நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மையான இடங்களை பெற்று திமுக ஆட்சிப் பொறுப்பில் அமர்ந்தது. தமிழ்நாடு முதல்வராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்று கொண்டார். ஆட்சி பொறுப்பேற்ற பின்னர் 50 நாட்களை கடந்தும் கொரோனா பெருந்தொற்று காரணமாக தமிழ்நாடு முழுவதும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு, அதன்பின்னர் தரவுகளுடன் கூடிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இருந்தபோதிலும் கொரோனா பாதிப்பு குறையாத 11 மாவட்டங்களில் தொடர்ந்து கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது கொரோனா பாதிப்பு குறிப்பிடப்பட்ட 11 மாவட்டங்களிலும் குறைந்து வரும் நிலையில் முதல்முறையாக பாதிப்பு அதிகமாக இருந்த திருவாரூர் மாவட்டத்திற்கு தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் வருகை தருகிறார்.

 

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகை தொடர்பாக பல ஆய்வுக் கூட்டங்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மருத்துவக் கல்லூரி மருத்துவமனை போன்ற முக்கிய பகுதிகளில், கட்டடங்களில் புதிதாக வர்ணம் பூசும் பணிகள் நடைபெற்று வருகின்றன. தமிழக முதல்வர் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று தமிழ்நாடு முதல்வராக முதல் முறையாக தனது சொந்த மாவட்டமான திருவாரூருக்கு வருகை தருவதால் பல்வேறு முன்னேற்பாடுகளை திமுக நிர்வாகிகளும் மேற்கொண்டு வருகின்றனர்.



முதல்வரின் பயண திட்டத்தின்படி நாளை மதியம் சென்னையில் இருந்து தனி விமானம் மூலமாக திருச்சி வருகிறார். அங்கிருந்து சாலை மார்க்கமாக திருவாரூர் வருகிறார். திருவாரூர் அடுத்து உள்ள காட்டூரில் அமைந்துள்ள மறைந்த முன்னாள் முதல்வரும் முன்னாள் திமுக தலைவருமான கருணாநிதியின் தாயார் அஞ்சுகத்தம்மாள் நினைவிடத்தில் மரியாதை செலுத்துகிறார். அதனை தொடர்ந்து ஏற்கனவே அறிவித்தபடி காட்டூரில் அமையவுள்ள கலைஞர் அருங்காட்சியம் கட்டுமான பணிகளை ஆய்வு செய்கிறார். தொடர்ந்து திருவாரூர் அடுத்த விளமல் பகுதியில் உள்ள அரசினர் விருந்தினர் மாளிகையில் இரவு ஓய்வெடுக்கிறார்.

 

நாளை மறுநாள் ஏழாம் தேதி தமிழ்நாடு முதல்வரின் முதல் பயணத்திட்ட நிகழ்வாக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புதிதாக கட்டப்பட்டுள்ள பெண்கள் மற்றும் குழந்தைகள் நல பிரிவுக்கான தனி வளாகத்தினை திறந்துவைக்கிறார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து அவர்களது கேள்விகளுக்கு பதில் அளிக்கிறார். அதனை தொடர்ந்து தமிழ்நாடு முதல்வர் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ள கொரோனா தடுப்பு பணிகள் மற்றும் மாவட்ட வளர்ச்சி திட்ட பணிகள் குறித்த ஆய்வு கூட்டத்தில் பங்கேற்கிறார்.

 

நிகழ்வுகளின் தொடர்ச்சியாக திருவாரூரிலிருந்து நாளை மறுநாள் ஏழாம் தேதி மதியம் நாகை மாவட்டம் திருக்குவளையில் உள்ள முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சரும் முன்னாள் திமுக தலைவருமான கருணாநிதியின் இல்லத்தை பார்வையிடுகிறார். அதனைத் தொடர்ந்து மயிலாடுதுறை மாவட்டம் திருவெண்காடு பகுதியில் அமைந்துள்ள தனது மனைவியின் பூர்வீக வீட்டில் தங்க உள்ளார். தமிழ்நாடு முதல்வராக முதன் முறையாக பொறுப்பேற்ற பிறகு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது சொந்த மாவட்டமான திருவாரூருக்கு வருகை தருவது என்பது குறிப்பிடத்தக்கது.