தஞ்சாவூர்: தஞ்சாவூர் அருகே கிராம மக்கள் பயன்படுத்தி வந்த சாலையை விமானப்படை தளம் முழுமையாக மூடியது. இதனால் 30 ஆண்டுகளாக போராடியும் பயனில்லையே என்று கிராம மக்கள் பெரும் வேதனை அடைந்து போராட்டம் நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


தஞ்சாவூர் அருகே உள்ளது இனாத்துக்கான்பட்டி. இந்த ஊர் தஞ்சாவூர் விமானப்படைத் தளம் அருகே அமைந்துள்ளது. விமானப்படை தளத்தை விரிவாக்கம் செய்ய இனாத்துக்கான்பட்டி கிராமத்தின் விவசாய நிலங்களை பல ஆண்டுகளுக்கு முன்பு கையகப்படுத்தப்பட்டது.


இதையடுத்து இந்த ஊரில் உள்ள சுமார் 200 குடும்பங்களைச் சேர்ந்த 700க்கும் அதிகமானோர் ஊருக்குள் சென்று, வர புதுக்கோட்டை சாலையில் இருந்த 10 அடி அகலமுள்ள தார் சாலையை பயன்படுத்தி வந்தனர். இந்த சாலையை மட்டும் பயன்படுத்த விமானப்படை தள நிர்வாகம் அனுமதி அளித்து இருந்தது. இந்நிலையில் அந்த சாலையில் ஊரின் துவக்கப்பகுதியில் விமானப்படையினர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திறந்து மூடும் வகையில் இரும்பு கேட் அமைத்தனர். இதனால் கிராம மக்கள் நாஞ்சிக்கோட்டை சாலை வழியாக சென்று வருகின்றனர். 


இதனால் இந்த கிராம மக்கள், சுமார் 10 கிலோ மீட்டர் தூரம் சுற்றி வரும் நிலைக்கு தள்ளப்பட்டனர். கடந்த 2020ம் ஆண்டுக்கு பின், விமானப்படையினர் இரும்பு கேட்டை மூடி யாரையும் அங்குள்ள சாலை வழியாக செல்ல அனுமதி வழங்கவில்லை. இதையடுத்து கிராம மக்கள் இந்த சாலையை பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என தொடர்ந்து மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்து வந்தனர்.




இந்நிலையில் இன்று காலை விமானப்படையினர் இரும்பு கதவை எடுத்துவிட்டு, அங்கு நிரந்தரமாக காம்பவுண்டு சுவர் எழுப்ப இயந்திரங்களை கொண்டு அதற்கான பணிகளை தொடங்கினர். இதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து பணிகள் நடைபெறும் இடத்தில் திரண்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உடன் தஞ்சாவூர் கோட்டாட்சியர் இலக்கியா, வட்டாட்சியர் சக்திவேல், வல்லம் டிஎஸ்பி நித்யா தலைமையில் போலீஸார், தீயணைப்பு வீரர்கள் என அங்கு குவிக்கப்பட்டனர்.


அதே போல் விமானப்படை வீரர்கள் அங்கு துப்பாக்கி ஏந்திய நிலையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து கோட்டாட்சியர் இலக்கியா பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் கிராம மக்கள், "நாங்கள் பல தலைமுறையாக இருந்த கிராமத்தில் வசித்து வருகிறோம். எங்களது கிராம மக்கள் தஞ்சாவூருக்கு சென்று, வர காலம் காலமாக பயன்படுத்தி வந்த சாலையை விமானப்படையினர் எடுத்துக் கொண்டனர்.


பகல் நேரங்களில் இரும்புகேட் வழியாக செல்ல அனுமதி வழங்கினர். தற்போது சாலையை முழுவதுமாக தங்களது பக்கம் எடுத்துக் கொண்டு, இரும்பு கேட் பொருத்தப்பட்ட சுமார் 40 அடி இடத்தை அகற்றிவிட்டு, அங்கு நிரந்தரமாக சுற்றுச்சுவர் எழுப்புகின்றனர். இந்த சாலையை விமானப்படையினர் நிரந்தரமாக மூடியதால் எங்களுக்கு இந்த பகுதியில் இருந்த உரிமையும் பறி போய்விட்டது.


எங்களது விளை நிலங்களை விமானப்படையினர் கொஞ்சம் கொஞ்சமாக கையகப்படுத்திவிட்டனர். தற்போது மக்கள் வசிக்கும் இந்த இடம் தான் எஞ்சி உள்ளது. எங்களது கிராமம் இனாத்துக்கான்பட்டி தான் ஐந்து கிராமங்களுக்கு தலைமை வருவாய் கிராமம், எங்களது ஊரில் முன்பு பள்ளிக்கூடம், ஊராட்சிமன்ற அலுவலகம், அஞ்சல் நிலையம், அங்கன்வாடி மையம் ஆகியவை இருந்தது. இந்த ஊரை விமானப்படையினர் கையகப்படுத்தப் போவதாக கூறி, கடந்த 30 ஆண்டுகளாக எந்தவித அடிப்படை வசதிகளையும் அரசு சார்பில் செய்து தரவில்லை. நிரந்தரமாக ஒவ்வொருவருக்கும் தலா 6 சென்ட் இடம் அரசு சார்பில் வழங்கி, அதில் குடியிருப்புகளை அமைத்து, புதிய கிராமத்தை உருவாக்கித் தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.