தஞ்சாவூர்: திருவையாறு அருகே வடுகக்குடி, சாத்தனூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நேற்று மாலை சூறாவளி காற்றுடன் கனமழை கொட்டியது. இதனால் ஆயிரக்கணக்கான வாழைமரங்கள் முறிந்து விழுந்து சேதமடைந்தது. இதனால் வாழை விவசாயிகள் பெரும் வேதனையில் உள்ளனர்.

Continues below advertisement

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு சுற்றுவட்டார பகுதியான வடுகக்குடி சாத்தனூர், வளப்பகுடி , மருவூர் ஆகிய பகுதிகளில் நெல்லுக்கு அடுத்த படியாக வாழை சாகுபடி அதிக அளவில் செய்யப்படும். பல ஏக்கர் பரப்பளவில் வாழை மரங்கள் சாகுபடி செய்யப்பட்டு இருந்தன.

இதில் பெரும்பாலான வாழை மரங்கள் இன்னும் 20 நாட்களில் அறுவடை செய்யப்படுவதாக இருந்தது. இந்த நிலையில் வடுகக்குடி, சாத்தனூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நேற்று மாலை சூறாவளி காற்றுடன் கனமழை கொட்டியது. இடைவிடாமல் பெய்த கனமழையால் சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடின. சூறாவளி காற்று தொடர்ந்து வீசியதால் அறுவடைக்கு தயாராக இருந்த ஆயிரக்கணக்கான வாழை மரங்கள் முறிந்து வேரோடு சாய்ந்தன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்தனர். 

Continues below advertisement

கஷ்டப்பட்டு கடன் வாங்கி சாகுபடி செய்த வாழை மரங்கள் இப்படி சேதம் ஆகிவிட்டதே என எண்ணி வேதனை அடைந்தனர். பல விவசாயிகள் சாய்ந்த வாழை மரத்தை பார்த்து அழுதது பலரையும் வேதனைப்பட வைத்தது.

இது குறித்து வாழை விவசாயிகள் தரப்பில் கூறுகையில், எங்கள் பகுதியில் வாழை மரங்கள் அதிகளவில் சாகுபடி செய்யப்படும். தற்போது வாழை மரங்கள் ஆயுத பூஜையை முன்னிட்டு அறுவடை செய்யப்படுவதாக இருந்தது. ஆனால் முதலீடு தொகை எடுக்கும் நேரத்தில் சூறாவளி காற்றால் வாழை மரங்கள் முறிந்து விழுந்து விட்டன. இதுபோன்று பருவ மழை பெய்யும் காலங்களில் தொடர்ந்து நஷ்டம் ஏற்பட்டு வருகிறது. 

ஆண்டுதோறும் இது போன்று நடைபெறுவதனால் நெல்லுக்கு பயிர் காப்பீடு செய்வது போல வாழைக்கும் காப்பீடு செய்வதற்கு வழிவகை செய்து தர வேண்டும். மேலும் தோட்டகலைத்துறை அதிகாரிகள் சேதமடைந்த வாழை மரங்களை கணக்கிட்டு இழப்பீடு அறிக்கை தாக்கல் செய்த அரசுக்கு வழங்க வேண்டும். உடனடியாக இழப்பீடு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

தீக்காயம் பட்டவர்களை வாழையிலையில் படுக்க வைத்து மேலாக ஒரு வாழையிலையை போர்த்துவார்கள். இது காயத்தின் வெப்பத்தை தணித்து குளிர்வுபடுத்தும். இப்படி உயிரை காத்து வாழ வைக்கும் தன்மையைக் கொண்டதால் வாழை என்று பெயர் வந்தது என்று கூறுவார்கள். 

வாழையை போல் வாழ வைக்கவும் முடியாது...அழிக்கவும் முடியாது என்றும் கூறுவார்கள். இயற்கையின் பேரிடர்களை தாங்கும் சக்தி வாழைக்கு கிடையாது. பெரும் காற்றோ, அதிக மழையோ எளிதாக வாழையை முறித்துவிடும்.

இப்படிப்பட்ட வாழைதான் வாழ்க்கை என்று வாழையை மட்டும் நம்பி பயிரிட்டு வரும் விவசாயிகளுக்கு இந்த நஷ்டம் பெரும் ோகத்தை தான் ஏற்படுத்தி உள்ளது. திருவையாறு பகுதியில் சாகுபடி செய்யப்படும் வாழை இலைகள் சென்னை, தஞ்சாவூர், ஒரத்தநாடு, மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி, திருச்சி என்று பல்வேறு மாவட்டங்களுக்கும் அனுப்பப்படுகிறது. இப்படி எத்தனை நஷ்டம் வந்தாலும் மீண்டும், மீண்டும் வாழையை மட்டுமே நம்பி சாகுபடி மேற்ொள்ளும் விவசாயிகளுக்கு உரிய நிவாரணத்தை அரசு வழங்க வேண்டும் என்பதுதான் எதிர்பார்ப்பாக உள்ளது.