தஞ்சாவூர்: போக்குவரத்து தொழிலாளர்களின் 15 வது ஊதிய ஒப்பந்தம் உடனடியாக பேசி முடிக்க வேண்டும். ஓய்வு பெற்றவர்கள் அகவிலைப்படி உயர்வை வழங்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிலாளர்களிடம் பிரச்சார இயக்கம் அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் 6 பணிமனைகளில்  நடைபெற்றது.
.
தமிழ்நாடு அரசு உடனடியாக பேசி முடிக்க வேண்டும்


தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் 15 வது ஊதியம் ஓராண்டு முடிந்தும் இன்னும் பேசி முடிக்கப்படவில்லை. தமிழ்நாடு அரசு உடனடியாக பேசி முடிக்க வலியுறுத்தி கும்பகோணம் போக்குவரத்து கழகத்தில் செயல்படும் சிஐடியு,ஏ ஐ டி யு சி, பணியாளர் சங்கம், மறுமலர்ச்சி திராவிட தொழிலாளர் சங்கம்  உள்ளிட்ட தொழிற்சங்கங்கள்  சார்பில் பிரச்சார இயக்கம் தஞ்சாவூர் நகர், தஞ்சாவூர் புறநகர், அரசு விரைவு போக்குவரத்து கழகம்,ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை,, பேராவூரணி உள்ளிட்ட 6 பணிமனைகள் மற்றும் பேருந்து நிலையங்களில் தொழிலாளர்களை சந்தித்து துண்டுபிரசுரம்  வழங்கி பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. 


6 பணிமனைகளில் பிரச்சார இயக்கம்


இந்த பிரச்சார இயக்கத்தில் போக்குவரத்து கழகங்களின் வரவுக்கும் செலவுக்குமான வித்தியாச தொகையை அவ்வப்பொழுதே உடன் வழங்கப்பட வேண்டும், 15வது ஊதிய ஒப்பந்தம் ஓராண்டு முடிந்த பிறகும் பேசப்படாத உள்ளது. இதை உடனடியாக பேசி முடித்து சம்பள உயர்வு ஏற்படுத்த வேண்டும், மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு இணையான சம்பள உயர்வு வழங்கப்பட வேண்டும்,ஓய்வு பெற்றவர்களின் அகவிலைப்படி  உயர்வை  ஓய்வூதியத்துடன் இணைத்து உயர்த்தி வழங்க வேண்டும், 


நிலுவைத் தொகை வழங்க வேண்டும், தொழிலாளர்கள் ஓய்வுறும் நாளன்றே ஓய்வுகால பணப் பலன்கள் வழங்கப்பட வேண்டும்,1.4. 2003 க்கு பிறகு பணியில் சேர்ந்தவர்களுக்கும் ஓய்வூதியம் கிடைக்க செய்ய வேண்டும், பழைய பென்சன் திட்டம் அமல்படுத்தப்பட வேண்டும் என்பது உட்பட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசும்,போக்குவரத்துக் கழக நிர்வாகங்களும் உடனடியாக பேசி முடித்து தீர்வு கண்டு தொழில் அமைதி காண வேண்டும் என வலியுறுத்தி பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.


கும்பகோணம் தலைமையகம் முன்பு விளக்க வாயிற்கூட்டம்


மேலும் இக் கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 20-ம்   தேதி மாலை 3 மணிக்கு கும்பகோணம் தலைமையகம் முன்பு விளக்க வாயிற்கூட்டம் நடத்துவது என்றும் தீர்மானிக்கப்பட்டது. இந்த பிரச்சார இயக்கத்தில் சிஐடி யு நிர்வாகிகள் ஆர். மனோகரன், ஜி.மணிமாறன், எம்.ஜீவா.ஏஐடியூசி நிர்வாகிகள் துரை. மதிவாணன், எஸ்.தாமரைச்செல்வன், பி.முருகவேல்,டி.தங்கராசு மற்றும் பலர் பங்கேற்றனர். 


தமிழகத்தில் அரசு போக்குவரத்துக் கழகங்களில் சுமார் 1.20 லட்சம் பேர் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கான ஊதியஉயர்வு ஒப்பந்தம், 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை போடப்பட்டு வந்தது. 13-வது ஊதிய ஒப்பந்தம், கடந்த 2019-ம் ஆண்டு ஆக.31-ம் தேதியுடன் காலாவதியானது. இதையடுத்து தொழிற்சங்கங்களுடன் நடைபெற்ற பல கட்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகு 2022-ம் ஆண்டு ஆக.24-ம் தேதி 14-வதுஊதிய ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டது.


அதன்படி, அடிப்படை ஊதியத்தை பே மேட்ரிக்ஸில் பொருத்தி5 சதவீத ஊதிய உயர்வு அளிக்கப்படும் எனவும், ஊதிய உயர்வு ஒப்பந்தத்துக்கான காலம் 4 ஆண்டுகள் எனவும் அறிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, அந்த ஊதிய ஒப்பந்தமும் கடந்த ஆண்டு ஆக.31-ம் தேதியுடன் காலாவதியானது. இதனால்15-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை விரைந்து தொடங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, வேலைநிறுத்தம் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை தொழிற்சங்கங்கள் முன்னெடுத்தன என்பதும் குறிப்பிடத்தக்கது.