காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது. அணையின் பாதுகாப்பு கருதி நேற்று இரண்டு லட்சத்து 10 ஆயிரம் கன அடி உபரி நீர் கல்லணை வழியாக கொள்ளிடம் ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் தற்போது மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கொள்ளிடம் ஆற்றின் வழியாக பழையாறு கடலில் சென்று சேரும். இதன் காரணமாக மயிலாடுதுறை மாவட்ட சீர்காழி அருகே கொள்ளிடம் கரையோர கிராமங்களில் தண்ணீர் உப்புகுந்துள்ளது. 




சீர்காழி தாலுகாவில் அளக்குடி, நாதல்படுகை, முதலைமேடு, வெள்ளமணல் உள்ளிட்ட கிராமங்கள் கொள்ளிடம் கரைக்கு உட்புறம் உள்ள திட்டுப்பகுதியில் அமைந்துள்ளது. இதன் காரணமாக அப்பகுதியில் வசிக்கும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்களை பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வந்தது.   மேலும் மயிலாடுதுறை மாவட்ட நிர்வாகம் சார்பில் நேற்று முன்தினம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு தாழ்வான பகுதியில் உள்ளவர்களை மேடான பகுதிகளுக்கு தங்க அறிவுறுத்தி இருந்தனர். 




இந்நிலையில்  கொள்ளிடம் ஆற்றில் அதிகளவு தண்ணீர் செல்வதால்  வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இரண்டு கறைகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது. இதனால் கொள்ளிடம் ஆற்றுப் படுகை கிராமங்களான வெள்ளைமணல், நாதல்படுகை, முதலைமேடுதிட்டு உள்ளிட்ட பகுதிகளில் குடியிருப்புகள் மற்றும் விவசாய விலை நிலங்களில்  தண்ணீர் உட்புகுந்துள்ளது. சுமார் 500 ஏக்கர் நிலப்பரப்பில் பயிரிடப்பட்ட வெண்டை, கத்திரிக்காய், சோளம் முல்லை பூ உள்ளிட்ட பயிர்களை முற்றிலும் தண்ணீர் சூழ்ந்துள்ளது.




இந்த நிலையில் கொள்ளிடத்தை அடுத்த நாதல்படுகை கிராமம் முழுவதும் தண்ணீரில் மூழ்கியுள்ளது. இதனை அடுத்து அப்போது மக்களே படகுகள் மூலம் மாவட்ட நிர்வாகம் சார்பில் பத்திரமாக மீட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டு வருகின்றனர். இந்த சூழலில் அப்பகுதி மக்களில் பலர் ஆபத்தை உணராமல் குழந்தை, முதிவர்களுடன் கிராமத்தில் இருந்து வெளியேறாமல் கிராமத்தின் உள்ளேயே தங்கி உள்ளனர். பாதுகாப்பான பகுதிக்கு வராமல் தங்கியுள்ள ஒரு சிலருக்கு அவ்வப்போது திடீர் உடல்நல பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. அதனைத் தொடர்ந்து அவசரகதியில் அங்கிருந்து தீயணைப்பு மீட்பு படையினரும், காவல்துறையினரிடம் இணைந்து அவர்களை மீட்டு கரை சேர்த்து வருகின்றனர். 




இந்த சூழலில் நாதன் படுகை கிராமத்தைச் சேர்ந்த 50 வயதான குமார் என்பவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு மிகவும் ஆபத்தான நிலையில் மீட்டு படகு மூலம் கரை சேர்த்தனர். இப்பகுதியில் மருத்துவர் நிலையில் ஆன மருத்துவ குழு இன்றி செவிலியர்கள் மட்டுமே இருப்பதால் உடனடியாக அவரை ஆம்புலன்ஸ் மூலம் சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுபோன்ற இக்கட்டான சூழ்நிலை ஏற்படும் முன் மீதமுள்ள மக்கள் அங்கிருந்து வெளியேற வேண்டும் என மாவட்ட நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.