தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் தாலுக்கா, சுவாமிமலையில் ஆறுபடை வீடுகளில் நான்காம் படை வீடான சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயில் உள்ளது. சுவாமிமலையின் நடுவில் கோயில் இருந்தாலும், ஊரை சுற்றிலும் விவசாய நிலங்கள் உள்ளன. சுவாமிமலை பகுதியில் சுமார் 300க்கும் மேற்பட்ட ஏக்கரில் விவசாய பணி நடைபெற்று வருகின்றது.  இங்குள்ளவர்களின் பிரதான தொழில் விவசாயமாகும். சவாமிமலை பகுதியிலுள்ள விவசாய நிலங்களுக்கு, பாபநாசம் தாலுக்கா கங்காதாரபுரம் கிராமத்திலுள்ள காவிரியாற்றிலிருந்து நாககுடி பாசன வாய்க்கால் பிரிந்து சுமார் 3 கிலோ மீட்டர் துாரம் பயணம் செய்து, சுவாமிமலை மற்றும் நாககுடி கிராமத்திலுள்ள சுமார் 500 ஏக்கருக்கு பாசனத்திற்கு தண்ணீர் வருகின்றது. வாய்க்கால் வரும் தண்ணீரை கொண்டு ஒரு காலத்தில் முப்போகம் சாகுபடி செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.




இந்நிலையில் தற்போது காவிரி ஆற்றில் தண்ணீர் வருவதால், குறுவை முடிந்து தற்போது சம்பா மற்றும் தாளடி நெற்பயிர் சாகுபடி பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், நாககுடி பாசன வாய்க்காலை கடந்த இரண்டு வருடங்களாக துார் வாராததால், வாய்க்காலில் ஆகாயதாமரை, முட்டைசெடிகள், ஆலகொடிகள் படர்ந்து, தண்ணீர் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட நிர்வாகத்திடமும், பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்தும், கடந்த வருடம்தான், துார் வாரப்பட்டது. இந்தாண்டு துார் வார முடியாது என்று பதில் அளிக்கின்றனர். தற்போது வாய்க்காலில் தண்ணீர் அதிகமாக வருவதால், வாய்க்கால் தண்ணீர், வயலுக்குள் பாய்ந்தால், அனைத்து பயிர்களும் அழுகி விடும் என்பதால், சுவாமிமலை விவசாய சங்கம் சார்பில் வாய்க்கால் பாசனத்தில் சாகுபடி செய்யும் விவசாயிகள், சொந்த பணத்தில், நாககுடி பாசன வாய்க்காலை துார் வாரும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.




இது குறித்து சுவாமிமலை விவசாய சங்கம் நிர்வாகி கல்யாணகுமார் கூறுகையில், நாககுடி பாசன வாய்க்கால் மூலம் சுவாமிமலை மற்றும் நாககுடி கிராமத்தில் உள்ள நிலங்கள் சாகுபடி நடைபெற்று வந்தன. இந்த வாய்க்கால் தண்ணீர் நம்பி தான் நெற்பயிர், கரும்பு, வாழை, எள்ளு, பருத்தி உள்ளிட்ட அனைத்து பயிர்களும் சாகுபடி செய்து வருகின்றோம்.  காவிரி ஆற்றில் தண்ணீர் வருவதை நம்பி, சம்பா மற்றும் தாளடி சாகுபடி பணியில் ஈடுபட்டு வருகின்றோம். ஆனால் சுவாமிமலைக்கு வரும் நாககுடி பாசன வாய்க்காலை கடந்த இரண்டு வருடங்களாக துார் வாராததால், கொடிகள் மண்டி, தண்ணீர் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கடந்தாண்டு, வாய்க்காலின்  தலைப்பு பகுதியில் மட்டும் கடமைக்காக துார் வாரிவிட்டு, வாய்க்கால் முழுவதும் துார் வாரப்பட்டது என கூறி விட்டார்கள். அதிகாரிகளின் அலட்சியத்தால், தற்போது வாய்க்காலில் தண்ணீர் அதிகமாக வருகின்றது. தண்ணீர் செல்ல வழியில்லாததால், தேங்கியுள்ளது. இதனால் பக்கத்தில் உள்ள வயல்களில், தண்ணீர் பாய்ந்தால், சம்பா மற்றும் தாளடி நெற்பயிர்கள் அனைத்தும் அழுகி விடும். மேலும் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருவதால், சுவாமிமலை பகுதியில் சாகுபடி செய்துள்ள நெற்பயிரின் நிலை கேள்வி குறியானது.




இது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் புகாரளித்தும் கண்டு கொள்ளாததால், சுவாமிமலை விவசாய சங்கம் சார்பில் விவசாயிகள் அனைவரும் சொந்தமாக நிதி திரட்டி, பாசன வாய்க்காலை துார் வாரும் பணியில் ஈடுபட்டுள்ளோம். மேலும், வாய்க்காலில், அருகிலுள்ள வீடுகளில் பயன்படுத்தப்படும் கழிவு நீர் கலப்பதால், வாய்க்கால் தண்ணீர் முழுவதும் துர்நாற்றம் வீசுகின்றது. விவசாயிகள் விவசாயப்பணி செய்யமுடியாமல் வேதனைக்குள்ளாகி வருகின்றனர். இது போன்ற நிலையால், சரும நோய்கள், டெங்கு, சிக்கன்குன்யா போன்ற பல்வேறு காய்ச்சல்கள் வருவதற்கு வாய்ப்புள்ளது. எனவே, மாவட்ட நிர்வாகம், சுவாமிமலை பாசன வாய்க்காலை வருடந்தோறும் வாய்க்காலை துார்வார வேண்டும், வாய்க்காலில் கழிவு நீர் கலப்பது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.