தஞ்சாவூர்: தஞ்சாவூர் அருகே மாதாக்கோட்டை பைபாஸ் பாலம் அருகில் பின்னால் வந்த கார் மோதியதில் ஒரே பைக்கில் சென்ற அப்பா மற்றும் 2 குழந்தைகள் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தஞ்சாவூர் அருகே வல்லம் கொள்ளுப்பேட்டை தெருவை சேர்ந்த பக்கரி என்பவரின் மகன் அறிவழகன் (37). இவரது மனைவி உஷா (35). இவர்களின் மகள்கள் ரூபா (10), பாவ்யாஸ்ரீ (9). இந்நிலையில் நேற்று மாலை 6 மணியளவில் அறிவழகன் பனங்காடு பகுதியில் உள்ள கோயிலுக்கு தனது மனைவி, மகள்கள் மற்றும் தங்கை மகள் தேஜாஸ்ரீ (4) ஆகியோருடன் தனது பைக்கில் சென்று கொண்டிருந்தார்.
மாதாக்கோட்டை பைபாஸ் மேம்பாலம் அருகில் சென்ற போது கேரளாவில் இருந்து நாகூர் தர்காவிற்கு சென்று கொண்டிருந்த பக்தர்களின் கார் ஒன்று அறிவழகன் பைக் மீது வேகமாக மோதியது. இதில் பைக்கில் இருந்த 5 பேரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் அறிவழகன் மற்றும் அவரது மகள் பாவ்யா ஸ்ரீ, தங்கை மகள் தேஜா ஸ்ரீ ஆகிய 3 பேரும் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே இறந்தனர்.
இந்த விபத்தில் அறிவழகன் மனைவி உஷா, மகள் ரூபா ஆகியோருக்கு சிறு காயங்கள் ஏற்பட்டது. உடன் அக்கம்பக்கத்தினர் தமிழ்ப்பல்கலைக்கழக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து வல்லம் டிஎஸ்பி கணேஷ்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காயமடைந்த உஷா மற்றும் சிறுமி ரூபா ஆகியோரை 108 ஆம்புலன்ஸ் மூலம் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் இறந்த 3 பேர் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த சம்பவம் தஞ்சை பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
அரசு பேருந்து ஏற்படுத்திய விபத்து
தஞ்சாவூரில் நேற்று மாலை கட்டுப்பாட்டை இழந்த அரசு பேருந்து மோதி 3 பேர் காயமடைந்தனர். தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்திலிருந்து திருக்கருகாவூர் நோக்கி நேற்று மாலை அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. கொடிமரத்து மூலை திருப்பத்தில் பேருந்து திரும்பியபோது, ஸ்டிரியரிங் லாக் ஆகிவிட்டதாகக் கூறப்படுகிறது. இதனால், கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோர கடை மீது மோதியது. அப்போது, அந்த வழியாக சென்ற பள்ளி மாணவர்கள் 2 பேர், பெண் ஒருவர் என 3 பேர் காயமடைந்த தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே, இச்சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொள்வதற்காக போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். அப்போது, சாலையோரமுள்ள அகழியில் உயிரிழந்த நிலையில் தொழிலாளி சடலம் கிடந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
விசாரணையில் அவர் கரந்தை சறுக்கை சவேரியார் கோயில் தெருவை சேர்ந்த பவன்ராஜ் (48) என்பதும், தஞ்சாவூர் மாநகராட்சியில் தற்காலிக தூய்மை பணியாளராக பணியாற்றியதும், கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் காணாமல் போனது குறித்து குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் கிழக்கு போலீசார் தேடி வந்ததும் தெரிய வந்தது. மதுப்பழக்கம் உள்ள இவர் போதையில் விழுந்து உயிரிழந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இது குறித்து மேற்கு போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். தஞ்சாவூர் பகுதியில் ஒரே நாளில் அடுத்தடுத்து நடந்த இந்த விபத்துக்கள் மக்கள் மனதில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.