தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாவது அலை அதிவேகமாக பரவி வந்ததன் காரணமாக, கடந்த மே 10-ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வந்தது. அதன் பின்னர் படிப்படியாக தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் கொரோனா குறையத் தொடங்கியதன் காரணமாக தமிழ்நாடு முழுவதும் உள்ள மாவட்டங்களை மூன்றாகப் பிரித்து பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கு தொடர்ந்து நீடிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் தொற்று அதிக அளவில் குறைந்ததன் காரணமாக ஒட்டுமொத்த தமிழ்நாட்டிற்கும் ஒரே தளர்வுகளுடன் வருகிற 12-ஆம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உத்தரவிட்டார், அதனைத் தொடர்ந்து இன்று முதல் தமிழ்நாட்டில் கோயில்கள் திறக்கப்பட்டுள்ளன, மேலும் மாவட்டம் விட்டு மாவட்டம் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன, கடைகள் திறக்கும் நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளன.



இந்நிலையில் திருவாரூர் மாவட்டத்திலுள்ள திருவாரூர் திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி, நன்னிலம் உள்ளிட்ட பணிமனைகளில் இருந்து 200-க்கும் மேற்பட்ட பேருந்துகள் இன்று இயக்கப்பட்டு உள்ளன. திருவாரூர் மாவட்டத்தில் இன்று காலை முதல் அரசு போக்குவரத்து பணிமனையில் பேருந்துகளை தண்ணீரால் சுத்தம் செய்த பின்னர் பேருந்து நிலையத்திற்கு பேருந்துகள் வந்தன. பின்னர் அங்கு கிருமிநாசினி அடிக்கப்பட்டு 50 சதவிகித பயணிகளுடன் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. மேலும் உலகப் புகழ்பெற்ற திருவாரூர் தியாகராஜர் கோயில் இரண்டு மாதங்களுக்குப் பின்னர் இன்று திறக்கப்பட்டது. காலை முதல் பக்தர்கள் கோவிலுக்கு வரத் தொடங்கினர், கோயிலுக்கு வரும் பக்தர்கள் முகக் கவசம் கட்டாயம் அணிந்து வரவேண்டும், மேலும் கோவில் நுழைவு வாயிலில் கோயிலின் ஊழியர்கள் வரக்கூடிய பக்தர்களுக்கு கிருமி நாசினி தெளித்து உள்ளே அனுப்புகின்றனர். மேலும் கோவில்கள் திறக்கப்பட்டதும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்கு மட்டும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வேறு ஏதேனும் சிறப்பு பூஜைகள் மற்றும் குடமுழுக்கு திருவிழாக்கள் போன்றவை நடத்த அனுமதி இல்லை என தமிழ்நாடு அரசு அறிவுறுத்தியுள்ளது இதன் காரணமாக குறைந்த அளவில் பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்



இதேபோன்று கடந்த இரண்டு மாத காலமாக உணவகங்களில் பார்சல் மட்டுமே அனுமதி அளித்து வந்த நிலையில், இன்று முதல் உணவகத்தில் 50 சதவிகிதம் நபர்கள் அமர்ந்து உணவு உண்ணுவதற்கு அனுமதி அளித்திருந்தனர் அதன் அடிப்படையில் இன்று முதல் உணவகங்களில் காலை முதல் பொதுமக்கள் கடைகளில் அமர்ந்து உணவு கொண்டு செல்லும் காட்சிகளையும் காணமுடிகிறதுமேலும் தரைக்கடை வர்த்தகர்கள் இன்று முதல் தங்களது வியாபாரத்தை தொடங்கியுள்ளனர், பொதுமக்கள் இன்று காலை முதல் அதிக அளவில் இரு சக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களில், வெளியூர் மற்றும் உள்ளூரில் பணியாற்றுவதற்கு செல்ல தொடங்கியுள்ளனர். அனைத்து பகுதிகளிலும் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர், அதேநேரத்தில் அரசின் அறிவுறுத்தலை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக திருவாரூர் மாவட்டம் இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளது என கூறலாம்.