தஞ்சை அன்னை இந்திரா நகர் பகுதியில் வீட்டு சுற்றுச்சுவரில் அமைக்கப்பட்டு இருந்த அம்மன் கோயிலில் சிலையில் அணிவிக்கப்பட்டு இருந்த தங்கச்சங்கிலியை திருடிச் சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.


தஞ்சை அன்னை இந்திரா நகரை சேர்ந்தவர் செல்வராஜ் (65). இவர் தன்னுடைய வீட்டின் சுற்று சுவரில் சிறிய கோவில் வைத்துள்ளார். அந்த கோயிலில் அம்மனுக்கு 6 கிராம் தங்க சங்கிலி அணிவித்து வழிபட்டு வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று சுற்றுச்சுவர் கோயிலில் அம்மன் கழுத்தில் இருந்த தங்க சங்கிலியை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் பல்வேறு இடங்களில் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை. இதுகுறித்து தஞ்சை தாலுகா போலீசில் செல்வராஜ் புகார் செய்தார். இதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தங்க சங்கிலியை திருடி சென்ற மர்மநபர்களை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் தஞ்சை நகர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.




தஞ்சை அருகே வாய்க்காலில் மிதந்து வந்த பெண் பிணம் அடையாளம் தெரிந்தது.

தஞ்சை ஆர்சுத்திப்பட்டு வாய்க்காலில் சம்பவத்தன்று பெண் பிணம் ஒன்று மிதந்து வந்தது. இதுகுறித்து தகவலறிந்த தஞ்சை தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அந்த உடலை மீட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும், இதுகுறித்து விசாரணை நடத்தி வந்தனர். இதில் தஞ்சை பொன்நகர் வாலிதெருவை சேர்ந்தவர் பாக்கியம் (54)  என்பவர், சம்பவத்தன்று வாய்க்காலில் குளிக்க சென்றதும், பின்னர் வீட்டுக்கு வரவில்லை என்பதும் தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் தஞ்சை மருத்துவக்கல்லூரிக்கு பாக்கியத்தின் உறவினர்களை அழைத்துச் சென்றனர். தொடர்ந்து வாய்க்காலில் மிதந்து வந்த பெண் உடலை காட்டி அது பாக்கியம்தானா என்று அடையாளம் காட்ட கூறினர். தொடர்ந்து பாக்கியத்தின் உறவினர்கள் அது பாக்கியம்தான் என்று உறுதி செய்தனர். இதில் வாய்க்காலில் பிணமாக மிதந்து வந்தது பாக்கியம் என்பதும் தெரிய வந்தது. வாய்க்காலில் குளிக்கச் சென்ற பாக்கியம் தவறி விழுந்து இறந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.



பட்டாணிக்கடையில் தீ விபத்து

 

தஞ்சை கீழவாசல் பகுதியில் பட்டாணி மொத்த விற்பனை கடை நடத்தி வருபவர் காமராஜ். தஞ்சை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளை சேர்ந்த சிறு கடைக்காரர்கள், வியாபாரிகள் இங்கு வந்து பட்டாணி உட்பட தின்பண்டங்களை வாங்கிச் சென்று விற்பனை செய்வது வழக்கம். வழக்கம் போல் நேற்று இரவும் காமராஜ் விற்பனையை முடித்து கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றுவிட்டார்.

இன்று காலை 6 மணிக்கு கடையில் இருந்து புகை வந்துள்ளது. உடன் அக்கம்பக்கத்தினர் காமராஜூக்கு தகவல் தெரிவித்தனர். அவர் உடனடியாக கடைக்கு வந்து திறந்து பார்த்த போது கடையில் இருந்த பொருட்கள் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது. இதுகுறித்து தஞ்சை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைத்தனர். இதில் கடையில் இருந்து கடலைமிட்டாய், பட்டாணி, நிலக்கடலை உள்ளிட்ட தின்பண்டங்கள், மேஜை, நாற்காலி, பேட்டரி உள்ளிட்டவை எரிந்து நாசம் ஆனது. சேதமதிப்பு ரூ.5 லட்சத்திற்கும் மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது.