தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோயில் சித்திரை தேர் திருவிழாவை முன்னிட்டு மேலவீதியில் உள்ள தேர் முட்டியில் பந்தக்கால் முகூர்த்த விழா நடந்தது. மேலும் வரும் 20ம் தேதி தேர்த் திருவிழாவை ஒட்டி தஞ்சை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
.
தஞ்சை பெரிய கோவில் உலக பிரசித்தி பெற்ற கோவிலாகும். இது தமிழர்களின் கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாக திகழ்வதோடு உலக பாரம்பரிய சின்னமாகவும் விளங்கி வருகிறது. இங்கு பெருவுடையார், பெரியநாயகி, வராகி, நந்தியம்பெருமான், விநாயகர், முருகன், தட்சிணாமூர்த்தி, சண்டீகேஸ்வரர், நடராஜர், கருவூரார் உள்ளிட்ட சன்னதிகள் உள்ளன.


ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்த தஞ்சை பெரியகோவில் தேரோட்டம் நான்கு ராஜவீதிகளில் வலம் வந்ததாக  வரலாற்று ஆவணங்கள் தெரிவிக்கின்றன. இடையில் காலப்போக்கில் நின்று போன தேர் திருவிழாவினை மீண்டும் தஞ்சையை ஆண்ட மராட்டிய மன்னர்கள்  நடத்தினர். நாளடைவில் தேரோட்டம் நின்று போய்விட்டது. கிட்டத்தட்ட  100 ஆண்டுகள் ஓடாமல் இருந்த தேர் மீண்டும் புதுப்பிக்கப்பட்டு தொடர்ந்து சித்திரை மாதத்தில் தேர் திருவிழா நடந்து வருகிறது.

தஞ்சை பெரியகோவிலில் நடைபெறும் விழாக்களில் சித்திரை திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறும். இந்த விழா 15 நாட்கள் நடைபெறும். அதன்படி கடந்த  6ம் தேதி சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.




விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 20ம் தேதி நடைபெறுகிறது. அன்று காலை 6.30 மணிக்கு மேல் 7.30 மணிக்குள் தேர் வடம்பிடித்து இழுக்கப்படுகிறது..
,
இந்த தேர் தரையில் இருந்து சிம்மாசனம் மட்டம் வரை 3 நிலைகளாக 16½ அடி உயரம் கொண்டது. இந்த 3 நிலைகளிலும் மொத்தம் 231 பொம்மைகள் இடம் பெற்றுள்ளன. சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு தேரை சுத்தம் படுத்தும் பணிகள் மும்முரமாக நடந்து வந்தன.

தொடர்ந்து தேரோட்டத்தையொட்டி தேர் அலங்கரிப்பதற்கான பந்தக்கால் முகூர்த்தம் இன்று நடந்தது. இதையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தது. பின்னர் பந்தக்காலுக்கு மஞ்சள், பால், திரவிய பொடி, பன்னீர் உட்பட பல அபிஷேகங்கள் நடத்தப்பட்டு தீபாராதனை நடந்தது.

இதையடுத்து மாலை  அணிவிக்கப்பட்டு பந்தக்கால் ஊன்றப் பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.

தஞ்சை மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை

தஞ்சாவூர் பெரிய கோயில் சித்திரை தேர்த்திருவிழாவினை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் தேரோட்டத்தன்று  உள்ளூர் விடுமுறை அறிவித்து ஆணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, இவ்வாண்டு கொண்டாடப்படவுள்ள சித்திரை தேர்த்திருவிழாவினை முன்னிட்டு வரும் 20.04.2024 (சனிக்கிழமை) அன்று ஒருநாள் மட்டும் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவித்து ஆணை வழங்கப்பட்டுள்ளது என தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் தீபக் ஜேக்கப் தெரிவித்துள்ளார்.