தஞ்சாவூர்: பொதுமக்கள் குறை தீர் கூட்டத்திற்கு பள்ளி மாணவ, மாணவிகளுடன் மனு கொடுத்த வந்தவர்களை லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கி கடும் எச்சரிக்கை விடுத்தார் மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம்.


பொதுமக்கள் குறைதீர் கூட்டம்


தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறை தீர் கூட்டம் நடந்தது. இதில் தலைமை வகித்து மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றுக் கொண்டிருந்தார். அப்போது தங்கள் பகுதிக்கு பஸ் வசதி கோரி வடுகன் புதுப்பட்டி பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பள்ளி மாணவ, மாணவிகளுடன் மனு கொடுக்க வந்தனர்.




மாணவ, மாணவிகளை பார்த்தவுடன் டென்ஷன்


இதைப் பார்த்த கலெக்டர் பிரியங்கா பங்கஜம் கோபமடைந்தார். படிக்கும் மாணவ, மாணவிகளை அவர்களின் படிப்பை கெடுக்கும் விதத்தில் மனு கொடுக்க அழைத்து வருவது சரியானது அல்ல. முதலில் அவர்களை பள்ளிக்கு அழைத்துச் செல்லுங்கள் பின்னர் வந்து மனு கொடுங்கள் என்று லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கினார். இதுபோல் மீண்டும் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்தார். கலெக்டரின் இந்த அதிரடி முகம் கண்டு மனு கொடுக்க வந்தவர்கள் விரைவாக அங்கிருந்து வெளியேறினர்.


இந்த சம்பவம் முடிந்த அடுத்த சில நிமிடங்களில் தஞ்சாவூர் மாநகராட்சி இரண்டாவது வார்டு பகுதியை சேர்ந்த கவுன்சிலர் ஐயப்பன் தலைமையில் அப்பகுதியை சேர்ந்த மக்கள் பள்ளி மாணவ, மாணவிகளை சீருடையுடன் அழைத்து வந்து மனு அளித்தனர். மீண்டும் மாணவ, மாணவிகளுடன் மற்றொரு தரப்பினர் வந்ததால் மிகவும் டென்ஷனான கலெக்டர் சரமாரியாக கேள்விகள் எழுப்பினார்.


நோட்டீஸ் வரும் பார்த்துக் கொள்ளுங்கள்


மனு கொடுக்க வரும் நீங்கள் எதற்காக படிக்கும் மாணவ, மாணவிகளை அழைத்து வருகிறீர்கள். அவர்களின் படிப்பை வீணாக்குகிறீர்கள். இது தப்பான விஷயம். சட்டப்படி குற்றம். உங்கள் கோரிக்கை மனு மீது நான் நடவடிக்கை எடுக்கிறேன்..ஆனால் இவ்வாறு பள்ளி மாணவ, மாணவிகளை பள்ளி நேரத்தில் அழைத்து வருவது சரியான முறை அல்ல. இதற்காக உங்களுக்கு (கவுன்சிலர் ) இன்று நோட்டீஸ் அனுப்பப்படும். இதே போல் மீண்டும் செய்தால் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார்.


இனிமேல் இதுபோல் நடந்தால் கடும் நடவடிக்கை


பள்ளி மாணவ, மாணவிகள் வந்தால் மனு மீது கூடுதல் கவனம் செலுத்துவார்கள் என நினைத்தார்களோ என்னவோ இது போன்ற சம்பவம் அடிக்கடி நடந்து வந்த நிலையில் கலெக்டர் பிரியங்கா பங்கஜத்தின் இந்த அதிரடி  நடவடிக்கை குறைதீர் கூட்டத்திற்கு வந்திருந்த மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.