தஞ்சாவூர்: தஞ்சை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் வாயிலாக வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் பயன்பெற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


இதுகுறித்து தஞ்சை மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தஞ்சை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் வாயிலாக வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் பயன்பெற வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 30.6.2023 அன்றைய தேதியில் 5 வருடம் முடிவடைந்தவர்கள், முறையாக பள்ளியில் 9-ம் வகுப்பு பயின்று 10-ம் வகுப்பு தேர்ச்சி பெறாத மற்றும் தேர்ச்சி பெற்றவர்கள், பிளஸ்-2 தேர்ச்சி, பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்ற பதிவுதாரர்கள் அனைவரும் தகுதி உடையவர்கள் ஆவர்.

மாற்றுத்திறனாளிகளை பொறுத்தவரை எழுதப்படிக்க தெரிந்தவர் முதல் 10-ம் வகுப்பு, பிளஸ்-2 மற்றும் பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்று பதிவு செய்து 30.6.2023 அன்று ஓராண்டு முடிவடைந்த பதிவுதாரர்கள் தகுதி உடையவர்கள் ஆவர். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின பிரிவினர் 45 வயதுக்குள்ளும், இதர பிரிவினர் 40 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும்.

அதிகபட்ச குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு வருமான உச்சவரம்பு கிடையாது. பயனாளிகள் எந்த ஒரு கல்வி நிறுவனத்திலும் படிப்பவராக இருக்கக்கூடாது. இந்த தகுதிகளை உடையவர்களுக்கு தமிழக அரசால் உதவித்தொகை வழங்கப்படுகிறது.

10-ம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்களுக்கு ரூ.200-ம், தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.300-ம், பிளஸ்-2 தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.400-ம், பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.600-ம், அனைத்து வகை மாற்றுத் திறனாளிகளில் எழுதப்படிக்க தெரிந்த மற்றும் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.600-ம், மேல்நிலை வகுப்பு தேர்ச்சி பெற்றோருக்கு ரூ.750-ம், பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றவருக்கு ரூ.1,000-மும் வழங்கப்படுகிறது.

ஏற்கனவே 3 ஆண்டுகள் உதவித்தொகை பெற்றவர்கள் மற்றும் பொறியியல் பட்டப்படிப்பு, மருத்துவம், விவசாயம், சட்டம் போன்ற தொழில் பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு வேலை வாய்ப்பற்ற உதவித்தொகை வழங்க இயலாது. தகுதியுடைய பதிவுதாரர்கள் வேலை வாய்ப்பு அலுவலக அடையாள அட்டை, பள்ளி, கல்லூரி அசல் மாற்றுச்சான்றிதழ், அசல் குடும்ப அட்டை ஆகியவற்றுடன் நேரில் வருகை புரிந்து விண்ணப்பப் படிவத்தை தஞ்சை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இலவசமாக பெற்று கொள்ளலாம். இவ்வாறு மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகைத்‌ திட்டத்தின்‌ கீழ்‌ இளைஞர்கள் வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும்‌ தொழில்நெறி வழிகாட்டு மையத்தில்‌ பதிவு செய்து தற்போது வரை இருக்கும் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவி தொகை வழங்கப்படுகிறது.