தஞ்சாவூர்: தஞ்சாவூர் அருகே ஆற்றில் குளிக்கும் போது மாயமான மாணவனை மூன்று நாட்களுக்குப் பிறகு ட்ரோன் மூலம் கண்டுபிடித்து உடலை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளனர்.
தஞ்சாவூர் அருகே பிள்ளையார்பட்டி எம்ஜிஆர் நகர் பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி துரை. இவர் தற்போது டெல்லியில் தனியார் கம்பெனியில் வசித்து வருகிறார். இதனால் குடும்பத்தினருடன் டெல்லியில் தங்கியுள்ளார். இவரது மகன் சமீர் (17). இவர் தேனியில் ஒரு பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் பள்ளி விடுமுறைக்காக இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு பிள்ளையார்பட்டிக்கு சமீர் வந்தார். பின்னர் நண்பர்கள் 8 பேருடன் சேர்ந்து தஞ்சாவூர் பள்ளியக்ரஹாரம் அருகே வெண்ணாற்றில் சமீர் கடந்த 3 நாட்களுக்கு முன்பு குளிக்கச் சென்றார்.
கல்லணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரால் கல்லணை கால்வாய், வெண்ணாறு, வெட்டாறு, வடவாறு ஆகியவற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் ஆறுகளில் தண்ணீரின் வேகம் அதிகம் உள்ளது. இதனால் யாரும் ஆற்றில் இறங்கி குளிக்க வேண்டாம் என ஏற்கனவே மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இருப்பினும் இந்த அறிவிப்பையும் மீறி பல பகுதிகளில் சிறுவர்கள், வாலிபர்கள் ஆற்றில் குதித்து விளையாடி குளித்து வருகின்றனர். அந்த வகையில் சமீரும் தன் நண்பர்களுடன் வெண்ணாற்றில் வெகு நேரம் குளித்து கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் தண்ணீரின் வேகத்தில் சமீர் மற்றும் அவரது நண்பர் ஒருவர் என இருவரும் ஆற்றில் தண்ணீரின் வேகத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளனர். இதைக் கண்டு அவருடன் வந்த மற்ற நண்பர்கள் அலறி அடித்து அவர்களை காப்பாற்ற முயற்சி செய்துள்ளனர். இருப்பினும் ஆற்றில் தண்ணீரின் வேகம் அதிகம் இருந்ததால் அவர்களால் காப்பாற்ற முடியவில்லை. இந்நிலையில் அந்த வழியாக காரில் வந்த பெண் ஒருவர் சமீரின் நண்பரை தனது சேலையின் தலைப்பை கொடுத்து காப்பாற்றியுள்ளார். ஆனால் சமீர் ஆற்றில் மூழ்கி இழுத்து செல்லப்பட்டு விட்டார்.
உடன் இது குறித்து போலீசாருக்கும், தஞ்சாவூர் தீயணைப்பு துறை வீரர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு கள்ளப்பெரம்பூர் சப்-இன்ஸ்பெக்டர் ராஜ்கமல் மற்றும் போலீசார் விரைந்து வந்தனர். மேலும் தீயணைப்பு வீரர்களும் வந்து ஆற்றில் இறங்கி சமீரை வெகுநேரம் தேடி பார்த்தனர். இரவு நேரம் என்பதாலும், வெளிச்சம் போதாதாலும், ஆற்றில் தண்ணீரின் வேகம் அதிகரித்துக் கொண்டே இருந்ததால் தீயணைப்புத் துறையினர் கரைக்கு திரும்பினர். இதனால் ஆற்றில் அடித்து செல்லப்பட்ட சமீரின் நிலை என்ன ஆனது என்பது குறித்து எவ்வித தகவலும் கிடைக்கவில்லை.
தகவலறிந்து வந்த சமீரின் உறவினர்கள் கதறி அழுதது பார்ப்பவர்களை வேதனைக்குள்ளாக்கியது. இரண்டு நாட்களாக தீயணைப்பு துறை வீரர்கள் வெண்ணாற்றில் பல்வேறு இடங்களிலும் சமீரை தேடினர். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்நிலையில் நேற்று காலை 3ம் நாளாக அப்பகுதிக்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள் சமீரை ஆற்றின் பல்வேறு பகுதிகளில் தேடிப்பார்த்தனர்.
வெண்ணாற்றில் சுமார் ஐந்து கிலோ மீட்டர் தூரம் வரை தேடியும் கிடைக்காத நிலையில் தீயணைப்பு துறையினர் மற்றும் மாணவனின் உறவினர்கள் தஞ்சாவூரில் உள்ள யாழி ஏரோ ஸ்பேஸ் என்ற ட்ரோன் நிறுவனத்தை அணுகினர். அவர்கள் இலவசமாக மாணவர் நிலை குறித்து கண்டுபிடிக்க உதவினர். வெண்ணாற்றில் உள்ள புதர்கள் அதிகமாக இருந்ததால் கண்டுபிடிக்க பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் மாணவன் குளித்த இடத்திலிருந்து 500 மீட்டர் தொலைவில் புல் புதர்களுக்குள் இறந்த நிலையில் மாணவன் சமீரின் உடலை ட்ரோன் மூலம் கண்டுபிடித்து மீட்டனர். பின்னர் மாணவர் சமீரின் உடலை அவரது பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.