தஞ்சாவூர்: ரிமோட் ஸ்டேட்டில்தான் இருக்க வேண்டும். அதுபோல்தான் கல்வியும் இருக்க வேண்டும். நமக்குள் அடித்துக் கொண்டால் வேறு ஒருவன் எடுத்து சென்றுவிடுவான். அதுகூடாது. அப்படி எடுத்த முடிவுதான் இந்த கூட்டணி. இதை புரிந்து கொள்பவர்கள் புரிந்து கொள்ளுங்கள். இல்லை என்றால் சும்மா இருங்கள் என்று தன் பாணியில் மக்கள் நீதி மய்யம் தலைவரும், எம்.பி.யுமான கமல்ஹாசன் கூட்டணி சேர்ந்தது குறித்து பேசினார்.

Continues below advertisement

தமிழ் சினிமாவில் 'புத்தம் புது பூவே' என்ற படத்தின் மூலம் திரையுலகில் பாடலாசிரியராக அறிமுகமான சினேகன். இதுவரை 2500-க்கும் அதிகமான பாடல்களை எழுதி உள்ளார். கவிஞர் மட்டுமின்றி, நடிகர், அரசியல்வாதி என பன்முகங்களை கொண்டவர். இந்த நிலையில், கவிஞர் சினேகனின் தந்தை சிவசங்கு (102) வயது மூப்பின் காரணமாக கடந்த அக்டோபர் மாதம் இறந்து விட்டார். தனது தந்தை இறந்தது குறித்து, சினேகன் தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவு ஒன்றையும் வெளியிட்டார். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள எனது சொந்த கிராமம் புதுக்கரியப்பட்டியில் நல்லடக்கம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது." என்று பதிவிட்டு இருந்தார். இதையடுத்து சினேகன் தந்தை மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் அஞ்சலி செலுத்தினர்.

இந்நிலையில் தனது தந்தை படத்திறப்பு விழாவிற்கு மக்கள் நீதி மய்ய தலைவரும் எம்.பி.,யுமான கமலஹாசனை அதே கட்சி நிர்வாகியான சினேகன் அழைப்பு விடுத்திருந்தார். இதையடுத்து தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டி அருகே புதுக்கரியப்பட்டியில் கவிஞர் சினேகன் தந்தை படத்திறப்பு மற்றும் "நம்மவர் நூலகம், நம்மவர் படிப்பகம், நம்மவர் கலைக்கூடம்" ஆகியவற்றுக்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது.

Continues below advertisement

இதில் பங்கேற்ற மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும், எம்பியுமான கமலஹாசன் பேசியதாவது: பதவி வரும்போது, பணிவும், துணிவும் வர வேண்டும். பணிவுக்காக, துணிவை இழக்கும் சுயமரியாதை அற்றவர்கள் அல்ல எங்கள் கூட்டம். அரசியல் கட்சி ஆரம்பிக்காமல், முதலில் தொண்டு வழங்கிக் கொண்டு, பிறகு அரசியலில் வந்து மூத்தவர்களிடம், மூத்த கட்சிகளிடம் அறிவுரை பெற்றுக் கொண்டு கட்சி தொடங்கி இருக்கிறேன். அரசியலில் மாற்று கருத்து இருந்தே ஆக வேண்டும். அதற்கு பெயர் தான் ஜனநாயகம். ஆனால் நாடு என்று வரும்போது நாம் கூடி நின்றாக வேண்டும். இது இரங்கல் கூட்டம் இல்லை. இது ஏற்றம் காணும் கூட்டம். இரங்கல் முடிந்து விட்டது. அவர் வாழ்ந்த நாட்களை நினைத்து அவரை ஏற்றி வைக்கும் கூட்டம் இது. சினேகனின் தந்தையிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். உங்கள் மகனை நான் தத்தெடுத்து கொள்கிறேன் என்று பர்மிஷன் கேட்கவில்லை. அதற்கான மன்னிப்பை அவரிடம் கேட்டுக் கொள்கிறேன். 

எதற்காக திமுகவுடன் இணைந்தீர்கள், அதான் ரிமோட்டை தூக்கி டிவி மேல் போட்டீர்களே. ஏன் மறுபடி திமுக கூட்டணிக்கு போனீர்கள் என்று கேட்கிறார்கள். ரிமோட்டை தூக்கி போட்டேன். அதான் ஜனநாயகம். அதை விமர்சிக்க வேண்டும். ஆனால் ரிமோட்டை வேறு ஒருவன் தூக்கிட்டு ஓடிட்டான். ஆஹா ரிமோட் அங்கு போக கூடாது என்ற எண்ணம் எழுந்தது.

ரிமோட் ஸ்டேட்டில் இருக்க வேண்டும். கல்வியும் அப்படித்தான் இருக்க வேண்டும். ரிமோட்டை கொடுப்போமா. எடுத்துட்டு வந்து திருப்பி ஒளித்து வைத்தேன். ஒருத்தர் மீது ஒருத்தர் அடித்துக் கொள்ள வேண்டாம். எவனாவது வந்து தூக்கி கொண்டு போய் விடுவார்கள். அப்படின்னு எடுத்த முடிவுதான் இந்த கூட்டணி. புரிந்தால் புரிந்து கொள்ளுங்கள், இல்லை என்றால் சும்மா இருங்கள். அது வேண்டாம் என்றால் மாற்று அரசியல் என்பது பாசிசம். அது எங்களுக்கு வேண்டாம். இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, இயக்குனர் அமீர், மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன், தஞ்சாவூர் மேயர் சண்.ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.