தஞ்சாவூர்: வரவேற்கிறோம்... வரவேற்கிறோம்... ரயில்வே நிர்வாகத்தின் இந்த சிறப்பான முடிவை வரவேற்கிறோம் என்று டெல்டா மாவட்ட பயணிகள் எதை வரவேற்கின்றனர் என்று தெரியுங்களா?


சிறப்பு ரயில்கள் இயக்கம் குறித்து அறிவிப்பு


பண்டிகை கால கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் திருச்சி - தாம்பரம் இடையே பகல் நேர சிறப்பு ரயில் வருகிற 11ம் தேதி முதல் டிசம்பர் 31ம் தேதி வரை இயக்கப்படுகிறது. இதனை டெல்டா மாவட்ட பயணிகள் வரவேற்றுள்ளனர். விடுமுறை நாட்களில் வெளியூர்களில் வசிக்கும் மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். இதனால் பண்டிகை நாட்களில் பஸ், ரயில்களில் பயணிகள் கூட்டம் அலைமோதும். தமிழகத்தில் சென்னையில் வசிக்கும் மக்கள் பெரும்பாலானோர் வெளி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் தான்.


இவர்கள் தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை நாட்களை தங்கள் சொந்த ஊர்களுக்கு கொண்டாட செல்வார்கள். இந்த பண்டிகை நாட்களில் ரயில்களிலும், பஸ்களிலும் பயணிகள் கூட்டம் நிரம்பி வழியும். இந்த ஆண்டில் இந்த மாதத்தில் (அக்டோபர்) ஆயுத பூஜை மற்றும் தீபாவளி பண்டிகை வருகிறது. ஆயுத பூஜை வருகிற 11ம் தேதி கொண்டாடப்படுகிறது. 12ம் தேதி விஜயதசமி, 13ம் தேதி ஞாயிற்றுக்கிழமை என தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறையாக உள்ளன.


டெல்டா மாவட்ட பயணிகளுக்கு பெரும் உற்சாகம்


தீபாவளி பண்டிகைக்கு முன்பதிவு டிக்கெட்டுகள் விற்று தீர்ந்துவிட்டன. இதனால், பண்டிகை நாட்களில் சிறப்பு ரயில் இயக்கப்படுமா? என பயணிகள் எதிர்பார்த்து இருந்தனர். இந்நிலையில் ரயில்வே துறை வெளியிட்ட அறிவிப்பு டெல்டா மாவட்ட பயணிகளுக்கு பெரும் உற்சாகத்தை கொடுத்துள்ளது. அட ஆமாங்க.


வருகிற 11ம் தேதி முதல் டிசம்பர் மாதம் 31ம் தேதி வரை தாம்பரத்தில் இருந்து திருச்சிக்கு வாரத்தில் 5 நாட்கள் (திங்கட்கிழமை, வியாழக்கிழமை தவிர்த்து) பகல் நேர சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த ரயில் (06190) செவ்வாய், புதன், வெள்ளி, சனி, ஞாயிறு என வாரத்தில் 5 நாட்களும் திருச்சியில் இருந்து காலை 5.35 மணிக்கு புறப்பட்டு தஞ்சைக்கு 6.24 மணிக்கும், கும்பகோணத்திற்கு 6.58 மணிக்கும், மயிலாடுதுறைக்கு 7.28 மணிக்கும், சீர்காழிக்கு 7.52 மணிக்கும், சிதம்பரம், கடலூர், விழுப்புரம், செங்கல் பட்டு வழியாக சென்னை தாம்பரத்திற்கு மதியம் 12.30 மணிக்கு செல்லும்.


அங்கிருந்து இந்த ரயில் (06191) மதியம் 3.30 மணிக்கு புறப்பட்டு சீர்காழிக்கு இரவு 7.52 மணிக்கும், மயிலாடுதுறைக்கு 8.43 மணிக்கும், கும்பகோணத்திற்கு 9.18 மணிக்கும், தஞ்சைக்கு 10.13 மணிக்கும், இரவு 11.35 மணிக்கு திருச்சிக்கு செல்லும். இந்த ரயிலில் 12 இருக்கை பெட்டிகள், 6 படுக்கை பெட்டிகள் உள்பட மொத்தம் 20 பெட்டிகள் இணைக்கப்படுகிறது.


டெல்டா மாவட்ட பயணிகள் வரவேற்றுள்ளனர்


எனவே இந்த ரயிலை பயணிகள் பயன்படுத்திக்கொள்ளுமாறு திருச்சி கோட்ட ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதைதாங்க டெல்டா மாவட்ட பயணிகள் வரவேற்றுள்ளனர். டெல்டா மாவட்டம் முழுவதும் ஏராளமான கிராமப்பகுதியை உள்ளடக்கியது. இங்கிருந்து வெளி மாவட்டத்தில் பணியாற்றுபவர்கள் ஏராளம் பேர்.  இப்படி வெளி மாவட்டங்களில் பணியாற்றுபவர்கள் தீபாவளி, பொங்கல் பண்டிகைக்குதான் ஊருக்கு திரும்புகின்றனர். இந்த இரண்டு பண்டிகைகளும் கிராமப்பகுதியில் பெரும் உற்சாகத்துடன் கொண்டாடப்படும். முக்கியமாக பொங்கல் பண்டிகையை திருவிழா போல் கிராம மக்கள் கொண்டாடுவது வழக்கம். இந்த பண்டிகைகளை தங்கள் குடும்பத்தினருடன் கொண்டாட வேண்டும் என்று நினைத்து ஆயிரக்கணக்கானோர் தங்களின் சொந்த ஊர்களுக்கு திரும்புவர். அவர்களுக்கு ரயில்வே துறையின் இந்த அறிவிப்பு உற்சாகத்தை அளித்துள்ளது.