பாண்டுரங்கா!பாண்டுரங்கா!... தஞ்சாவூரில் 25 கோயில்களில் இருந்து பெருமாள்கள் கருட வாகன சேவை 

கருடசேவையை முன்னிட்டு நான்கு ராஜவீதிகளிலும் பக்தர்களுக்கு அன்னதானம், குளிர்பானம், நீர்மோர் போன்றவை வழங்கப்பட்டன.

Continues below advertisement

தஞ்சாவூர்: தஞ்சையில் உள்ள 25 பெருமாள் கோயில்களில் இருந்து பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருளினர். பக்தர்களின் பாண்டுரங்கா பஜனை பாடல்கள், கோலாட்டத்துடன் நான்கு ராஜ வீதிகளில் கருட சேவை வலம் வந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். இந்த கருட சேவை 90ம் ஆண்டாக நடக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Continues below advertisement

90ம் ஆண்டு கருடசேவை விழா

அறநிலையத் துறை, தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானம், ஸ்ரீ ராமானுஜ தரிசன சபா ஆகியவை சார்பில் ஆண்டுதோறும் இந்த விழா விமர்சையாக நடைபெற்று வருகிறது. தஞ்சை அரண்மனை தேவஸ்தானத்துடன் இணைந்த 88 கோவில்களுள் தஞ்சை மாமணிக்கோவில்கள் மிக சிறப்பு வாய்ந்தவை. ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்டதும், 108 திவ்யதேசங்களுள் 3-வதாக விளங்கும் மேலசிங்க பெருமாள், நீலமேகப் பெருமாள், மணிக்குன்ன பெருமாள் கோவில்களில் கருடசேவை அரண்மனை தேவஸ்தானம், அறநிலையத்துறை, ராமானுஜதர்சன சபை சார்பில் ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. 90ம் ஆண்டாக இந்தாண்டு கருட சேவை நடக்கிறது.


மங்களாசாசனம் நிகழ்ச்சி

விழாவை ஒட்டி நேற்று 28-ம் தேதி வெண்ணாற்றங்கரை ஸ்ரீ நரசிம்மப் பெருமாள் சன்னதியில் திவ்யதேச பெருமாள்களுக்குத் திருமங்கை ஆழ்வார் மங்களாசாசனம் நடைபெற்றது. பின்னர், வெண்ணாற்றங்கரையிலிருந்து இன்று திவ்யதேச பெருமாளுடன் கருட வாகனத்தில் புறப்பட்டு கீழ வீதி, தெற்கு வீதி, மேல வீதி, வடக்கு வீதி ஆகிய ராஜ வீதிகளில் வீதியுலா நடைபெற்றது. இதில், நீலமேகப் பெருமாள், நரசிம்ம பெருமாள், மணிகுன்றப் பெருமாள், வேளூர் வரதராஜ பெருமாள், கல்யாண வெங்கடேச பெருமாள், யாதவ கண்ணன், கொண்டிராஜ பாளையம் யோக நரசிம்ம பெருமாள், பள்ளிய அக்ரஹாரம் கோதண்டராமர், கீழ வீதி வரதராஜ பெருமாள், தெற்கு வீதி கலியுக வெங்கடேச பெருமாள் உள்பட 25 கோயில்களிலிருந்து பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருளினர். பின்னர்  ராஜ வீதிகளில் ஒரே நேரத்தில் பக்தர்களுக்கு சேவை பெருமாள்கள் சேவை சாதித்தனர்.

பக்தர்கள் பஜனை பாடி வந்தனர்

அப்போது பாண்டுரங்கா பஜனை பாடல்களை பக்தர்கள் பாடினர். கோலாட்டத்துடன் வீதியுலா வந்த கருட சேவையை ஏராளமான மக்கள் கண்டு வழிபட்டனர். பின்னர் பெருமாள்கள் அங்கிருந்து புறப்பட்டு அந்தந்த கோயில்களை சென்றடைந்தனர். கருடவாகனத்திற்கு முன்பும், பின்பும் பக்தர்கள் பஜனை பாடியபடி சென்றனர். கருடசேவை விழாவையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.

கருடசேவையை முன்னிட்டு நான்கு ராஜவீதிகளிலும் பக்தர்களுக்கு அன்னதானம், குளிர்பானம், நீர்மோர் போன்றவை வழங்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை அந்தந்த கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

Continues below advertisement
Sponsored Links by Taboola