தஞ்சாவூர்: ஏ... யப்பா... வாங்குப்பா அந்த மண்பானையை என்று கோடை வெப்பத்தில் இருந்து தப்பிக்க மக்கள் மண்பானைகளை தேடிப்பிடித்து வாங்கி வருகின்றனர். தற்போது மக்கள் மத்தியில் பைப் வைத்த மண்பானைகள் அதிக வரவேற்பை பெற்றுள்ளன.


உடல் சூட்டை தணிக்கும் மண்பானை தண்ணீர்


பானைகளில் இயற்கை முறையில் குளிரூட்டப்பட்ட தண்ணீர் உடல் சூட்டையும், தாகத்தையும் தணிக்கும். தற்போதைய கால கட்டத்தில் பிளாஸ்டிக் குடங்கள் மற்றும் சில்வர் பாத்திரங்கள், ஈயப்பாத்திரங்களின் வருகையால் மண்பானைகளின் பயன்பாட்டை மக்கள் மறந்து போய்விட்டனர். கோடைகாலம் வந்தால்தான் மக்கள் மண்பானைகளை தேடுகின்றனர். ஆனால் அனைத்து நாட்களிலும் மண்பானைகளில் வைத்து தண்ணீரை குடிப்பதால் ஆரோக்கியம்தான். என்னதான் ப்ரிட்ஜ் தண்ணீர் குடித்தாலும் மண்பானை தண்ணீரில் உள்ள ஆரோக்கியம் அதில் கிடையாது. 


பைப் வைத்த மண்பானைகள்


கோடை காலத்தில் வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க மண்பானைகளை பயன்படுத்தும் சூழ்நிலை ஏற்படுகிறது. இதை மனதில் கொண்டு மண்பாண்ட தொழிலாளர்கள் புதுப்புது பானை ரகங்களை தயார் செய்கின்றனர். இந்த ஆண்டு கடந்த மார்ச் மாதம் முதலே வெயிலின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இன்னும் அக்னி நட்சத்திரம் ஆரம்பிக்காத நிலையில் வெயில் வாட்டி வருகிறது. அதுவும் கடந்த சில நாட்களாக தஞ்சையில் வெயிலின் தாக்கத்தால் மக்கள் மதிய நேரத்தில் வெளியில் வருவதே இல்லை. சுட்டெரிக்கும் வெயிலில் இருந்து தங்களை காத்துக் கொள்ள மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர்.


உடலில் இருந்து நீர்ச்சத்து குறைந்து விடுவதால் அதிக சோர்வு ஏற்படுகிறது. பகல் நேரத்தில் வெளியே செல்வதற்கே அச்சப்படும் நிலையில் வெயில் தாக்கம் உள்ளது. தற்போது ஜில்லுன்னு தண்ணீர் குடிக்க மக்கள் மண்பானைகளை ஆர்வத்துடன் வாங்குகின்றனர். இந்த மண் பானைகள் தற்போது குழாய் பொருத்தப்பட்டு விற்பனை வருகிறது.




அளவுக்கு தகுந்தார் போல் விலை


தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலையில் தென்னங்குடியை சேர்ந்த நீலமேகம் என்பவர் பலவகை மண்பானைகளை விற்பனை செய்து வருகிறார். 30 லிட்டர் தண்ணீர் பிடிக்கும் பெரிய அளவிலான பைப் வைத்த பானை ரூ.300க்கும், அதில் சிறிய அளவிலான பானை ரூ.250க்கும் விற்பனையாகிறது. மண்பானைகள் அளவுக்கு தகுந்தார்போல் விலை நிர்ணயம் செய்யப்பட்டு விற்கப்படுகிறது. சிறிய மண்பானை ரூ.150, ரூ.100க்கும் விற்பனையாகிறது. பைக் வைத்த பானைக் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. இதேபோல் மண்ணால் செய்யப்பட்ட வாட்டர் ஜக் ரூ.100க்கு விற்பனை செய்யப்படுகிறது. 


சமையலுக்கு பயன்படும் மண்சட்டிகள்


இதனுடன் சமையலுக்கு பயன்படுத்தும் மண்சட்டிகள் அளவுக்கு தகுந்தார் போல் ரூ.150, ரூ.100 என விற்கப்படுகிறது. மேலும் குழிப்பணியார சட்டி ரூ.100க்கும் விற்கப்படுகிறது. இதேபோல் புதுச்சேரியில் இருந்து மண்ணை அரைத்து இயந்திரங்கள் வாயிலாக செய்யப்பட்ட மீன் குழம்பு சட்டிகளை வாங்கி வந்து விற்கிறார். இவை அளவுக்கு தகுந்தார்போல் ரூ.150, ரூ.130, ரூ.100 என விற்கப்படுகிறது.


கருப்பு சட்டிகளும், தயிர் பானைகளும்


இதேபோல் கருப்பு சட்டிகள் சிறிய அளவு ரூ.100லிருந்து பெரிய அளவு ரூ.250 வரை விற்கப்படுகிறது. மதுரையிலிருந்து வரவழைக்கப்பட்ட தண்ணீர் ஜக்குகளும் அதிகம் விற்பனையாகிறது. இதேபோல் மண் பூச்சட்டி, விற்பனைக்கு உள்ளது. மேலும் தயிர் பானைகள் ரூ. 80, ரூ.90க்கு விற்கப்படுகிறது. 


இயற்கை முறையில் சுத்திகரிப்பு கருவின்னா மண்பானைதான்


இதுகுறித்து மண்பானை விற்கும் நீலமேகம் கூறுகையில், கோடைகாலம் என்பதால் ஏழைகளின் குளிர்பதன பெட்டியாக மண்பானைகள் தான் உள்ளன. மண் பானையில் இயற்கையான முறையில் குளிரூட்டப்பட்ட நீரை பருக முடியும். அதே போல் மண்பானை ஒரு மிகச் சிறந்த நீர் சுத்திகரிக்கும் கருவியாகும். பானையில் குடிதண்ணீரை ஊற்றிவைத்து 2 முதல் 5 மணிநேரம் வைத்திருந்தால் அந்த தண்ணீரில் உள்ள தீய கிருமிகளை மண்பானை உறிஞ்சி அழித்துவிடும் என்று சொல்வார்கள். தற்போது பைப் பொருத்தப்பட்ட மண்பாகைள் அதிகம் விற்பனையாகிறது. ஒரு நாளைக்கு சராசரியாக ரூ_3 ஆயிரம் வரை மண்பானைகள் விற்பனையாகிறது. மேலும் மண்ணால் செய்யப்பட்ட விளக்கு, உள் விளக்!கு, உண்டியல், மண்பானை மூடி போன்றவையும் விற்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.


தற்போது கோடைகாலம் என்பதால் மண்பானைகளையே பொதுமக்கள் அதிகம் பயன்படுத்துகிறார்கள். அதனால், பொதுமக்கள் விரும்பும் பல்வேறு ரகங்களில் மண்பானைகள் தயார் செய்து வருகிறோம். அதிலும், குழாய் பொருத்தப்பட்ட நவீன மண்பானைகளையே ஆர்வத்துடன் அதிகம் பேர் வாங்குவார்கள். தற்போது வெயில் சுட்டெரிப்பதால் மண்பானையை தேடி மக்கள் வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.