காவிரி நதி நீர் மேலாண்மையை பிரதமர் மோடி 2018 ஜூன் 1 ம் தேதி அமைத்த பின்னர் தான் காவிரி நீர் பங்கீடு பிரச்சினை இல்லாமல் போய்கொண்டிருக்கிறது. இந்தியாவில் பிறமாநிலங்களை விட தமிழகத்தில் விவசாயிகளின் சராசரி ஆண்டு வருமானம் குறைவாகவே உள்ளது. இதுதான் திராவிட மாடல் ஆட்சியா என்று கேள்வி மேல் கேள்வியாக எழுப்பினார் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை.



தஞ்சாவூரில்  தமிழ்நாடு விவசாய தமிழர் விழிப்புணர்வு நலச்சங்கம் சார்பில், டெல்டா பகுதியில் நிலக்கரி சுரங்க ஒப்பந்தத்துக்கு அனுமதியை ரத்து செய்ய வைத்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு நன்றி மற்றும் பாராட்டு விழாக்கூட்டம் நேற்று நடைபெற்றது.

இதில் பாஜக மாநிலப் பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம், விவசாய பிரிவு மாநிலத் தலைவர் நாகராஜன் மற்றும் விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் சத்தியநாராயணன், சேரன், சேதுராமன், ரவிச்சந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இதில் கலந்து கொண்டு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசியதாவது: காவிரி நதி நீர் மேலாண்மையை பிரதமர் மோடி 2018 ஜூன் 1 ம் தேதி அமைத்த பின்னர் தான் காவிரி நீர் பங்கீடு பிரச்சினை இல்லாமல் இருந்து வருகிறது.

கடந்த 2011 ம் ஆண்டு தமிழ்நாடு துணை முதலமைச்சராக இருந்த மு.க.ஸ்டாலின்தான் மீத்தேன் எடுக்கும் திட்டத்தில் கையெழுத்து போட்டவர். அப்போது மன்னார்குடி பகுதியில் செய்யப்பட்ட ஆய்வின்படிதான் நிலக்கரி எடுக்க கடந்த மார்ச் 29ம் தேதி அறிவிப்பு வெளியானது. உடனடியாக மத்திய அமைச்சரை தொடர்பு கொண்டு, நிலக்கரி எடுத்தால் விவசாயம் பாதிக்கப்படும் என எடுத்துக் கூறியதை அடுத்து ஏப்.5ம் தேதி நிலக்கரி எடுக்கும் திட்டம் ரத்து செய்யப்பட்டது.

ஆனால் டெல்டாக்காரன் என சிலர் கூறிக் கொள்கிறார்கள். உண்மையான டெல்டாக்காரன் யார் என்றால் நம்மாழ்வார், எம்.எஸ்.சுவாமிநாதன், உ.வே.சா, சிவாஜிகணேசன் ஆகியோர்தான். இவர்கள்தான் விவசாயிகளுக்கு துணை நின்றவர்கள். அதே போல் இங்குள்ள விவசாயிகளும் டெல்டாகாரர்கள்தான். ஆனால் இங்குள்ள விவசாயிகளுக்கு எந்த வசதியும் செய்து தராமல் நானும் டெல்டாக்காரன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறுவதை எப்படி ஏற்க முடியும்.

1960 ம் ஆண்டு தமிழகத்தில் பாசன கால்வாய்கள் மூலம் சாகுபடி நிலப்பரப்பு 11 சதவீதமாக இருந்து 2023 ல் 3.4 சதவீதமாக குறைந்துள்ளது. அதாவது கால்வாய் மூலம் 9 லட்சம் ஹெக்டேரிலிருந்து 6 லட்சம் ஹெக்டேராக குறைந்துள்ளது. அதே போல் நீர்த்தேக்கமான குளம், ஏரி மூலம் பாசன பரப்பு 9.41 லட்சம் ஹெக்டேரிலிருந்து 3.69 லட்சம் ஹெக்டேராக குறைந்துள்ளது.1960 ல் 61 லட்சம் ஹெக்டேராக இருந்த பாசன பரப்பு கடந்த 63 ஆண்டுகளில்  45 லட்சம் ஹெக்டேராக மாறி, 16 லட்சம் ஹெக்டேர் பாசன பரப்பு குறைந்துள்ளது. இதுதான் திராவிட மாடல் ஆட்சியின் சாதனையா..?

அதேபோல் இந்தியாவில் பிறமாநிலங்களை விட தமிழகத்தில் விவசாயிகளின் சராசரி ஆண்டு வருமானம் குறைவாகவே உள்ளது. ஆனால் குஜராத் மற்றும் கர்நாடகாவில் ஆண்ட பாஜக தலைமையிலான அரசுகள் விவசாயிகளுக்கு ஏராளமான திட்டங்களை வழங்கி விவசாயிகளுக்கு நன்மைகளை செய்து வருகிறது.
ஆனால் தமிழகத்தில் உள்ள விவசாயிகள் மாத்தி யோசித்து அரசியல் சிந்தனை பெற வேண்டும். தமிழகத்தில் டாஸ்மாக் சாராயத்தின் விற்பனையை உயர்த்த எடுக்கும் முயற்சியை கூட விவசாயத்துக்கு இந்த தமிழக அரசு முயற்சிகள் எதுவும் எடுக்கவில்லை. இதனை விவசாயிகள் உணர வேண்டும்.

டெல்டாவில் பாஜகவைச் சேர்ந்த எம்பி, எம்எல்ஏக்கள் யாரும் இல்லை. ஆனாலும் நாங்கள் தொடர்ந்து இப்பகுதியில் உள்ள விவசாயிகளுக்காக பாடுபட்டு வருகிறோம். வருங்காலத்தில் டெல்டாவிலிருந்து ஒரு எம்பியாவது தேர்வு செய்யப்பட வேண்டும். அதற்கு விவசாயிகள் ஒத்துழைப்பு தர வேண்டும் என்றார்.