தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாநகராட்சி தாய்சேய் நல கண்காணிப்பு மையத்தை திடீரென்று பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு துறை கூடுதல் இயக்குநர் சேகர் ஆய்வு செய்தார். மேலும் அதிக கவனம் தேவைப்படும் கர்ப்பிணி தாய்மாருக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு மருத்துவ ஆலோசனைகள் வழங்கினார்.



தஞ்சாவூர் மாநகராட்சிக்குட்பட்ட கல்லுக்குளம், கரந்தை, மகர்நோம்புசாவடி மற்றும் சீனிவாசபுரம் ஆகிய 4 நான்கு நகர்புற சுகாதார நிலையங்களில் தற்போது கர்ப்பக்கால பரிசோதனைகளை மேற்கொண்டு வரும் 1081 கர்ப்பிணிகளில் 573 கர்ப்பிணிகள் உயர் இரத்த அழுத்தம், சர்க்கரை நோய், இரத்த சோகை, தைராய்டு மற்றும் முந்தைய பிரசவம் சிசேரியன் அறுவவை சிகிச்சை போன்ற அதிக கவனம் தேவைப்படும் கர்ப்பிணிகளாக கண்டறியப்பட்டு அவர்கள் கடந்த மார்ச் மாதம் முதல் சிறப்பாக இயங்கி வரும் தாய்சேய் நல மையத்தின் வழியாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

மேலும் நகர்புற ஆரம்ப சுகாதார செவிலியர்களுக்கு சிவப்பு நிறத்தில் குறிக்கப்பட்டிருந்த கர்ப்பிணிகளை தொடர்பு கொண்டு தொடர் பரிசோதனை மேற்கொள்ள அறிவுறுத்தி அவர்களை ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வரவழைத்து உரிய பரிசோதனைகள் மேற்கொண்டு சிவப்பு நிறத்தை பச்சை நிறமாக மாற்றிய விவரங்கள் மீண்டும் தாய்சேய் நல மையத்திற்கு அனுப்பி கண்காணிக்கப்படும்.

இவ்வாறு இந்த தாய்சேய் நல மையத்தின் மூலம் மாதம் இருமுறை அதிக கவனம் தேவைப்படும் கர்ப்பிணிகளை தொடர்பு கொண்டு முறையாக கர்ப்பகால கவனிப்பை கண்காணித்தல் மற்றும் பரிசோதனை மேற்கொள்ள ஊக்குவிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் தாய்சேய் நல கண்காணிப்பு மையத்திற்கு பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு துறை  கூடுதல் இயக்குநர் சேகர் திடீர் ஆய்வு மேற்கொண்டார். மேலும் ஆய்வின் போது தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையர் சரவணகுமார், மாநகர்நல அலுவலர் டாக்டர் சுபாஷ் காந்தி ஆகியோர் உடனிருந்தனர்.

ஆய்வின் போது கூடுதல் இயக்குனர் நேரடியாக தொலைபேசியில் தொடர்பு கொண்டு அதிக கவனம் தேவைப்படும் கர்ப்பிணி தாய்மாருக்கு மருத்துவ ஆலோசனைகள் வழங்கினார். ஆய்வின் முடிவில் தாய்சேய் நல கண்காணிப்பு மையத்தில் பணியாற்றி வரும் ஆர்த்தி, புவனேஸ்வரி, சிவாஜி, பாலாஜி மற்றும் பன்னீர் ஆகியோரை பாராட்டி ஆலோசனை கூறினார்.

இதுகுறித்து கர்ப்பிணிப் பெண்கள் தரப்பில் கூறுகையில், “தாய்சேய் நல கண்காணிப்பு மையத்தில் இருந்து தேவையான ஆலோசனைகள் அளிக்கப்படுகிறது. மேலும் கர்ப்பக்காலத்தில் எவ்வாறு செயல்படுவது, அச்சம் கொள்ளாமல் இருப்பது உட்பட பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்படுகிறது. இது மிகவும் பயன் அளிக்கிறது. மேலும் தொடர் பரிசோதனை மேற்கொள்ள அறிவுறுத்தி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வரவழைத்து உரிய பரிசோதனைகள் எடுக்கப்படுகிறது. இது எங்களை போன்ற கர்ப்பிணி பெண்களுக்கு மிகவும் பயன் அளிக்கிறது” என்று தெரிவித்தனர்.