தஞ்சாவூர் அன்னை சத்யா விளையாட்டு அரங்கில், ரூ.7.85 கோடி மதிப்பீ்ட்டில் அமைக்கப்படும் சர்வதேச கால்பந்து மைதானத்திற்கான, அடித்தளம் அமைக்க கட்டிடங்களின் கழிவுகளை கொட்டுவதற்கு, மூத்த கால்பந்தாட்ட வீரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தஞ்சாவூரில் அன்னை சத்யா விளையாட்டு மைதானம் உள்ளது. இங்கு சர்வதேச அளவிலான செயற்கை தடகள ஓடுதளம் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த தடதள ஓடுதளத்தின் அருகே, சர்வதேச அளவிலான கால்பந்தாட்ட மைதானமும் அமைக்க மத்திய இளைஞர் நலம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சகம் ரூ.7.85 கோடி நிதியை ஒதுக்கியுள்ளது.


இந்த நிலையில் மைதானத்தில் அடித்தளம் அமைக்க செம்மண், கிராவல், மணல் ஆகியவற்றை கொட்டி சமதளம் அமைப்பதற்கு பதிலாக, தஞ்சாவூர் மேலவீதி, பழைய பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில் ஆக்கிரமிப்பு அகற்றியதில் இடிக்கப்படும் கட்டிடங்களின் கழிவுகளை லாரிகளில் கொண்டு வந்து குவிக்கப்பட்டுள்ளது. இதற்கு தஞ்சாவூரில் உள்ள மூத்த கால்பந்தாட்ட  வீரர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து, பணிகளை நிறுத்துமாறு அரசுக்கு கோரிக்கை மனுக்களை அனுப்பியுள்ளனர்.


இதுகுறித்து தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் ஓய்வு பெற்ற மண்டல மூத்த மேலாளர் மோகன் கூறுகையில், தஞ்சாவூரில் அன்னை சத்யா விளையாட்டு மைதானத்தில் சர்வதேச அளவிலான தடகள ஓடுதளமும், கால்பந்தாட்ட மைதானமும் அமைக்க மத்திய அரசு நிதி ஒதுக்கியுள்ளது. ஆனால், இந்த பணியை மேற்பார்வையிட, ஆலோசனைகளை வழங்க அனுபவம் பெற்ற நிபுணர் குழுக்கள் ஏதும் அமைக்கப்படவில்லை. இதனால் கால்பந்தாட்ட மைதானம் அமைக்க அதற்கான அடிப்படை கட்டமைப்புகளை மேற்கொள்ளாமல், மைதானத்தில் இடிக்கப்படும் கட்டிடங்களின் கழிவுகளை கொண்டு வந்து குவித்து வைத்துள்ளனர்.




இதில் கண்ணாடி பாட்டில்கள், டைல்ஸ் ஓடுகள், பீங்கான் போன்றவை அதிகளவு காணப்படுகிறது. இதை சமப்படுத்தி அதில் மைதானம் அமைத்தால் தரமில்லாமல் போகும். மழைக்காலங்களில் மேல கொட்டப்படும் மண் கரைந்தால், அடியில் உள்ள கண்ணாடிகள் போன்ற கூர்மையான பொருட்கள், வீரர்களில் கால்களில் குத்தி படுகாயம் ஏற்படும். எனவே இந்த பணியை உடனடியாக நிறுத்தி, நிபுணர் குழுவை அமைத்து பணிகளை தரமாக அமைக்க வேண்டும் என்றார்.


இதுகுறித்து அன்னை சத்யா விளையாட்டு மைதானத்தின் அதிகாரிகள் கூறுகையில், சர்வதேச ஓடுதளம், கால்பந்தாட்ட மைதானம் அமைக்க ஒப்பந்த பணிகளை எடுத்தவர்கள், கட்டிடங்களின் கழிவுகளை கொண்டு வந்து தரையை சமப்படுத்துவதற்காக கொட்டியுள்ளனர். இதுதொடர்பாக புகார்கள் விளையாட்டு வீரர்களிடமிருந்து வந்துள்ளது. நாங்கள் மாவட்ட உயர் அதிகாரிகளுக்கும், தமிழக அரசுக்கும் தெரியப்படுத்தியுள்ளோம் என்றனர்.