தஞ்சாவூர்: தஞ்சையில் தனியார் நிதி நிறுவன அதிபர் வீட்டில் 50 பவுன் நகை, ரூ.5 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்கள் வீட்டில் இருந்த ஸ்நாக்ஸ் மற்றும் இனிப்புகளையும் ருசித்து தின்றுவிட்டு சென்ற சம்பவம் நடந்துள்ளது.



தஞ்சாவூர் பூக்கார 1-ம் தெருவை சேர்ந்தவர் வினோத் என்கிற கோபாலகிருஷ்ணன் (36). தனியார் நிதி நிறுவன அதிபர். இவர் நேற்று முன்தினம் தனது வீட்டை பூட்டிவிட்டு துக்க நிகழ்ச்சிக்காக சென்னைக்கு சென்று விட்டார்.

இந்நிலையில் இன்று காலை இவருடைய வீட்டின் கதவு திறந்து கிடந்துள்ளது. இதுகுறித்து அக்கம், பக்கத்தினர் கோபாலகிருஷ்ணனுக்கு செல்போனில் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சென்னையிலிருந்து கோபாலகிருஷ்ணன் தஞ்சைக்கு விரைந்து வந்தார். பின்னர் அவர் வீட்டிற்கு சென்று பார்த்தபோது முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

உள்ளே சென்று பார்த்த போது வீட்டில் இருந்த 3 பீரோக்களும் உடைக்கப்பட்டு, அதில் இருந்த பொருட்கள் சிதறிக்கிடந்தன. பீரோவில் இருந்த 50 பவுன் நகைகள், ரூ.5 லட்சம் ரொக்கம், 300 கிராம் வெள்ளிப்பொருட்கள் ஆகியவற்றை காணவில்லை. வீட்டில் ஆள் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணத்தை கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது.

மேலும், மர்ம நபர்கள் அருகில் உள்ள மகேஸ்வரி என்பவரின் வீட்டிலும் பீரோவை உடைத்து 7 பவுன் நகை மற்றும் ரூ.10 ஆயிரத்தையும் திருடி சென்றுள்ளனர். தனியாக வசித்து வந்த மகேஸ்வரி வீட்டை பூட்டி விட்டு சென்னையில் உள்ள தனது மகன் வீட்டிற்கு சென்றதாக கூறப்படுகிறது.





இது குறித்து தஞ்சை தெற்கு போலீசில் புகார் செய்யப்பட்டது. தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்களும் வந்து கைரேகைகளை பதிவு செய்தனர். அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையில் கோபாலகிருஷ்ணன் வீட்டில் நகை, பணத்தை கொள்ளையடித்த நபர்கள், வீட்டில் குழந்தைகளுக்கு கொடுப்பதற்காக வாங்கி வைத்திருந்த ஸ்நாக்ஸ் மற்றும் சுவீட் ஆகியவற்றையும் ருசி பார்த்து தின்று விட்டு சென்றுள்ளனர். ஒரு சிறிய வாளியில் இருந்த ஸ்நாக்ஸ், ஸ்வீட் முழுவதையும் கொள்ளையர்கள் தின்று விட்டு காலியாக போட்டு விட்டு சென்றுள்ளனர். இந்த நிலையில் நேற்று குழந்தைகளுக்கு கொடுப்பதற்காக ஸ்நாக்ஸ் இருந்த வாளியை எடுத்து பார்த்த போது தான் கொள்ளையர்கள் அதனை தின்று விட்டு சென்றது தெரிய வந்தது. இதையடுத்து சுவீட் வைத்திருந்த பெட்டியிலும் கொள்ளையர்களின் கைரேகைககள் பதிந்துள்ளதா? எனவும் தடய நிபுணர்கள் சோதனை செய்தனர்.