Thanjavur : போக்குவரத்துக்கு இடையூறாக உணவுக்கடைகள்... அதிரடியாக அகற்றிய நெடுஞ்சாலைத்துறை
Thanjavur : உணவுக்கடைகள் அமைந்திருந்த பகுதியில் சாப்பிட வருபவர்கள் சாலையில் தங்களது வாகனங்களை நிறுத்துவதால் போக்குவரத்துக்கு பெரும் இடையூறு ஏற்பட்டு வந்தது.

தஞ்சாவூர்: என்னங்க இது... தரைக்கடை உணவகங்களால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுதுங்க என்ற பொதுமக்களின் கோரிக்கைக்கு உடனடியாக நெடுஞ்சாலைத்துறையினர் அதிரடி நடவடிக்கை எடுத்து இருக்காங்க. எந்த பகுதியில் தெரியுங்களா? தஞ்சாவூர் சரபோஜி கல்லூரி சாலையில்யில்தான் ஆக்கிரமிப்புகள் அகற்றம் செய்யப்பட்டுள்ளது.
தரைக்கடை உணவங்களால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டதை தொடர்ந்து, தஞ்சாவூர் சரபோஜி கலைக் கல்லூரி சாலையில் இருந்த ஆக்கிரமிப்புகளை நெடுஞ்சாலைத்துறையினர் அகற்றினர்.
தஞ்சாவூரில் நெ.1 வல்லம் சாலையில் சரபோஜி அரசினர் கலைக் கல்லூரி அமைந்துள்ளது. இந்த சாலையில் கல்லூரி அருகே காலை முதல் இரவு வரை தரைக்கடைகள் அமைத்தும், நடமாடும் வாகனங்கள் மூலமும் சிற்றுண்டிகள், பிரியாணி, குல்பி ஐஸ்கிரீம், சிக்கன் உணவுகள், பானிபூரி என ஏராளமான உணவு வகைகள், துணி, பிளாஸ்டிக் பொருட்கள் வியாபாரம் என பல்வேறு பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: Chennai Puducherry ECR Road: சென்னை டூ புதுச்சேரி, டெலிவரிக்கு தயாரான ஈசிஆர் 4 வழிச்சாலை, நோ ட்ராஃபிக், 90 நிமிடங்கள் தான்..!

இதில் உணவுக்கடைகள் அமைந்திருந்த பகுதியில் சாப்பிட வருபவர்கள் சாலையில் தங்களது வாகனங்களை நிறுத்துவதால் போக்குவரத்துக்கு பெரும் இடையூறு ஏற்பட்டு வந்தது. இந்த பகுதி எப்போதும் போக்குவரத்து நிறைந்த பகுதி என்பதும் குறிப்பிடத்தக்கது.
புதிய பேருந்து நிலையத்திற்கு கும்பகோணம், மன்னார்குடி, திருவாரூர், வேளாங்கண்ணி, நாகை பகுதியில் இருந்து வரும் பஸ்கள், கார்கள், இருசக்கர வாகனங்கள் செல்லும் சாலையாகும். இந்த சாலை போக்குவரத்திற்காக சமீபத்தில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் அகலப்படுத்தப்பட்டது. இந்நிலையில் இந்த பகுதியில் இரவு நேர உணவகங்களால் போக்குவரத்தில் பெரும் இடையூறு ஏற்பட்டது.
இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறைக்கு புகார்கள் சென்றதை அடுத்து, இரு தினங்களுக்கு முன் ஆட்டோ ஒலிபெருக்கி மூலம் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என நெடுஞ்சாலைத்துறை சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இதையும் படிங்க: கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி வழக்கில் திடீர் திருப்பம்; சிக்கிய விசிக நிர்வாகி... பகீர் கிளப்பும் கனியாமூர் வழக்கு!
இதையடுத்து நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் கீதா தலைமையில் பொக்லைன் இயந்திரம் மூலம் சரபோஜி கல்லூரி அருகே ஆக்கிரமிக்கப்பட்டிருந்த தற்காலிக கடைகள் அனைத்தும் அகற்றப்பட்டன. இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறுகையில், தஞ்சாவூர் மணிமண்டபம் முதல் டான்டெக்ஸ் ரவுண்டானா வரை நெ.1 வல்லம் சாலையில் பல இடங்களில் சாலையோர ஆக்கிரமிப்புகள் உள்ளது. குறிப்பாக சரபோஜி கல்லூரி பகுதியில் சிற்றுண்டிகள், உணவு கடைகளால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதாக வந்த புகாரினை அடுத்து ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி தொடங்கியுள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.