தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் ஆடுதுறை பேரூராட்சி அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசி, பேரூராட்சி தலைவரும், பாம.க., மாவட்ட செயலாளருமான ம.க.ஸ்டாலினை கொல்ல முயற்சி நடந்துள்ளது. இந்த சம்பவத்தில் 2 பேர் படுகாயமடைந்தனர். தகவலறிந்த பாமக தொண்டர்கள் டயர்களை சாலை நடுவில் வைத்து கொளுத்தி மறியலில் ஈடுபட்டனர். 

தஞ்சாவூர் மாவட்டம் ஆடுதுறை பேரூராட்சி அலுவலகத்தில் இன்று மதியம் பேரூராட்சி தலைவர் ம.க.ஸ்டாலின் கட்சியினருடன் ஆலோசனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது திடீரென காரில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் பெட்ரோல் குண்டுகளை வீசியது. மேலும் அரிவாளால் தாக்குதலும் நடத்தி விட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். இதில் பேரூராட்சி அலுவலகத்தில் இருந்த இளையராஜா,  அருண் ஆகியோர் படுகாயமடைந்தனர். உடன் இருவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். பெட்ரோல் வெடிகுண்டை வீசி தாக்குதல் நடத்திய போது பேரூராட்சி தலைவர் ம.க.ஸ்டாலின் நூலிலையில் உயிர் தப்பியதாக சம்பவ இடத்திலிருந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

தகவலறிந்து ஆடுதுறை போலீசார் விரைந்து வந்து சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர். இதற்கிடையில் இந்த தாக்குதல் சம்பவம் குறித்து அறிந்த பாட்டாளி மக்கள் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கூடியதால் பரபரப்பான சூழல் ஏற்பட்டது. தொடர்ந்து கொலை முயற்சியில் ஈடுபட்ட கும்பலை கைது செய்ய வலியுறுத்தி பாட்டாளி மக்கள் கட்சியினர் கும்பகோணம்- மயிலாடுதுறை சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.  ஆடுதுறையில் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது. ஏராளமான போலீசார் ஆடுதுறையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

கும்பகோணம் மயிலாடுதுறை சாலை பேருந்துகள் மாற்று வழியில் திருப்பி விடப்பட்டுள்ளது. பெட்ரோல் குண்டு வீசி தாக்குதலில் ஈடுபட்ட கும்பலை கைது செய்யும் வரை பாமக, வன்னியர் சங்கத்தினர் போராட்டம் தொடரும் வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் மதி விமல் தெரிவித்துள்ளார். ஒரு மணி நேரத்திற்கு மேலாக சாலை மறியல் நடந்தது.

சாலை மறியலில்ல் ஈடுபட்டவர்களிடம் ம.க.ஸ்டாலின் நேரில் வந்து சாலை மறிகளை கைவிட கோரி அறிவுறுத்தினார். அதற்குள் அவரின் ஆதரவாளர்கள் கும்பகோணம்- மயிலாடுதுறை மெயின் சாலையில் குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி சாலையின் நடுவே டயர்களை கொளுத்தினர். இதுகுறித்து அறிந்த பேரூராட்சி தலைவர் ம.க.ஸ்டாலின் உடனடியாக அந்த இடத்திற்கு வந்த இவ்வாறு செய்வது தவறு. போராட்டத்தை உடனே கை விடுங்கள் என கூறியதை அடுத்து போராட்டம் செய்தவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

சாலையில் டயர்களை எரித்து போராட்டம் செய்த இப்பகுதி போர்க்களம் காட்சியளித்து பதட்டத்தை ஏற்படுத்தியது. இந்த கொலை முயற்சி சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். இச்சம்பவம் தஞ்சை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.