடுதலைப் போராளி’ வள்ளியம்மை, ஒரு தமிழ்ப் பெண் என்பது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று. 16 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்து சரித்திரத்தில் இடம் பிடித்தார் தமிழ் இன வீரமங்கை வள்ளியம்மை. அவரின் நினைவு தினம் ஆண்டுதோறும் தில்லையாடியில் அமைந்துள்ள அவரது நினைவு மண்டபத்தில் அரசு சார்பில் அனுசரிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தில்லையாடி வள்ளியம்மையின் 109 -வது நினைவு தினம் இன்று அனுசரிக்கபட்டது. இதனை முன்னிட்டு, தில்லையாடியில் அமைந்துள்ள வள்ளியம்மை நினைவு மணி மண்டபத்தில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு, மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செய்தனர்.




மேலும், செம்பனார்கோவில் ஒன்றிய பெருந்தலைவர் நந்தினி ஸ்ரீதர், மாவட்ட ஒன்றிய உறுப்பினர் துளசிரேகா, தில்லையாடி ஊராட்சி மன்ற தலைவர் ரெங்கராஜ், சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுகள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் தில்லையாடி வள்ளியம்மை உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மலர்தூவி நினைவஞ்சலி செலுத்தினர். பின்னர் மணிமண்டத்தில் உள்ள தில்லையாடி வள்ளியம்மை உள்ளிட்ட சுதந்திர போராட்ட தியாகிகளின் வரலாற்று, ஆவணங்கள், புகைப்படங்கள், ஓவியங்கள் உள்ளிட்டவைகளை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு அவற்றின் விளக்கத்தை கேட்டறிந்தார். அதனை தொடர்ந்து சுதந்திர போராட்ட தியாகிகளின் நினைவை போற்றும் விதமாக தில்லையாடியிலிருந்து மயிலாடுதுறை வரையிலான தியாகச்சுடர் ஓட்டத்தை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்.