திருச்சேறை சாரநாதப்பெருமாள் கோயிலில் தைப்பூச தேரோட்டம்

திருச்சேறையில் உள்ள சாரநாத பெருமாள் கோயிலில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு கடந்த 11 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது

Continues below advertisement

திருச்சேறை சாரநாதப்பெருமாள் கோயிலில் தைப்பூச  தேரோட்டம்

Continues below advertisement

தஞ்சாவூர் மாவட்டத்தில் திருச்சேரை என்னும் ஊரில் அமைந்துள்ள பெருமாள் கோயில். 108 திவ்யதேசங்களுள் ஒன்று. சோழ நாட்டு பதினைந்தாவது திருத்தலம். தனக்கு மிகவும் பிரியமான க்ஷேத்திரம் என்று மகாவிஷ்ணுவால் அருளப்பட்ட பூமி இந்த திருச்சேறையாகும். இக்கோவில் சுமார் 1000 ஆண்டுகள் பழமையானது. கோவில் 380 அடி நீளமும் 234 அடி அகலமும் கொண்டமைந்துள்ளது. கோயிலுக்கு எதிரில் உள்ள சார புஷ்கரிணியின் மேற்கு கரையில் அகத்தியர், பிரம்மா, காவரி ஆகியோருக்குத் தனி சன்னதி உள்ளன.. இத்தலத்து மண் மிகவும் சத்து (சாரம்) நிறைந்தது. இதனாலேயே இக்கோவிலின் மூலவர் சாரநாதப்பெருமாள் எனப்பட்டார். திருச்சாரம் என வழங்கப்பட்ட இத்தலம் திருச்சேறை ஆனது. மூலத்தானத்தில் பெருமாளுக்கு வலது பக்கம் மார்க்கண்டேயரும் இடதுபக்கம் காவிரித் தாயும் அமர்ந்துள்ளனர்.


ஆதிசேஷன் குடையின் கீழ் தாயார் லட்சுமியுடன் பாற்கடலில் துயில் கொண்டிருந்த மகாவிஷ்ணு, பிரம்மதேவரை அழைத்து பிரளயகாலம் வருகிறது, நீ உடன் பூலோகம் சென்று ஒரு புனித தலத்தில் மண் எடுத்து குடம் செய்து அதில் வேத ஆகம சாஸ்திர புராணங்களை ஆவாஹனம் செய் என கட்டளை இட்டார். பல ஆலயங்களில் மண் எடுத்து குடம் செய்தும் குடம் உடைந்தவன்னம் இருந்தது. மகாவிஷ்ணுவை வேண்ட திருமால் பூலோக முக்கிய தலங்களுள் ஒன்றான திருச்சேறை சென்று தாரா தீர்த்ததில் நீராடி, மண் எடுத்து செய் எனக் கூறினார். பிரம்ம தேவரும் அவ்வாறே செய்து வேத ஆகமங்களை பாதுகாத்தார். பிரளய காலத்தில் பிரம்மா இத்தலத்திலிருந்து மண்ணெடுத்து கடம் செய்து அதனுள் வைத்து வேதங்களைக் காப்பாற்றினார் என்பதும், காவிரித் தாயின் தவத்தின் பலனாக அவரது மடியில் பெருமாள் குழந்தையாகத் திகழ்ந்ததோடல்லாது அவருக்கு ஸ்ரீதேவி, பூதேவி, நிளாதேவி, மகாலட்சுமி, சாரநாயகி ஆகிய ஐந்து தேவியருடன் காட்சியளித்தார் என்பதும், மார்க்கண்டேயர் முக்தியடைந்த தலமாகும்.


விஜயநகரப் பேரரசு ஆட்சியின் வீழ்ச்சிக்குப்பின் தஞ்சாவூரை ஆண்ட நாயக்க அரசர், மன்னார்குடியில் இராஜகோபால சுவாமிக்கு ஒரு கோவில் அமைக்கத் தீர்மானித்து அதற்கான பொறுப்பைத் தன் அமைச்சரான நரச பூபாலனிடம் அளித்தார். பூபாலன் சாரநாதப் பெருமாளின் பக்தர். திருச்சேறையிலும் கோவில் அமைக்க விரும்பிய அமைச்சர், மன்னார்குடிக்குக் கருங்கற்களைக் கொண்டு செல்லும் ஒவ்வொரு பாரவண்டியிலிருந்தும் ஒரு கல்லை திருச்சேறையில் இறக்கிவிட்டுச் செல்லும்படி தனது ஆட்களுக்கு உத்தரவிட்டார். இச்செய்தியை அறிந்து சினமடைந்த அரசன் திருச்சேறைக்குச் சென்றான். அங்கு அரசனது கண்களுக்கு சாரநாதப் பெருமாள், இராஜகோபால சுவாமியாகக் காட்சியளித்ததால் சினம் தீர்ந்த அரசன் இக்கோவிலையும் அமைப்பதற்கு மனம் உவந்தான் என்பதும் வரலாறு ஆகும்.


ஒரு முறை காவிரித்தாய் கங்கைக்கு இணையான பெருமை தனக்கும் வேண்டும் என கேட்டு இத்தல சாரபுஷ்கரணியில் மேற்கு கரை அரச மரத்தடியில் பெருமாளை நோக்கித் தவம் இருந்தாள். இவளது தவத்திற்கு மகிழ்ந்த பெருமாள் குழந்தை வடிவில் காவிரித்தாயின் மடியில் தவழ்ந்தார். பின் கருட வாகனத்தில் சங்கு சக்கரதாரியாக ஐந்து லட்சுமிகளுடன் காட்சி தந்த பெருமாளிடம் காவிரி எப்போதும் இதே கோலத்தில் இங்கு காட்சி தர வேண்டும் என வேண்ட பெருமாளும் அப்படியே செய்தார். மூலஸ்தானத்தில் பெருமாளுக்கு இடது பக்கம் காவிரித்தாய் இருப்பதை இன்றும் காணலாம்.


இத்தகைய சிறப்பு பெற்ற கும்பகோணம் அருகே திருச்சேறை உள்ள சாரநாத பெருமாள் கோயிலில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு கடந்த 11 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக கொடிமரத்துக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, கருடாழ்வார் அச்சிட்ட கொடியை மங்கள வாத்தியம் முழங்க பட்டாச்சாரியார்கள் ஏற்றப்பட்டது. அப்போது கொடிமரம் அருகே சாரநாயகிதாயாருடன் சாரநாத பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். தொடர்ந்து வரும் 26 ஆம் வரை நடைபெற உள்ள கோயில் விழாக்களில் பெருமாளும் தாயாரும் படிச்சட்டங்களில் உள்பிரகாரத்தில் புறப்பாடு நடைபெற உள்ளது. முக்கிய விழாவான தேரோட்டம் நடைபெற்றது. தேரில் சாரநாயகி சமேத சாரநாதபெருமாள் வீதியூலா வந்தனர். ஏராளமானோர் வடம் பிடித்து இழுத்தனர். வரும் 26 ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு உற்சவப் பெருமாள் பஞ்ச லட்சுமிகளுடன் தெப்பத்தில் எழுந்தருளி தெப்ப உற்சவம் காணுகிறார். விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

Continues below advertisement
Sponsored Links by Taboola