தஞ்சையில் பழைய பேருந்து நிலையம் அருகில் 100 ஆண்டுகள் மிகவும் பழமையான தஞ்சை நகரின் மைய பகுதியில் அண்ணா சிலை அருகே உள்ள ராஜப்பா பூங்கா உள்ளது. மராட்டிய கட்டிட கலை மற்றும் ஆங்கிலேயர் கட்டிட கலை இணைந்து கட்டப்பட்டுள்ளது என முன்னோர்கள் கூறுகின்றனர். அதன் நினைவாக அப்போது ஆட்சி செய்த ஆங்கிலேயரான 5 ஆம் ஜார்ஜின் சிலையை பூங்காவிற்கு அமைத்துள்ளனர். இந்நிலையில் மணிகூண்டின் உச்சியில் உள்ள கடிகாரம் ஒவ்வொரு மணி நேரத்துக்கும் ஒலி எழுப்பும். மேலும் கீழிருந்து கோபுரத்துக்குள் செல்ல படிக்கட்டுகள் உள்ளன. இதன்மூலம் கோபுரம் உச்சிக்கு சென்று தஞ்சை நகரின் அழகை ரசிக்க முடியும். 


மத்திய அரசு இந்தியாவில் 100 நகரங்களை ஸ்மார்ட் சிட்டியாக மாற்றுவதற்கு அறிவித்தது. அதில் தமிழகத்தில் உள்ள 11 நகரங்களில் தஞ்சை நகரமும் ஒன்று. இதற்காக ரூ. 1289 கோடி  ஒதுக்கியுள்ளது.இதில் மத்திய அரசு 50 சதவீதமும், மாநில அரசு 50 சதவீதமும் வழங்குகிறது. இந்த நிதியின் மூலம் நகர்புறங்களில் தெருக்கள் மேம்பாடு, புராதன சின்னங்கள் பழமை மாறாமல் சீரமைப்பது என 90 திட்டங்கள்  தொடங்கப்பட்டன. இதில் 16 திட்டப்பணிகள் நிறைவு பெற்றுள்ளது. மீதமுள்ள பணிகள் நடைபெற்று வருகிறது. 


இதில் சிவகங்கை பூங்கா சீரமைப்பு, காமராஜர் மார்க்கெட் உள்ளிட்டவை சீரமைக்கப்படுகின்றன. இந்த திட்டத்தின் படி,  தஞ்சாவூர்,  பழைய பஸ் நிலையம் அருகே உள்ள ராஜப்பா பூங்காவும் புதுப்பொலிவு பெறுகிறது. இந்த பூங்காவில் மணிக்கூண்டு உள்ளது. இதனை ராணிஸ் டவர் என்றும் அழைப்பது உண்டு. மணிக்கூண்டு ராசா மிராசுதார் மருத்துவமனையின் ஒரு பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மணிக்கூண்டு 1883-ம் ஆண்டு அமைக்கப்பட்டுள்ளது.


விக்டோரியா மகாராணி முடி சூட்டியதை நினைவுப்படுத்தும் வகையில் இந்த மணிக்கூண்டு அமைக்கப்பட்டது என்றும், மணிக்கூண்டை கட்ட தஞ்சாவூர் நகராட்சிக்கு மராட்டிய ராணி நிதி கொடுத்ததால் ராணிஸ் டவர் என்று அழைக்கப்படுவதாகவும் சிலர் கூறுவர். இந்த பூங்கா 3,284 சதுரமீட்டர் பரப்பளவில் உள்ளது. இதில் மணிக்கூண்டு 185 சதுரமீட்டர் பரப்பளவில் உள்ளது. இந்த பூங்காவிற்கு தினமும் 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வந்து சென்றனர். இந்த பூங்காவில் மாநகராட்சி மண்டல அலுவலகம், விரிவசூல் மையம், போக்குவரத்து போலீஸ் அலுவலகம் ஆகியவையும் செயல்பட்டது.


இந்த மணிக்கூண்டு 130 அடி உயரம் கொண்டது. கட்டிடம் முழுவதும் செங்கல் மற்றும் சுண்ணாம்பு கலவையால் கட்டப்பட்டது. செங்கலின் மேல் சிமெண்டு பூச்சு இல்லாமல் மிகுந்த கலை நயத்துடன் காட்சி அளிக்கிறது. 20 அடி உயரம் கொண்ட மணிக்கூண்டின் அடிப்பகுதி சதுரவடிவில் உள்ளது. 4 புறமும் வாயில்கள் உள்ளன. அதன் மேல் மணிக்கூண்டின் பிரதான கட்டிடம் 60 அடிக்கு அறுகோண வடிவிலும், அதன் மேல் 40 அடிக்கு சதுர வடிவிலும், அதற்கு மேல் 10 அடி உயரத்துக்கு பெரியகோவில் கோவில் கோபுரம் போன்றும் இருக்கும்.


1914 முதல் 1919 வரை நடந்த 2ம் உலகப் போரில் தஞ்சையிலிருந்து 61 வீரர்கள் பங்கேற்றனர். இதில் 4 வீரர்கள் போரில் வீரமரணமடைந்தனர். இதன் நினைவாக பூங்காவையொட்டி 100 அடி உயரத்தில் மணிகூண்டு கட்டப்பட்டதாகவும் கூறுவார்கள். இந்த செய்தி  அங்கு பளிங்கு கல்லும் பதிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டிடத்தில் 100 படிகளுக்கு மேல் உள்ளது. கட்டிடத்தில் அழகிய மரவேலைப்பாடுகளும், பளிங்கு கற்களுக்கு மத்தியில் ஒரு கடிகாரமும் இருந்தது. இந்த கடிகாரம் லண்டனில் இருந்து வரவழைக்கப்பட்டதாகும். இதன் மணியோசை கிட்டத்தட்ட 3 மைல் தூரத்திற்கு கேட்டதாக கூறப்படுகிறது.தற்போது ரூ.4 கோடி செலவில் ராஜப்பா பூங்கா மற்றும் மணிக்கூண்டு சீரமைக்கப்பட்டுள்ளது, இப்பூங்காவில் புதுப்பொலிவாக்கி, நடைபாதைகள், இருக்கைகள்,விளக்குகள் அமைத்து,  வண்ணமயமான வர்ணங்களில் நவீன மின்விளக்குகள், மணிக்கூண்டு பொது மக்களின் பயன்பாட்டிற்கு, தமிழக முதல்வரால் திறக்கப்பட்டன.


தற்போதைய மாநகராட்சி ஆணையராக இருக்கும் சரவணக்குமார் பழமையான மணிக்கூண்டில் ஒரு புதுமையை புகுத்தி உள்ளார். ஒவ்வொரு மணி நேரமும் இசைக்கும் மணிக்கூண்டு நேரத்தை இசைத்த பிறகு சில வினாடிகளில் திருக்குறள் இசைக்கும்படி செய்துள்ளார். உலகப் பொதுமறையான திருக்குறள் ஒவ்வொரு மணிநேரமும் இசைக்கப்படுவதும் அதற்கான விளக்கத்தையும் தெரிவிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இதனை தஞ்சை பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.