தஞ்சாவூர்: தஞ்சாவூர் கரந்தையில் 1,400 ஆண்டுகள் பழமையான கருணாசுவாமி என்கிற வசிஷ்டேஸ்வரர் கோயில் குளம் ரூ.2.15 கோடி மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்டுள்ளது. இந்த பணிகளை மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி ஆகியோர் ஆய்வு செய்தனர்.



தஞ்சாவூர் கரந்தையில் கருணாசுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலின் கிழக்கு பகுதியில் சூரிய புஷ்கரணி என்கிற திருக்குளம் சுமார் ஐந்தரை ஏக்கர் பரப்பளவில் உள்ளது. பல ஆண்டுகளாக இக்கோயில் குளத்துக்கு வரும் நீர்வழிப் பாதை பல்வேறு ஆக்கிரமிப்புகளால் தடைபட்டதால் குளம் குட்டை போல் வரண்டு காணப்பட்டது. மேலும் குளத்தை சுற்றி பல இடங்களில் குடியிருப்புவாசிகள் குளக்கரையை ஆக்கிரமித்து இருந்தனர்.

இந்நிலையில் இக்குளத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி குளத்தை பராமரிக்க இப்பகுதி மக்கள் கடந்த 2019-ம் ஆண்டு தங்களுடைய சொந்த செலவில் குளத்தை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இதையடுத்து, அப்போது வடவாற்றிலிருந்து தண்ணீர் வரும் நீர் வழிப்பாதையை கண்டுபிடித்து அதனை சீரமைத்து தண்ணீர் கொண்டு வந்தனர்.

தொடர்ந்து, தஞ்சாவூர் மாநகராட்சி மூலம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.2.15 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது. பின்னர், குளம் முழுமையாக தூர்வாரப்பட்டு குளத்தை சுற்றி நான்கு கரையிலும் நடைபாதை, குளம் முழுவதும் சாய்வுத்தளம், சுற்றுச்சுவர், படித்துறை, அலங்கார மின் விளக்குகள், சாய்வு நாற்காலிகள், எவர்சில்வர் கைப்பிடிகள் ஆகியவை அமைக்கப்பட்டு வருகிறது.

மேலும் குளத்தின் தூர்வாரும் பணியின் போது கண்டுபிடிக்கப்பட்ட 9 சுடுமண் உறைகிணறுகளையும் பாதுகாக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.


இந்த பணிகளை மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி ஆகியோர் ஆய்வு செய்தனர். அப்போது அப்பகுதி பொதுமக்கள் குளத்தில் புனித நீரை நிரப்பி அதை பராமரிக்கும் வகையில் ஏற்பாடுகளை செய்ய வேண்டும். கோயிலுக்கு வந்து செல்லும் பக்தர்களுக்கு வசதியாக கழிவறை அமைத்து தர வேண்டும் என மேயரிடம் கோரிக்கை விடுத்தனர்.

பின்னர் மேயர் சண்.ராமநாதன் கூறியதாவது: தஞ்சாவூரில் 40 குளங்கள் உள்ளது. இதில் இதுவரை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் அய்யன்குளம், சாமந்தான் குளம், அழகி குளம் ஆகியவை புனரமைக்கப்பட்டுள்ளது. தற்போது கருணாசுவாமி கோயில் குளம் புனரமைக்கும் பணி 90 சதவீதம் முடிவடைந்துள்ளது. மேலும், கரந்தையில் ஜைன குளம், குஜிலியன் குளம் ஆகியவை புனரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

கருணாசுவாமி குளம் 1,400 ஆண்டுகள் பழமையானது என்பதால், இதன் புனிதத்தை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார்.

ஆய்வின் போது மாநகராட்சி செயற்பொறியாளர் ஜெகதீசன், பொறியாளர் கார்த்தி, மாநகராட்சி மண்டலத் தலைவர் புண்ணியமூர்த்தி, மாமன்ற உறுப்பினர் சுகந்தி துரைசிங்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.