தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே வயல்களில் வாத்துக்கிடை அமைத்து விற்பனை செய்து வருகின்றனர் வெளிமாவட்ட தொழிலாளர்கள். ஒரு வாத்து ரூ. 300-க்கும் மேல் விற்பனை செய்து வருகின்றனர்.



தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட சூரப்பள்ளம் ஊராட்சியில் வாத்துகளை வளர்க்கும் தொழிலாளர்கள் முகாமிட்டுள்ளனர். ராமநாதபுரம், சிவகங்கை போன்ற வெளி மாவட்டங்களில் இருந்து பட்டுக்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் தற்பொழுது சூரப்பள்ளம் ஊராட்சியில் சூரப்பள்ளம் ஏரிக்கு அருகில் வாத்து குஞ்சுகளை கொண்டு வந்து தொழிலாளா்கள் கிடை போட்டுள்ளனர்.

இது குறித்து வாத்து வளர்க்கும் தொழிலாளர்கள் கூறியதாவது: எங்கள் பகுதியில் உள்ள வாத்து வியாபாரிகள் ஒரு வாத்து குஞ்சை ரூ. 80 வீதம் விலை வைத்து எங்களிடம் சுமார் 500  வாத்து குஞ்சுகளை ஒப்படைப்பார்கள். நாங்கள் அந்த வாத்து குஞ்சுகளை தினசரி காலை முதல் மாலை வரை அருகில் உள்ள ஏரி, குளம், ஆறு, வாய்க்கால்களில் மேய விட்டு மேய்ச்சல் முடிந்த பிறகு மாலை சுமார் 6 மணி அளவில் கொண்டு வந்து வயல்களில் கிடைபோட்டு பட்டியில் அடைத்து விடுவோம். இதைப்போல சுமார் 3 மாத காலம் இந்த வாத்து குஞ்சுகளை பராமரித்து வளர்த்தால் ஒரு வாத்து சுமார் ரூ. 250 முதல் ரூ. 300 வரை விலை போகும். சில நேரத்தில் சற்று கூடுதலாகவும் விலை போகும்.

3 மாதம் சரியாக பராமரித்து வளர்த்தால் அந்த வாத்துகள் விடும் முட்டைகளும் அந்த வாத்துகள் பொறிக்கின்ற குஞ்சுகளும் இனப்பெருக்கம் அடைவதோடு முதிர்ந்த ஒரு நல்ல வாத்து சுமார் ரூ. 300- மற்றும் அதற்கு ரூ.350க்கும் விற்கப்படும். 


இவ்வாறு ரூ. 80-க்கு வாங்கிய ஒரு வாத்து குஞ்சு 3 மாதத்தில் ரூ. 300-க்கு விற்கப்படுவதால் வாத்து வளர்க்கும் எங்களுக்கு நல்ல லாபம் கிடைக்கிறது. ஆனால் குழந்தைகளை பாதுகாப்பது போல் வாத்து குஞ்சுகளை மிகவும் கவனமாக பராமாித்தால் மட்டுமே லாபம் கிடைக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.