தஞ்சாவூர் அருகே மருத்துவமனைக்கு சென்றவர்கள் காரும், கோவிலுக்கு சென்றவர்கள் காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் தாய், மகன் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.



தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே வங்காரம்பேட்டையைச் சேர்ந்தவர் தங்கராஜ். இவரது மனைவி வசந்தா (65). இவர்களின் மகன் செந்தில்குமார் (50). மகள் ராணி (44). செந்தில்குமார் இன்ஜினியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் தனது தாய் வசந்தாவின் உடல்நிலை பாதிக்கப்பட்டதால் செந்தில்குமாரும், ராணியும் தஞ்சாவூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க நேற்றுமுன் தினம் காரில் அழைத்து வந்தனர். செந்தில்குமார் காரை ஓட்டி வந்தார்.

இதே போல் திருச்சி துவாக்குடி என்ஐடி காலனியைச் சேர்ந்த ஜெயப்பிரகாஷ் என்பவரின் மகன் கிருபாகரன் (34), அவரது மனைவி வரலட்சுமி (26), இவர்களது 8 மாத பெண் குழந்தை ஸ்மிருதி, கிருபாகரனின் தாய் யசோதா (63) ஆகியோர் அங்கிருந்து பாபநாசம் அருகே திருக்கருகாவூர் கோயிலுக்கு செல்வதற்காக தஞ்சை மார்க்கமாக காரில் சென்று கொண்டிருந்தனர். இந்த காரை திருச்சி துவாக்குடியைச் சேர்ந்த ராமலிங்கம் என்பவரின் மகன் விஜயேந்திரன் என்பவர் ஓட்டி வந்தார்.

தஞ்சை அருகே நாகை சாலை புலவர்நத்தம் என்ற பகுதியில் செந்தில்குமார் ஓட்டி வந்த காரும், விஜயேந்திரன் ஓட்டி வந்த காரும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இதில் செந்தில்குமார், அவரது தாயார் வசந்தா ஆகியோர் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே இறந்தனர். ராணி லேசான காயமடைந்தார். போக்குவரத்து நிறைந்த இந்த சாலையில் இரண்டு கார்களும் விபத்துக்குள்ளானதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உடன் அக்கம் பக்கம் இருந்த பொதுமக்கள் இரண்டு கார்களிலும் இருந்தவர்களை மீட்டனர். மேலும் 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.





விரைந்து வந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள் செந்தில்குமார், வசந்தா இருவரும் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையறிந்த ராணி கதறி அழுத சம்பவம் பார்ப்பவர்கள் மனதை பாதித்தது. இதே போல் மற்றொரு காரில் வந்தவர்கள் லேசான காயமடைந்தனர். காயமடைந்த அனைவரும் 108 ஆம்புனஸ்சில் ஏற்றப்பட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.


இவ்விபத்து குறித்து தகவறிந்த அம்மாபேட்டை போலீஸார் சம்ப இடத்திற்கு விரைந்து வந்து இறந்த செந்தில்குமார், வசந்தா இருவரது உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். மகள் கண்முன்னே தாய் மற்றும் அண்ணன் இருவரும் துடிதுடித்து இறந்த சம்பவம் தஞ்சை பகுதி மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

வாகனங்கள் அதிகரித்து விட்ட இக்காலத்தில் மிகுந்த வேகத்தில் இயக்கப்படுவதும், சாலை விதிகளை மீறி செயல்படுவதும் விபத்துக்களை ஏற்படுத்தி வருகிறது. எத்தனை அவசரமாக இருந்தாலும் வாகனங்களை இயக்குபவர்கள் நிதானமாக வாகனத்தை இயக்கினால் அவர்களின் உயிர் மற்றும் மற்றவர்களின் உயிருக்கும் எவ்வித ஆபத்தும் ஏற்படாது. இதை அனைத்து வாகன ஓட்டுநர்களும் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.




 



ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண