தஞ்சாவூர்: வருது கோடை விடுமுறை... சுற்றுலாப்பயணிகளை கவர இதை எப்போது செய்வீங்க என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். என்ன விஷயம் தெரியுங்களா?
சுற்றுலா என்றாலே தஞ்சாவூர்தான். வெளி மாவட்ட மக்கள் மட்டுமின்றி வெளி மாநில மக்களும் தஞ்சாவூருக்கு விசிட் அடித்தால் பெரியகோயில், அரண்மனை, மணி மண்டபம், புன்னை நல்லூர் மாரியம்மன் கோயில் என்று சுற்றிப்பார்த்துவிட்டு தான் திரும்புவார்கள். இப்படி சுற்றுலா தலத்திற்கு என்று தனி பெருமை பெற்று தஞ்சாவூர் விளங்குகிறது.
அந்த வகையில் தஞ்சாவூர் அருகே மாரியம்மன் கோவில் பகுதியில் உள்ள சமுத்திர ஏரியும் இப்போது சுற்றுலாத்தலமாக மாறிவிட்டது. பெயருக்கு ஏற்றார்போல் தண்ணீர் நிரம்பி நிற்கும் இந்த சமுத்திரம் ஏரியில் படகு சவாரி எப்போது தொடங்கும் என பொதுமக்கள் வெகு எதிர்பார்ப்பில் உள்ளனர்.
தஞ்சையை அடுத்த மாரியம்மன்கோயில் பகுதியில் சமுத்திரம் ஏரி உள்ளது. இந்த ஏரி தஞ்சையில் இருந்து 4 கி.மீ தூரத்தில் உள்ளது. பழமையான இந்த சமுத்திரம் ஏரி 287 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்த ஏரி மூலம் 6 கிராமங்களில் உள்ள 1,116 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. இந்த ஏரி நாயக்கர் காலத்தில் வெட்டப்பட்டது. பின்னர் வந்த மராட்டியர்களின் ஆட்சிக் காலத்தில் ஏரி புனரமைக்கப்பட்டது. இந்த ஏரி குறித்த ஓவியம் லண்டனில் உள்ள பிரிட்டிஷ் நூலகத்தில் இடம் பெற்றுள்ளது.
இந்த ஏரிக்கு கல்லணை கால்வாயில் இருந்து தண்ணீர் வரும். மராட்டிய அரச குடும்பத்தினர் இந்த ஏரியில் படகில் பயணம் செய்து மாரியம்மன் கோயிலுக்கு சென்று வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த ஏரி எப்போதும் கடல் போல் காட்சி அளிக்கும். இந்த ஏரியை சுற்றுலாத் தலமாக மாற்ற வேண்டும் என்று தஞ்சை பகுதி மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வந்தனர்.
இதையடுத்து கல்லணை கால்வாய் கோட்ட பொதுப்பணித் துறை சார்பில் இது தொடர்பாக விரிவான அறிக்கை தயார் செய்யப்பட்டது. ரூ.8.84 கோடி மதிப்பீட்டில் இதற்காக திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு பல்வேறு பணிகள் நடைபெற்றது. அதன்படி சமுத்திர ஏரியில் பறவைகள் இங்கு தங்கி குஞ்சு பொரிக்கும் மூன்று தீவுகள் ஏற்படுத்தப்பட்டு அதில் மரங்கள் நடப்பட்டு பறவைகள் தங்குமிடமாக உருவாக்கப்பட்டது. மேலும் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் இதனை சுற்றி பார்க்கும் வகையில் படகு சவாரி வசதியும் ஏற்படுத்தப்பட்டது.
பொழுது போக்கு மீன்பிடி பயிற்சித் தளமும் அமைக்கப்பட்டது. அதேபோல் சிறுவர் விளையாட்டு பூங்கா, வாகன நிறுத்துமிடத்துடன் கூடிய பெரிய சுற்றுலாத் தலமாக அமைக்கப்பட்டது. குழந்தைகள் விளையாடுவதற்காக சறுக்கு மரம் ஊஞ்சல் உட்பட விளையாட்டு சாதனங்களும் இங்கு அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இங்கு நடை மேடைகள் அமைக்கப்பட்டுள்ளது.
இதனை கடந்த ஆண்டு மார்ச் மாதம் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். இங்கு தினமும் மாலை நேரங்களில் தஞ்சை பகுதியை சேரந்த பொதுமக்கள் தங்கள் குடும்பங்களுடன் வந்து பொழுதை போக்கி செல்கின்றனர்.
இந்த நிலையில் இன்னும் சில நாட்களில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு முழு ஆண்டு தேர்வு நிறைவு பெற்று விடுமுறை அளிக்கப்பட உள்ளது. தஞ்சாவூர் மாநகரில் சுற்றுலாத்தலமாக சிவகங்கை பூங்கா, மணிமண்டபம், அறிவியல் பூங்கா. அருங்காட்சியகம், ராஜாளி பூங்கா, ராஜப்பா மணிக்கூண்டு பூங்கா மற்றும் சமுத்திரம் ஏரி உள்ளது. விடுமுறை நாட்களில் பொதுமக்கள் தங்கள் பொழுதை கழிக்க சுற்றுலா தலத்திற்கு வந்து செல்வது வழக்கம். இந்நிலையில் தற்போது சமுத்திரம் ஏரியில் பொதுமக்கள் தங்கள் குடும்பத்துடன் வருகை புரிந்து செல்கின்றனர். அங்கு படகு சவாரி இல்லாததால் மிகவும் ஏமாற்றத்துடன் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் சென்று வருகின்றனர்.
எனவே மாரியம்மன் கோயில் பகுதியில் உள்ள சுற்றுலாத்தலமாக விளங்கும் சமுத்திர ஏரியில் விரைவில் படகு சவாரி இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து தரப்பினரும் எதிர்பார்க்கின்றனர்.