தஞ்சாவூரில் மழை பெய்தால் தெற்கு வீதி, மேலவீதி உட்பட நான்கு வீதிகளிலும் தண்ணீர் தேங்கி போக்குவரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தி வந்தது. தண்ணீர் தேங்காமல் இருக்க வடிகால்களை புதிதாக கட்டும் பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.



தற்போது தஞ்சையில் தெற்குவீதி, மேலவீதி, வடக்கு வீதி, கீழ வீதிகளில் புதிய வடிகால் வாய்க்கால்கள் கட்டும் பணிகள் நடந்து வருகிறது. மேலும் தற்போதைய மழையால் சாலையில் தண்ணீர் தேங்கி போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டது. தொடர்ந்து இப்பணிகளை மாநகராட்சி மேயர் சண். ராமநாதன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மழைநீர் வடிகால் வாய்க்கால் பணிகள் மக்களுக்கு இடையூறாக உள்ளது என்று எழுந்த கோரிக்கையை அடுத்து இந்த ஆய்வுப்பணி மேற்கொள்ளப்பட்டது. 


 

மேலும் இதில் தெற்கு வீதி, கீழ ராஜ வீதி ஆகியவற்றில் போக்குவரத்து அதிகளவில் இருக்கும். மழை தண்ணீர் தேங்கினால் பலவித இடையூறுகள் ஏற்படுகிறது. எனவே வடிகால் அமைக்கும் பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து இருந்தனர்.

இதையடுத்து, இப்பணிகளை பார்வையிட்டு நெடுஞ்சாலைத்துறை அலுவலர்களிடம் மக்களுக்கு எந்தவித இடையூறும் இல்லாமல் பணிகளை துரிதமாய் செயல்படுத்த மேயர் சண். ராமநாதன் அறிவுறுத்தினார்.

போக்குவரத்துக்கும் பொதுமக்களுக்கும் இடையூறு இல்லாமல் பணிகளை செய்யவும் ஆலோசனைகள் வழங்கினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: தஞ்சை நகரின் மையப்பகுதியான தெற்குவீதி, மேலவீதி, வடக்கு வீதி, கீழவீதி ஆகிய 4 வீதிகளிலும் ஆயிரக்கணக்கான கடைகள், வணிக நிறுவனங்கள், வங்கிகள் உள்ளன.

இந்த 4 வீதிகளிலும் மழை பெய்தால் நீர் வடிய இரு புறமும் வடிகால் வாய்க்கால் இருந்த நிலையில், சிலர் வாய்க்கால்களை முழுமையாக ஆக்கிரமித்து கட்டிடங்கள், வாசல் படிகள் உள்ளிட்ட கட்டிடங்களை கான்கிரீட்டால் கட்டியதால் மழைநீர் வடிய வழியில்லாமல் சாலைகளிலேயே தண்ணீர் தேங்கி கிடந்தது.

இதையடுத்து நீதிமன்ற உத்தரவுப்படி நெடுஞ்சாலை துறையும், மாநகராட்சியும் இணைந்து ஆக்கிரமிப்புகளை அகற்றிய நிலையில் ரூ.12 கோடி செலவில் மீண்டும் புதிய மழைநீர் வடிகால்கள் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. பணிகள் நடைபெறும் போது கழிவு நீரினை சாலைகளில் விடாமல், குழாய் மூலம் மற்ற பகுதிகளுக்கு கொண்டு செல்ல அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

மழைக் காலம் வருவதற்குள் வடிகால் வாய்க்கால் கட்டும் பணிகள் துரிதமாக்கப்பட்டு உள்ளது. தேரோடும் 4 வீதிகளிலும் மின்கம்பங்களை அகற்றிவிட்டு, பைபர் மின்வயர்களை பூமிக்குள் புதைக்கும் திட்ட பணிகள் ரூ.16 கோடி நிதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் விரைவில் தொடங்கப்பட உள்ளது . இவ்வாறு அவர் கூறினார்.

ஆய்வின் போது மாநகராட்சி பொறியாளர் ஜெகதீசன், துணை பொறியாளர் கார்த்தி, நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.