தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை, மதுக்கூர், அதிராம்பட்டிணம், தம்பிக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் மழை வெள்ள சேதம் குறித்து மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், தஞ்சாவூர் மாவட்ட

  கண்காணிப்பாளர் மற்றும் தமிழக அரசின் முதன்மை செயலாளருமான விஜயகுமார், திமுக எம்எல்ஏ அண்ணாதுரை உள்ளிட்ட அதிகாரிகள் மதுக்கூர் பகுதியில் ஆய்வு செய்து விட்டு பட்டுக்கோட்டை திரும்பிக் கொண்டிருந்தனர்.



அப்போது, மதுக்கூர் மொச்சிக்குளம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள், ஆய்வுக்கு வந்த அதிகாரிகளின் காரை  வழிமறித்து முற்றுகையிட்டனர். இதனால் அதிர்ச்சியடைந்த அதிகாரிகள், மாவட்ட கலெக்டருக்கு தகவல் கொடுத்தனர். தகவலையடுத்து, மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலீவர் மற்றும் எம்எல்ஏ அண்ணாதுரை ஆகியோர் காரை விட்டு கீழறங்கினர். அப்போது, தங்களது குடியிருப்பு பகுதிகளில் கடந்த மூன்று தினங்களாக மழைநீர் தேங்கியுள்ளது, குழந்தைகள், வயது முதிர்ந்தவர்கள்,கர்ப்பிணி பெண்களுடன் அவதிப்பட்டு வருகின்றோம்.  தேங்கியுள்ள மழை நீரில், கொசுக்கள் மற்றும் விஷ ஜந்துக்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இது குறித்த, அதிகாரிகளிடம் புகார் கொடுத்தும் கண்டு கொள்ளவில்லை என  தங்களை அதிகாரிகள் எவரும் கண்டுகொள்ளவில்லை என வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.


இதனையடுத்து, ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் மற்றும்  பட்டுக்கோட்டை எம்எல்ஏ அண்ணாதுரை ஆகியோர் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுமக்களிடம் தெரிவித்தனர். மேலும் அதிகாரிகளை அழைத்து உடனடியாக தேங்கி நிற்கும் தண்ணீரை வெளியேற்ற உத்தரவிட்டனர். ஆனாலும் பொது மக்கள் நீங்கள் சொல்லி விட்டு சென்றவுடன், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கமாட்டார்கள் என்று பொது மக்கள் கூறவே, மாவட்ட ஆட்சியர் தனது செல்போன் எண்ணை கொடுத்து, ஏதேனும் தேவைப்பட்டால் என்னிடம் தொடர்பு கொள்ளுங்கள் என்று கூறிவிட்டு, செல்போன் நம்பரை கொடுத்து விட்டு சென்றார். அதன் பிறகு அனைவரும் கலைந்து சென்றனர்.



பொதுமக்கள், எம்எல்ஏ, ஆட்சியர் மற்றும் அதிகாரிகளின் காரை வழிமறித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து அப்பகுதியை சேர்ந்தவர்கள் கூறுகையில், மொச்சிக்குளம்  பகுதி மிகவும் தாழ்வாக இருப்பதால், மழை நீர் வெளியேறாமல் தேங்கி நிற்கின்றது. இதனால் குடியிருக்கும் சுமார் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர், பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். தேங்கியுள்ள மழை நீரில் விஷ ஜந்துக்கள் இருப்பதால்,அதில் நடந்து செல்லும் குழந்தைகள், முதியவர்களை கடித்தால், பெரும் உயிர் சேதம் ஏற்பட வாய்ப்புள்ளது.


இது குறித்து அதிகாரிகளிடம் மூன்று நாட்களாக மழை நீர் தேங்கி அசுத்தமாகவும், துர்நாற்றம் வீசுவதாக தெரிவித்தோம். ஆனால் அதிகாரிகள், எங்களின் நிலையை கண்டு கொள்ளாமல் விட்டு விட்டனர். இதனால் செய்தறியாமல் இருந்த நிலையில், மாவட்ட ஆட்சியர், எம்எல்ஏ உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வுக்கு வருவதாக தகவல் வந்ததையடுத்து, முற்றுகை செய்தால் தான் நடவடிக்கை எடுப்பார்கள் என்று முடிவு செய்தோம். அதன் படி முற்றுகை செய்ததால், மாவட்ட ஆட்சியர் உத்தரவின்படி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததின் பேரில் நாங்கள் கலைந்து சென்றோம் என்றார்.