தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 450 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக ஒருவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


தமிழக அரசு ரேஷன் கடைகளில் மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வினியோகிக்க நகர்ப்புறங்களிலும், கிராமப்புறங்களிலும் முறையான ஏற்பாடுகளை செய்துள்ள நிலையில் வினியோகத்தை கண்காணிக்கவும் பலதுறை அலுவலர்களை நியமித்துள்ளது.


ரேஷன் கடைகளில் வினியோகத்தை கண்காணிக்க வழங்கல் துறை, கூட்டுறவுத்துறை அலுவலர்களுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. இதுதவிர ரேஷன் அரிசி கடத்தலை தடுப்பதற்காக தனியாக உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு ஏ.டி.ஜி.பி. தலைமையில் மாநில அளவில் செயல்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாவட்டத்திற்கும் துணை போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.


அதிலும் உணவு பொருள் கடத்தல் பிரிவுக்கு என ஒவ்வொரு மாவட்டத்திற்கும் நுண்ணறிவு பிரிவு அலுவலர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். இதன்வாயிலாக ரேஷன் அரிசி பிற மாவட்டங்கள் அல்லது மாநிலங்களுக்கு கடத்தப்படுவது தடுக்கப்பட்டு வருகிறது. மேலும் ரேஷன் அரிசி கடத்தல் குறித்து அனைத்து மாவட்டங்களிலும் தீவிர கண்காணிப்பு பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ரேஷன் அரிசியை கிராமப்பகுதிகளில் குறைந்த விலைக்கு வாங்கி அவற்றை பிற மாவட்டங்களுக்கு கடத்துபவர்கள் மீது உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.


அந்த வகையில் தஞ்சை மாவட்டத்தில் ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க உணவு கடத்தல் தடுப்பு குற்ற புலனாய்வு பிரிவு போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அடுது்த கண்டியங்காடு பஸ் நிறுத்தம் அருகில் ஒரு இடத்தில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக தகவல் கிடைத்தது.


அதன் பேரில் உணவு கடத்தல் தடுப்பு குற்ற புலனாய்வு பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணன் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் முருகானந்தம், சப்-இன்ஸ்பெக்டர் விஜய் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை மேற்கொண்டனர்.


அப்போது அங்கு மூட்டைகளில் 450 கிலோ ரேஷன்அரிசி, 450 கிலோ குருணை அரிசி என மொத்தம் 950 கிலோ அரிசி பதுக்கி வைக்கப்படடு இருந்தது தெரிய வந்தது. ரேஷன் அட்டைதாரர்களிடம் இருந்து அரிசி, குருணை குறைந்த விலைக்கு வாங்கி அதனை பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது.


மேலும் இது தொடர்பாக பாப்பாநாட்டை சேர்ந்த சரவணன் (52) என்பவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் பதுக்கிவைக்கப்பட்டு இருந்த ரேஷன் அரிசியையும் பறிமுதல் செய்தனர். இதுபோன்று ரேஷன் அரிசி கடத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவித்தனர்.