திருவாரூர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 44 நபர்களுக்கு கொரோனா தொற்று. 2 பேர் உயிரிழப்பு.

 

திருவாரூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று இரண்டாவது அலை அதிவேகமாக பரவி வந்ததன் காரணமாக தமிழ்நாடு அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. குறிப்பாக கடந்த மே மாதம் பத்தாம் தேதி முதல் திருவாரூர் மாவட்டத்தில் குறைந்த தளர்வுகள் உடன் கூடிய ஊரடங்கை தமிழ்நாடு அரசு அமல்படுத்தி வந்தது. இன்னிலையில் திருவாரூர் மாவட்டத்தில் தொற்றின் வேகம் குறைய தொடங்கியதை அடுத்து இன்று முதல் பல்வேறு தளர்வுகள் உடன் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இன்று முதல் பொது போக்குவரத்து அனுமதிக்கப்பட்டுள்ளது. அனைத்து வழிபாட்டு தலங்களிலும் பொது மக்களுக்கு தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது,உள்ளிட்ட பல்வேறு தளர்வுகள் திருவாரூர் மாவட்டத்தில் நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளன.

 

இந்நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் இன்று மட்டும் 44 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, நன்னிலம் அரசு மருத்துவமனை, குடவாசல் அரசு மருத்துவமனை, திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனை, மன்னார்குடி தலைமை அரசு மருத்துவமனை, உள்ளிட்ட இடங்களில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் மாவட்டம் முழுவதும் 54 நபர்கள் கொரோனா தொற்றிலிருந்து பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இவர்கள் அனைவரும் வீட்டிற்கு சென்ற பின்னரும் 15 தினங்கள் தனிமையில் இருக்கும் படி மருத்துவர்கள் அறிவுறுத்தி அனுப்பி வைத்துள்ளனர்.



அதுமட்டுமன்றி கொரோனா தொற்றில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் இன்று மட்டும் இரண்டு நபர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். ஒட்டுமொத்தமாக மாவட்டம் முழுவதும் தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 341 ஆக உயர்ந்துள்ளது. ஒட்டுமொத்தமாக மாவட்டம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகள் தனியார் மருத்துவமனைகள், மற்றும் அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 487 ஆக உள்ளது. ஒட்டுமொத்தமாக இதுவரை திருவாரூர் மாவட்டத்தில் 37 ஆயிரத்து 94 நபர்கள் தொற்று ஏற்பட்டு பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மேலும் கொரோனா தொற்றில் இருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என மத்திய மாநில அரசுகள் தொடர்ந்து பொது மக்களை அறிவுறுத்தி வருகிறது. அதனை ஒட்டி திருவாரூர் மாவட்டம் முழுவதும் இன்று ஒரே நாளில் 49 இடங்களில் 2300 நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளதாக மாவட்ட சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அனைத்து மக்களும் பின்பற்ற வேண்டுமென திருவாரூர் மாவட்ட ஆட்சியர் காயத்திரி கிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.