தஞ்சாவூர்: நெல் கொள்முதலில் நடக்கும் முறைகேடுகளுக்கு தொழிலாளர்கள் மீது பழி சுமத்துவதை கைவிட வேண்டும். அதிகாரிகள் மட்டத்திலிருந்து முறைகேடுகளை களைய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு நுகர்பொருள் வாணிபக் கழக ஏஐடியூசி கோரிக்கை விடுத்துள்ளது. 


இதுகுறித்து தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக ஏஐடியூசி தொழிற்சங்க மாநில பொதுச் செயலாளர் சந்திரகுமார் கூறியதாவது:
 
நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட நெல் உடனுக்குடன் இயக்கம் செய்ய முடியாமல் பல நாட்கள் இருப்பு இருந்து இயக்கம் செய்யப்படுகிறது. இதனால் பெரிய அளவிற்கு எடை இழப்பு ஏற்படுகிறது.ஒரு கிலோ கூட எடை குறையக்கூடாது.  எடை குறைவுக்கான தொகையை கொள்முதல் பணியாளர்களும்,    சுமை தூக்கும் தொழிலாளர்களும் முழுமையாக செலுத்த வேண்டும். இல்லாவிடில் அடுத்த பருவத்தில் வேலை இல்லை என்ற நடைமுறையை நிர்வாகம் கடைபிடிப்பதால் கொள்முதலில் சற்று எடை அதிகம் வைத்து கொள்முதல் செய்யும் வழக்கம் நடைமுறையில் உள்ளது.


இழப்புத்தொகை வசூலிப்பதை கைவிடுவதன் மூலம் மட்டுமே இதனை முழுமையாக தவிர்க்க முடியும். சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு  மூட்டை ஒன்றுக்கு கூலி ரூ3.25  என்பதை ரூ 10 ஆக உயர்த்தி அறிவித்தபோது ஏஐடியூசி தொழிற்சங்கம் சார்பில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு நேரில் நன்றி தெரிவித்த போது மிகுந்த நிதி நெருக்கடியில் கூலி உயர்வை அறிவித்துள்ளோம். புகார்களுக்கு இடமின்றி கொள்முதல் செய்ய வேண்டுமென நெகிழ்ச்சியுடன் வேண்டுகோள் விடுத்தார்.




ஏஐடியூசி சங்க சார்பில் சுமை தூக்கும் தொழிலாளர்கள் அனைவருக்கும் இந்த செய்தியை அனுப்பி முறைகேடுகளை குறைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டோம். ஆனால் மேல்மட்டத்திலிருந்து வாங்கப்படுகின்ற லஞ்சத்தை குறைக்க அதிகாரிகள் தயாரில்லாத நிலையில் எங்களது முயற்சியில் வெற்றி பெற இயலவில்லை. 2021-22 மற்றும் 2022-23 ஆண்டுகளில் கொள்முதலில் எடை இழப்பு ஏற்பட்டதாக எவ்வித விளக்கமும் கேட்காமல் விசாரணை செய்யாமல் கொள்முதல் பணியாளர்களுக்கு ரூ.31 கோடியே 55 லட்சத்து 55 ஆயிரத்து 187 எடை இழப்பு நிர்ணயிக்கப்பட்டு, பெரும்பகுதி அதிரடியாக நிர்வாகத்தால் வசூலிக்கப்பட்டுள்ளது. இந்த இழப்பு கொள்முதல் செய்யப்பட்ட நெல் உடனுக்குடன் இயக்கம் செய்யப்படாததால் ஏற்பட்ட இழப்பாகும். 


இவைத் தவிர ஒவ்வொரு கொள்முதல் நிலையத்திற்கும் விழிப்புக் குழு, பறக்கும் படை, ஒன்றிய அரசின் இந்திய உணவுக்கழக தர கட்டுப்பாட்டுக்குழு உள்ளிட்ட அனைத்து ஆய்வு குழுக்களுக்கும் ஒரு குறிப்பிட்ட தொகை நிர்ணயிக்கப்பட்டு ஆய்வில் அவர்கள் பெருமளவுக்கு இழப்புத்தொகை நிர்ணயித்து விடக்கூடாது என்று செயல்படுத்தப் படுகிறது. ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை வரை கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளுக்கு ரூ.2 வீதம் கொள்முதல் அலுவலருக்கு கொடுக்கப்பட வேண்டும், துணை மேலாளர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு வாரத்திற்கு ஒரு குறிப்பிட்ட தொகையும் கொடுக்கப்படுகிறது. இவையனைத்தும் அனைத்து கொள்முதல் நிலையங்களிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.


இவர்களே கொள்முதல் நிலையங்களில் முறைகேடுகள் நடைபெறுவதாக குறைதீர்க்கும் கூட்டங்களிலும் ஊடகங்கள் மூலம் விமர்சிக்கின்றனர். கொள்முதல் பணியாளர்கள் மற்றும்‌ சுமைதூக்கும் தொழிலாளர்கள் பெரும்பாலும் விவசாயிகள் மற்றும் விவசாயிகள் குடும்பத்தை சேர்ந்தவர்கள், விவசாயிகளை வஞ்சிப்பதற்கு இவர்கள் ஆயுதமாக பயன்படுத்தப்படுவது தான் வேதனைக்குரியது.


இந்நிலையில் விவசாயிகள் நலன் முழுமையாக பாதுகாக்கப்பட டெல்டா மாவட்ட ஆட்சித்தலைவர்கள்  நுகர்பொருள் வாணிபக் கழக நிர்வாகக் குழும உறுப்பினர்களாக உள்ள நிலையில், மாவட்ட வருவாய் அலுவலர்கள் நுகர் பொருள் வாணிபக் கழக மாவட்ட பொறுப்பில் உள்ள நிலையில் மேற்கண்ட நிர்வாக  சீர்கேடுகளை ஊழல் முறைகேடுகளை களைய போர்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறோம். இருப்பு உள்ள காலத்திற்கு ஏற்ப எடை இழப்பு அனுமதியை வழங்க வேண்டும். எடை இழப்பை தவிர்க்க கொள்முதல் செய்யப்பட்ட நெல் உடனுக்குடன் இயக்கம் செய்ய வேண்டுகிறோம்


தற்போது கூட திருவாரூர் மாவட்டத்தில் 25 லட்சம் மூட்டைகளும், மயிலாடுதுறை மாவட்டத்தில் 15 லட்சம் மூட்டைகளும், தஞ்சாவூர் மாவட்டத்தில் 11 லட்சம் மூட்டைகளும், நாகை மாவட்டத்தில்        12 லட்சம் மூட்டைகளும் இயக்கம் செய்யப்படாமல் வெயிலில் காய்ந்து கொண்டு இருக்கின்றன என்பதையும் சுட்டி காட்ட விரும்புகிறோம். தமிழ்நாடு அரசும், நுகர்பொருள் வாணிபக் கழக நிர்வாகமும் குறைபாடு இல்லாத வகையில் வரும் காலங்களில் நெல் கொள்முதல் செய்ய உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.