கிடா வெட்டி விருந்து நடப்பது என்றால் ஆண்கள், பெண்கள் என இருதரப்பினரும் கலந்து கொள்வார்கள். ஆனால் தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே 200 ஆண்டுகளுக்கும் மேலாக ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் கிடா வெட்டு திருவிழா தெரியுங்களா. அந்த திருவிழா இந்தாண்டும் வழக்கம்போல் ஆண்கள் மட்டுமே பங்கு கொள்ள நடைபெற்றது. இதில் 100 மூட்டை அரிசி, சாதமாக வடிக்கப்பட்டு, 1000 ஆடுகள் வெட்டி, 20 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே தளிகைவிடுதி கிராமத்தில் நல்லபெரமஅய்யனார், செம்முனி, முத்துமுனி கோயிலில்  ஆடி வெள்ளிக்கிழமையை ஒட்டி கிடா வெட்டு திருவிழா நேற்று முன்தினம்  இரவு தொடங்கியது. இதில் பக்தர்கள் நேர்த்திக்கடனாக வழங்கிய சுமார் 1,000 ஆடுகள் வெட்டப்பட்டது. வெட்டிய ஆடுகளின் கறிகளை குழம்பு வைத்தும், 100 மூட்டை அரிசியை சாதமாக வடித்தும் மறுநாள் காலை 8 மணி முதல் ஆண்கள் மற்றும் சிறுவர்களுக்கு அன்னதானமாக வழங்கப்பட்டது.    


இதில் தளிகைவிடுதி, அக்கரைவட்டம், சில்லத்தூர், வெட்டிக்காடு, திருவோணம், கறம்பக்குடி, தெற்கு கோட்டை, வடக்குகோட்டை, கிளாமங்கலம் உள்ளிட்ட  20க்கும் மேற்பட்ட கிராமத்தை சேர்ந்த 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆண்கள் விருந்தில் பங்கேற்றனர். பத்துக்கும் மேற்பட்ட வாகனங்களில் சாதம் வைத்துக் கொண்டும், 500க்கும் மேற்பட்டவர்கள் பரிமாறினர். விருந்தில் பங்கேற்றவர்கள் வெயிலையும் பொருட்படுத்தாமல் தரையில் அமர்ந்து வாழை இலையில் உணவருந்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுகுறித்து கோயில் அறங்காவலர் குழுத் தலைவரும் ஊராட்சி மன்றத் தலைவருமான பொன்.முத்துவேல் கூறியதாவது: எங்களது கோயிலில் ஆடி வெள்ளிக்கிழமையில் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை இப்படி கிடா வெட்டு திருவிழா நடத்துவது வழக்கம். கொரோனா காலம் என்பதாலும், கோயில் கும்பாபிஷேக பணிகள் நடைபெற்றதால் இரண்டு ஆண்டுகள் இந்த திருவிழா நடத்தப்படவில்லை. இதையடுத்து இந்தாண்டு கிடா வெட்டு திருவிழா நடத்த முடிவு செய்யப்பட்டது. இதற்காக அருகில் உள்ள கிராமங்களில் உள்ள உறவினர்கள் அனைவரையும் நாங்கள் வரவழைத்தோம். இரவு ஆடு வெட்டும் திருவிழா தொடங்கியது. விடிய விடிய 1000 ஆடுகள் வெட்டப்பட்டது. மதியத்திற்கு மேலும் தொடர்ந்து அன்னதானம் நடந்தது. பாரம்பரியமாக நடக்கும் இந்த விழாவில் ஆண்கள் மட்டுமே கலந்து கொள்வர்.


வெட்டிய ஆடுகளை ஒருபக்கம் சமையல் செய்யும் பணிகள் மும்முரமாக நடந்தது.  காலை முதல் அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த விருந்தில் பாரம்பரியமாக ஆண்கள் மட்டுமே கலந்து கொண்டனர். சமையலும் ஆண்கள் மட்டுமே சமைத்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதற்காக 100 மூட்டை அரிசி சாதமாக வடிக்கப்பட்டது. சாதத்தை டிராக்டர், சுமை ஆட்டோவில் வைத்துக் கொண்டு 500க்கும் மேற்பட்டோர் பரிமாறினர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண