தஞ்சாவூர் கூட்டுறவு தலைவர் அ.தி.மு.க.,வில் இருந்து தி.மு.க.,விற்கு தாவிய நிலையில், அவர் மீது அதிமுக

  கூட்டுறவு இயக்குநர்கள் 16 பேர் ஒன்றிணைந்து, தலைவர் மீது மேசாடி புகார் அளித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக முன்னாள் எம்பியும், அதிமுக தஞ்சாவூர் தெற்கு மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளராக இருந்தவருமான கு.பரசுராமன் தனது ஆதரவாளர்களுடன் கடந்த ஜூலை மாதம் 29 ஆம் தேதி தஞ்சாவூரில் உள்ள மாவட்ட திமுக அலுவலகமான கலைஞர் அறிவாலயத்துக்குச் சென்று திமுக நிர்வாகிகளை சந்தித்துப் பேசினார். இந்நிலையில், அவர்களை அதிமுக கட்சியில் இருந்து நீக்கி அதிமுக தலைமை  ஆகஸ்ட் மாதம் 1 ஆம் தேதி,  அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோர், தஞ்சாவூர் தெற்கு மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் கு.பரசுராமன், மன்றத்துணைத் தலைவர் கோ.ராஜமோகன், மன்றத்தின் தஞ்சாவூர் தெற்கு ஒன்றிய இணைச் செயலாளர் ஆர்.எம்.பாஸ்கர், நகர முன்னாள் செயலாளர் வி.பண்டரிநாதன், தஞ்சாவூர் தெற்கு ஒன்றியச் சிறுபான்மையினர் நலப் பிரிவுச் செயலாளர் கே.அருள் சகாயகுமார் ஆகியோர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுகின்றனர் என்று தெரிவித்திருந்தனர்.





ஆனால் தொடர்ந்து, தஞ்சாவூர் கூட்டுறவு மொத்தம் விற்பனை பண்டகசாலையின் தலைவராக பண்டரிநாதன் உள்ளார். இவர் அ.தி.மு.க.,வில் இருந்து தி.மு.கவிற்கு தாவினார். தொடர்ந்து தலைவராக உள்ள பண்டரிநாதன் பல்வேறு முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாக, அ.தி.மு.க. முன்னாள் மாவட்ட செயலாளர் திருஞானம் தலைமையில் பகுதி செயலாளர்கள் அறிவுடைநம்பி, புண்ணியமூர்த்தி, சரவணன், ரமேஷ் என கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலையை சேர்ந்த இயக்குனர்கள் 16 பேர் கையழுத்திட்ட மனுவை, கூட்டுறவு சூப்பிரண்டிடம்  வழங்கினர்.


அதில், தலைவர் பண்டரிநாதன், சங்க விதியை மீறி, உறவினரான ரம்யா என்பவரை விற்பனையாளராக பணியில் அமர்த்தியுள்ளார். மறைந்த சங்க செயலாளர் செழியனுடன்  இணைந்து, சங்கத்தின் நிதியில் 5 லட்சத்திற்கும் குறைவாக இருந்த போது, ஆவணங்களை திருத்தி, பணத்தை கையாடல் செய்துள்ளார். இயக்குநர்கள் கூட்டத்தினை கூட்டாமல், தன்னிச்சையாக தீர்மானங்களை குறிப்பேட்டில் எழுதி,  கையெழுத்து வாங்கி, தனக்கு வேண்டியதை போல திருத்திக்கொள்ளுகிறார். தினக்கூலி வேலைக்கு ஆள் எடுக்காமல்,  உறவினர்கள் பெயரை தினக்கூலி பட்டியில் எழுதி, அந்த சம்பளத்தை அவரே  எடுத்து கொள்கிறார். எனவே, பண்டரிநாதன் மீது  நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர வேண்டும் இவ்வாறு மனு அளித்தனர். இந்நிலையில், அ.தி.மு.க., ஆட்சியில் பல்வேறு மோசடி நடந்துள்ளது. அப்போது எல்லாம் அமைதியாகவும், என்னுடன் ஒன்றாக இருந்தபோது கண்டுகொள்ளாமல் இருந்து விட்டு, தான் திமுகவுக்கு கட்சி மாறியதால், புகார்களை அளித்து வருகின்றனர் என தனது ஆதரவாளர்களிடம், கூட்டுறவு தலைவர் பண்டரிநாதன் புலம்பி வருவதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.