தஞ்சாவூர்: தஞ்சாவூர் அரண்மனை வளாக பகுதியில் செயல்பட்டு வரும் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி வளாக மரங்களில் பழந்தின்னி வௌவால்கள் அதிகஅளவில் வாழ்ந்து வருகின்றன. இவற்றை பாதுகாக்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


பாலுாட்டிகளின் பெரும்பாலான இனங்கள், அழிந்து வருவதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். உலகில், 1 லட்சம் பாலுாட்டிகள் இருந்தன. தற்போது, 4 ஆயிரம் மட்டுமே உள்ளதாக, ஆய்வுகள் கூறுகின்றன. பறக்கக்கூடிய தன்மை கொண்ட ஒரே பாலுாட்டி இனம் என்றால் அது வௌவால்கள்தான். இரவில் விழித்து, பகலில் பதுங்கி வாழும் வௌவால் இனம், கொஞ்சம், கொஞ்சமாக அழிந்து வருவதாக, பறவை ஆராய்ச்சி வல்லுனர்கள் கூறுகின்றனர். உலகில், 1,200 வகை வவ்வால்கள் உள்ளன.


இவற்றில் பழந்தின்னி, பூச்சித்தின்னி என, இருவகைகள் உள்ளன. இவற்றை எளிதில் வித்தியாசம் கண்டுபிடித்து விட முடியும். பழந்தின்னி வௌவால் பெரிய கண்கள், குழல் போன்ற மூக்கு, சிறு காது இருக்கும். இவை, 2 கிலோ எடை வரை இருக்கும். தேன், பூ இதழ்கள், மகரந்த துாள், அழுகிய பழங்களை சாப்பிடும். 


பழந்தின்னி வௌவால்கள் இரவு நேரங்களில் நாற்பத்து எட்டு கிலோமீட்டர் தூரம் பயணிக்கும். இவை பழத்தின் சாறை மட்டுமே உறிஞ்சி குடிக்கும், பழத்தின் சக்கையை உமிழ்ந்து விடும். ஆனால் வாழைப்பழம் போன்ற மிருதுவான பழங்களை முழுவதும் தின்று விடும். இவை மலர்களில் உள்ள தேனையும் குடிக்கும். வௌவால்கள் பயிர்களையும் தின்றுவிடும். அதனால் இவை விவசாயிகளின் எதிரியாக கருதப்படுகிறது. ஆனால் இவற்றின் எச்சம் பயிர்கள் செழித்து வளர உதவுகிறது.




இருளில் முன்னிருக்கும் பொருட்களைக் கவனிக்க வௌவால்களுக்கு மீயொலி அலைகள் உதவுகின்றன. மனிதர்களால் 80 முதல் 20 ஆயிரம் அதிர்வெண் அளவுள்ள ஒலி அலைகளை மட்டுமே உணர முடியும். வௌவால்களின் தொண்டையில் இருந்து ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் அதிர்வெண் அளவில் ஒலி அலைகள் உண்டாகின்றன. இவை ஒலியைச் சிறுசிறு துடிப்பலைகளாக வெளிப்படுத்தும். ஒவ்வொரு துடிப்பும் மிகவும் குறைந்த கால அளவைக் கொண்டது.


ஒரு வினாடியில் 5 ஆயிரத்தில் ஒரு பாகம் ஆகும். 17 மீட்டர் தொலைவில் ஏதாவது தடை இருந்தால், வௌவால் வெளிப்படுத்தும் ஒலிக்கும், அந்த ஒலி எதிரொலித்து திரும்பும் ஒலிக்கும் இடையே உள்ள நேர இடைவெளியை உணர்ந்து, தடை இருக்கும் இடத்தை அறிந்து அதற்கேற்ப பறக்கும் திறனைக் கொண்டது வௌவால். வௌவால் தன் வாய் வழியாக உண்ட உணவு செறித்த பின், வாய் வழியாகவே கழிவை வெளியேற்றுகிறது. இவற்றின் எச்சம் இயற்கை உரத்திற்கான மூலப்பொருள் என்றால் மிகையில்லை.


ஆப்பிரிக்க தீவான மடகாஸ்கரில், வௌவால்கள் வாழும் பல குகைகளில் இருந்து அவற்றின் எச்சம் இயற்கை உரத்துக்கான மூலப்பொருளாக மாறியுள்ளது. வௌவால்களின் எச்சம் இப்போது பெரும் செல்வம் தரும் பொருளாக அங்கு மாறியுள்ளது. காடுகள் பெருவாரியாக அழிக்கப்படுவதாலும், பாறைகள் வெட்டப்பட்டு, குவாரிகளாக மாறி வருவதாலும், பருவநிலை மாற்றத்தால் காட்டுத்தீ ஏற்படுவதாலும், மிக வேகமாக வௌவால்கள் அழிந்து வருகின்றன.


இவற்றைக் காக்க அனைவரும் முன் வர வேண்டும். தமிழகத்தின் நெற்களஞ்சியமாம் தஞ்சைத் தரணியில் கம்பீரமாக அமைந்துள்ள அரண்மனை வளாகத்தில் மரங்கள் சூழ அமைந்துள்ளது அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி. இங்குள்ள மரங்களில் ஆயிரக்கணக்கான பழந்தின்னி வௌவால்கள் குடியிருந்து வருகின்றன. அடர்ந்த மரங்களில் இவை காய்ந்து தொங்கும் பழங்கள் போல் கொத்து கொத்தாக தொங்குகின்றன. 


அதிகரித்து வரும் கட்டிடங்கள், மக்கள் பெருக்கம் ஆகியவற்றினால் வௌவால்களின் இருப்பு வேகமாக குறைந்து வருகிறது. இதனால் தன்னார்வலர்களின் உதவியுடன் வௌவால்களை வளர்க்கும் திட்டமும் வெளிநாடுகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் ஒரே இடத்தில் ஆயிரக்கணக்கான பழந்தின்னி வௌவால்கள் அரண்மனை வளாகத்தில் உள்ள பள்ளியில் உள்ளது. இவற்றை பாதுகாத்து இவற்றின் பயன்களை மற்றவர்களும் அறியும் வண்ணம் செயல்படுத்த வேண்டும் என்பதுதான் அனைவரின் எதிர்பார்ப்பு.