தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் தாலுக்கா மாரநேரி கிராமத்தில் அய்யனார் ஏரிய உள்ளது. இந்த ஏரி தண்ணீரை நம்பி சுமார் 1400 ஏக்கர் விவசாயம் நடைபெறுகிறது.

  இந்த அய்யனார் ஏரி,  ஆனந்தகாவிரி வாய்க்கால் பாசன பகுதி மற்றும் கல்லணை கால்வாய் பாசன பகுதிகளாகும். நீர் வழிப்பாதைகள், நீர் வெளியேறும் பாதைகள் அனைத்து ஆக்கிரமிக்கப்பட்டதால், ஆறுகளில் தண்ணீர் வந்தாலும், அய்யனார் ஏரி நிரம்பாத நிலையானது. இது குறித்து ஆக்கிரமிக்கப்பட்ட நபர்களிடம் கேட்கும், உரிய பதில் கூறாமலும், ஆக்கிரமிப்பை அகற்றாமல் அலட்சியப்படுத்தினர். பின்னர் மாவட்ட நிர்வாகத்திடம் பல முறை கோரிக்கை வைத்தும், ஏரியிலுள்ள ஆக்கிரமிப்பை அகற்றாமலும், அதற்குண்டான நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தி வந்தனர். மேலும் ஏரி ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால், நிலத்தடி நீர் மட்டும் குறைந்ததால், அப்பகுதியுள்ள பெரும்பாலான ஆழ்குழாய் மோட்டாரில்  தண்ணீர் வராமல் போனது. இதனை கருத்தில் கொண்டு, விவசாயிகளின் நலனுக்காகவும், விவசாயம் செழிக்க வேண்டும் என்பதற்காக, மாரநேரியில் உள்ள 188 ஏக்கர் பரப்பளவில் உள்ள அய்யனார் ஏரியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி, விவசாயி கிருஷ்ணமூர்த்தி என்பவர் மதுரை ஐகோர்டில் தொடர்ந்த வழக்கில், சுமார் 114 ஏக்கர் ஆக்கிரமிப்புகளை அகற்ற கோர்ட் தீர்ப்பு வழங்கியுள்ளது.




இந்த வழக்கை விசாரிந்த நீதிபதிகள் அய்யனார் ஏரியில் ஆக்கிரமித்துள்ள 125 ஆக்கிரமிப்பாளர்களை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ‌வருவாய் துறை, காவல்துறை உதவியுடன் இந்த நடவடிக்கை மேற்கொள்ளலாம் என நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதன் படி கடந்த செப்டம்பர் மாதம் 18 ந்தேதி மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. எனவே,  71 குடும்பங்களின் நிலத்திற்கு விவசாயம் செய்ய ஆணை வழங்கவும், விவசாயிகள் இழந்த நிலத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும்,  விவசாயத்தை மட்டுமே நம்பி வாழ்ந்து வரும் விவசாயிகளுக்கு மாற்று இடம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை, பாதிக்கப்பட்டவர்கள் தொடங்கியுள்ளனர்.


ஆனால் மாவட்ட நிர்வாகம், போராடும் விவசாயிகள் பற்றி கவலைகொள்ளாமல் இருப்பதால், விவசாயிகளை ஏமாற்றிய நிர்வாகத்தை கண்டித்து உடலில் சாம்பல் பூசியும், தற்கொலை செய்து கொள்வது தான் இறுதி முடிவு என்பதை சுட்டிகாட்டும் விதமாக துாக்கிட்டு நுாதன போராட்டம் ஈடுபட்டனர். இது குறித்து அகில இந்திய மக்கள் சேவை இயக்க விவசாயப் பிரிவு மாநிலத் தலைவர் தங்க சண்முக சுந்தரம் கூறுகையில், சுதந்திரத்திற்கு முன்பாக உள்ள ஆவணங்களில் 1925 படி பொது நல வழக்கு தொடர்ந்து உள்ளார். அதனடிப்படையில் உயர்நீதிமன்றம் 1925 ல் உள்ளபடி அரசால் பூமி தானம் மற்றும் தியாகிகளுக்கு வழங்கிய நிலத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக கூறி 71 குடும்பங்களின் நலனையும் கருத்தில் கொள்ள பொதுப்பணித்துறை நீதிமன்றத்தில் தகவல்களை தராமல் வேண்டுமென்றே கையூட்டு பெற்றுக்கொண்டு அரசு வழங்கிய நிலத்தை அபகரித்தது போல விவசாயிகளை தியாகிகளை அவமானப்படுத்துவதும் சித்தரிப்பதும் மிக மிக வேதனையாக உள்ளது.




இதில் ஏறத்தாழ 100 ஆண்டுகளாக பல தலைமுறைகளாக நடுத்தர ஏழை எளிய விவசாயிகள் இந்த விளை நிலங்களையே நம்பி வாழ்ந்து வருகின்றனர். இவர்களுடைய நிலம் அரசின் பயன்பாட்டுக்கு வேண்டும் என்றால் எடுத்துக் கொள்ளட்டும். ஆனால் முறையாக மேற்படி நிலங்கள் அரசின் பயன்பாட்டுக்கு தேவைப்படுவதால் அரசின் பெயரிலே நிலங்களை முறையாக பட்டா மாற்றம் செய்ய வேண்டும். பிறகு அந்த இடங்களை அனுபவித்து வந்த விவசாயிகளுக்கு முறையான இழப்பீடாக வேறு இடங்களில் நிலங்கள் வழங்கப்பட வேண்டும். இப்படி எந்தவொரு நடைமுறைகளையும் கடைபிடிக்காமல் எடுத்தோம் கவிழ்த்தோம் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் முரண்டு பிடிப்பது உழவர்களின் தோழனாக இருக்கிறது தமிழக அரசு என கூறும் முதல்வர் மு.க.ஸ்டாலின் கூற்றுக்கு எதிரானதாக உள்ளது. எனவே விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்காமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க  வேண்டும். அய்யனார் ஏரி பரப்பளவு ஏறத்தாழ  76 ஏக்கரே வருவாய் துறை ஆவணங்களில் தற்போது  உள்ளது என்றார்.