தஞ்சாவூரில் காவிரி டெல்டா பகுதியில் குறுவை பயிர்கள் சூள்கட்டும் தருணத்தில் இருந்து அறுவடை வரை உள்ளது. எலிகள் தானியங்களை உண்பதை விட சேதம் ஏற்படுத்துவது அதிகம். எனவே விவசாயிகள் ஒருங்கிணைந்த எலி கட்டுப்பாட்டு முறைகளை தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும் என தஞ்சை வேளாண் இணை இயக்குனர் ஜஸ்டின் தெரிவித்துள்ளார்.



எலிகள் மிகவும் நுட்பமான அறிவும், தந்திரமும் கொண்ட உயிரினம் ஆகும். சுமார் மூன்று கோடி ஆண்டுகளுக்கு முன்பாகவே பூமியில் தோன்றியது எனவும், இதுவரை 2000 இடங்கள் கண்டறியப்பட்டு வகைப்படுத்தப்பட்டுள்ளது. இவற்றில் இந்தியாவில் 104 வகை எலிகள் காணப்படுகிறது.

எலிகளின் வாழ்க்கை: எலிகள் 2 முதல் 3 ஆண்டுகள் வரை உயிர் வாழக்கூடியது. ஒரு ஆண்டில் அஞ்சு முதல் ஆறு முறை குட்டிகள் போடும். எலி குட்டி பிறந்த இரண்டு மாதங்களில் இனப்பெருக்கம் செய்ய தயாராகி விடும். ஒரு ஜோடி எலி மூலம் ஒரு ஆண்டில் 2046 எலிகளாக பெருக்கம் அடைகிறது.

எலிகளின் அதிசய குணங்கள்: ஒரு எலி ஒரு நாளில் சராசரியாக 50 கிராம் உணவும், 90 மில்லி லிட்டர் தண்ணீரும் குடிக்கும். நீரில்லாமல் ரெண்டு நாட்களும், உணவில்லாமல் ஏழு நாட்களும் வாழும். தற்காப்புக்காக தண்ணீரில் நீந்துவதும் மரம் ஏறும் திறனும் உள்ளது வயல் எலிகள் தொடர்ச்சியாக ஒரு கிலோ மீட்டர் வரை தண்ணீரில் நீந்தும். வயல்களில் தோண்டும் வளைகளில் 5 கிலோ வரை நெல்மணிகளையும், 2 கிலோ வரை பயறு வகைகளையும் சேமிக்கும். தமிழகத்தில் உணவு பயிர்களான நெல் கரும்பு பயறு உளுந்து பருத்தி சோயா மற்றும் நிலக்கடலை பெயர்களை அழித்து சேதப்படுத்தும். கரம்பெலி, புல்எலி, வயல் எலி, பெருச்சாளி, வீட்டு சுண்டெலி, வீட்டு எலி என எலி வகைகள் உள்ளன.


உளவியல் முறையில் கட்டுப்பாடு: பயிர் சாகுபடிக்கு முன்பாக வரப்புகளை வெட்டி எலிகளை ஒழிக்க வேண்டும். வளைகள் அமைக்க முடியாத அளவிற்கு குறுகிய வரப்புகளை அமைக்க வேண்டும். வயல் வரப்புகளை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.

இயந்திரவியல் முறை:  உலகளவில் பிரசித்தி பெற்ற தஞ்சாவூர் மூங்கில் எலி கிட்டிகள் பல ஆண்டுகள் பயன்பாட்டில் உள்ளது. மேலும் தற்போது மெட்டல் பொறி விவசாயிகளால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஒட்டும் அட்டை பொறி, கூண்டு பொறி போன்றவைகளும் பயன்பாட்டில் உள்ளது.

உயிரியல் முறை: வயல்வெளியில் கோட்டான்கள் அமர்வதற்கு ஏற்ப மூங்கில் குச்சிகளை நடுவது, தென்னை அடிமட்டைகளை வயலில் தலைகீழாக நடுவதன் மூலம் எலிகளை கட்டுப்படுத்த முடியும். ஒவ்வொரு கோட்டானும் தினமும் 6 எலிகள் வரை பிடித்து உண்ணும்.

ரசாயன முறை: ரத்தத்தை உறைய விடாமல் தடுக்கும் துத்தநாக பாஸ்பைடு புரோமோடைலான் மருந்துகளை பயன்படுத்தி அழிக்கலாம்.

புரோமோடைலான் கவர்ச்சி உணவு: 250 கிராம் கவர்ச்சி உணவுடன் 5 கிராம் தேங்காய் எண்ணெய் மற்றும் 5 கிராம் புரோமோடைலானை எலி வளைகள் மற்றும் அவற்றின் நடமாட்டம் காணப்படும் இடங்களில் 15 முதல் 20 கிராம் விஷம் கலந்த உணவு பொருளை வைக்க வேண்டும். விஷம் கலந்த உணவு பொருட்களை பேப்பரில் மடித்து வைப்பது சிறந்தது.

விஷ மருந்துகள் வைத்த வயல்களுக்கு அருகில் குழந்தைகள் மற்றும் ஆடு, மாடு, கோழி போன்ற விலங்கினங்கள் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். வயல்களில் எஞ்சி இருக்கும் மருந்துகளையும், இறந்த எலிகளையும் பாதுகாப்பாக குழியில் இட்டு மூட வேண்டும். கிராமங்கள்தோறும் சமுதாய நோக்கத்தோடு ஒரே நேரத்தில் எலிகளை கட்டுப்படுத்துவதன் மூலம் தானிய இழப்பை தவிர்த்து அதிக மகசூல் எடுக்க முடியும்.