தஞ்சை மாவட்டம் திருமண்டங்குடியில் கடந்த 50 நாட்களாக போராடி வரும் கரும்பு விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும், இதுகுறித்து முதல்வரிடம் முறையிட்டும் நடவடிக்கை எடுக்காததை கண்டித்தும் வரும் 21 ம் தேதி மாநிலம் முழுவதும் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொதுச் செயலாளர் சாமி.நடராஜன் தெரிவித்தார்.



இதுகுறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது: தஞ்சாவூர் மாவட்டம் திருமண்டங்குடியிலும், கடலுார் மாவட்டம் சித்துாரில் உள்ள திருஆரூரான் சர்க்கரை ஆலை, கடந்த 2019ம் ஆண்டு அரவை பணிகள் இல்லாமல் மூடி கிடக்கிறது. இதற்கு காரணம் விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய சுமார் 112 கோடி ரூபாய் நிலுவை தொகையை கேட்டு விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

மேலும், சுமார் 6 ஆயிரம் விவசாயிகள் பெயரில் மோசடியாக, 200 கோடி ரூபாய் அளவிற்கு வங்கியில் இருந்து ஆலை நிர்வாகம் 12 வங்கிகளில் கடனை பெற்றுள்ளது. இதன் மூலம், விவசாயிகளை கடனாளியாக மாற்றியுள்ளனர். இதற்கிடையில் தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்திற்கு சென்று, பொது ஏலத்தில் இரண்டு சர்க்கரை ஆலைகளையும் ஏலத்தில் விட்டு விட்டது. தற்போது, திருஆரூரான் சர்க்கரை ஆலையை கால்ஸ் என்ற புதிய நிர்வாகம் ஏலத்தில் எடுத்துள்ளது.

அந்த புதிய நிர்வாகம், விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவை தொகை, விவசாயிகள் பெயரில் பெற்ற கடன் தொடர்பாக பேசாமல், ஆலை திறக்க முயற்சித்தது. இதையடுத்து நிலுவை தொகையை வழங்க வேண்டும், விவசாயிகள் பெயரில் போலியாக வங்கியில், வாங்கிய கடன் தொகையை புதிய நிர்வாகம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி, தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தினர் 50 நாட்களாக திருமண்டங்குடி ஆலைக்கு முன்பாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இது குறித்து முதல்வரையும், வேளாண்துறை அமைச்சரையும் நேரில் சந்தித்து, விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளை ஏற்று தீர்வு காண வேண்டும் என கூறியுள்ளோம்.  முதல்வரிடம் முறையிட்டும் 50 நாட்களாக விவசாயிகள் பிரச்சனை தீரவில்லை. கரும்பு விவசாயிகளுக்கு ஆதரவாகவும், கண்டுக்கொள்ளாத மாநில அரசை கண்டித்தும், வரும் ஜன.21 ம் தேதி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில், மாநிலம் முழுவதும் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம்.

எனவே, முதல்வர் உடனடியாக தலையிட்டு, வட்டியுடன் நிலுவை தொகை வழங்கவும், கடன் பிரச்சனையிலும் தீர்வு காண வேண்டும்.  மேலும், ஆலையை கூட்டுறவு துறை மூலம் மாநில அரசை நடத்த வேண்டும். மத்திய அரசு வரும் ஏப்ரல் 1ம் தேதியிலிருந்து, ரேஷன் கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசியை வழங்குவதாக அறிவித்துள்ளது. மாநில வேளாண்துறை அமைச்சரும் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கப்படும் என கூறியுள்ளார்.

இந்நிலையில் ரத்தசோகை, இரும்பு சத்து குறைப்பாடுகளை போக்குவதற்காக அரிசியை செறிவூட்டி வழங்குவதாக மத்திய அரசு அறிவித்துள்ள போதிலும், மாநில அரசு அதை முழுமையாக ஆய்வு செய்த பிறகே, மாநில அரசு முடிவு எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.