தஞ்சாவூர்: கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால் மதிய வேளைகளில் தஞ்சை பகுதியில் எப்போதும் வாகனப்போக்குவரத்து மிகுந்த பகுதிகள் வெறிச்சோடி காணப்படுகிறது. மக்கள் வெப்பத்தை தணிக்க தர்பூசணி, நுங்கு ஆகியவற்றை வாங்கி உண்கின்றனர். அந்த வகையில் தஞ்சை பகுதியில் தற்போது கிர்ணி பழங்கள் அதிகளவில் விற்பனையாகி வருகிறது.



தஞ்சாவூர் பகுதியில் வெயின் தாக்கம் அதிக அளவில் உள்ளது. இந்த வெப்பத்தை தணிக்கும் வகையில் குளிர்பான கடைகள், பழ ஜூஸ் கடைகள், சர்பத் ஸ்டால்கள் அதிகரித்துள்ளது. குறிப்பாக முலாம்பழம் எனப்படும் கிர்ணி பழம் வியாபாரம் விறுவிறுப்பு அடைந்துள்ளது. இந்த பழத்தின் சுவை, சத்து, குறைந்த விலை ஆகியவை காரணமாக கிர்ணி பழம் ஜூஸ் சாப்பிடும் பழக்கம் மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

தஞ்சாவூர் பகுதியில் பழக்கடையில் இடம்பெற்றிருந்த கிர்ணி பழம் தற்பொழுது வெயிலின் தாக்கம் அதிகரித்து விட்டதால் சாலையோரத்தில் கொட்டியும், வாகனங்களிலிலும் விற்பனை செய்யப்படுகிறது. இதை வாங்க மக்களும் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். இதனால் கிர்ணி பழத்தின் வரத்து தஞ்சை பகுதியில் அதிகரித்துள்ளது

இந்த கிர்ணி பழம் கிருஷ்ணகிரியில் இருந்து கொண்டு வரப்பட்டு தற்போது தஞ்சாவூர் மற்றும் அதனை சுற்றியுள்ள அனைத்து பகுதிகளிலும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கிர்ணி பழம் கிருஷ்ணகிரியில் விளைந்து சென்னை, மதுரை, திருச்சி போன்ற பெரும் நகரங்களில் உள்ள மார்க்கெட் வந்து அங்கிருந்து சில்லறை விற்பனையாளர்கள் மூலம் உட்கிராமங்களுக்கும் கொண்டு செல்லப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.





3 கிலோ ரூ.100 க்கு பொதுமக்களிடம் விற்பனை செய்யப்படுகிறது. இந்த பழத்தினை மக்கள் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர். இதில் அதிகப்படியான வைட்டமின்கள் மற்றும் சத்துக்கள் நிறைந்துள்ளதால் இவற்றை வைட்டமின்களின் சேமிப்புகலம் என்றும் அழைக்கின்றனர். அதோடு மட்டுமின்றி அதிக நற்பலன்கள் கொண்டுள்ளதால் இவற்றை பழங்களில் “ஹீரோ” என்றும் செல்லமாக அழைக்கப்படுகிறது.

கோடைக்காலத்தில் மிக அதிகமாக கிடைக்கும் இப்பழத்தில் தண்ணீரின் அளவு அதிகமாக உள்ளதால் இதனை ஜுஸ் செய்து பருகும்போது நமது உடல் வெயிலை தாங்கும் அளவிற்கு குளிர்ச்சி அடைந்து உடலில் நீரின் அளவை சமன்செய்து தேவையில்லாத நீரை வெளியேற்றுகிறது.

பீட்டா கரோட்டின் நிறைந்துள்ளதால் கண்ணின் விழித்திரை சேதமடைவதை, அதாவது வயதாவதால் பார்வைக் குறைவு ஏற்படுவதைக் கட்டுப்படுத்தவும் கிர்ணி பழம் உதவுகிறது. மிகமிகக் குறைவான கிளைசிமிக் இண்டெக்ஸ் இருப்பதால் நீரிழிவு நோயாளிகளுக்கு நன்கு பலனளிக்கக் கூடியது. இதனால் இந்த கிர்ணிப்பழம் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றுள்ளது. ரூ.100க்கு கிர்ணிப்பழம் வாங்கி ஜூஸ் போட்டால் ஒரு குடும்பத்தில் உள்ளவர் மனநிறைவாக அருந்தலாம். வெள்ளரிப் போன்று சுவை கொண்ட கிர்ணி பழத்தை வாங்க மக்கள் அதிகம் ஆர்வம் காட்டுகின்றனர்.