பாட்டில் தடை செய்யப்பட்டால் எங்களுக்கு வேலையில்லா நிலைமை ஏற்படும்; பெண் தொழிலாளர்கள் வேதனை

 

தமிழக அரசு டாஸ்மாக் மதுபான கடைகளில் கண்ணாடி பாட்டில்களுக்கு பதிலாக டெட்ரா பேக்-ஐ பயன்படுத்தவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக முதல்வர் ஸ்டாலின் பொறுப்பேற்ற உடனேயே சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கில், பாலித்தீன் பைகள், பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைப்பதற்காக மஞ்சள் பைத்திட்டத்தை அறிமுகப்படுத்தி, அதனை செயல்படுத்த தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறார். இந்த சூழலில், மக்கக்கூடிய தன்மை கொண்டதும், இறுதியில் மறுசுழற்சிக்கு கொண்டு வர வாய்ப்புள்ளதுமான, கண்ணாடி பாட்டில்களை தவிர்த்து விட்டு, மக்காத தன்மை கொண்ட டெட்ரோ பேக் எனப்படும் பிளாஸ்டிக் டப்பாக்களை பயன்படுத்த முடிவு செய்திருப்பது முரண்பாடாக உள்ளது.

 

அரசு டாஸ்மாக் மதுபான கடை வந்த பிறகு தமிழகம் முழுவதும் கிராமப்புறங்களிலும் கடைகள் வைக்கப்பட்டுள்ளன. மது குடிக்கும் கலாச்சாரமும் அதிகரித்து ஆங்காங்கே குடித்துவிட்டு பாட்டில்களை நீர்நிலைகளிலும், வயல்வெளிகளிலும் வீசி செல்கின்றனர். இதனால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்பட்டு இருப்பது உண்மை. இதற்கு அடிப்படை காரணம், பாட்டில்களை மறுசுழற்சிக்கு எடுத்துக் கொள்ளாமல் இருப்பதே ஆகும். கண்ணாடி பாட்டில்களை மறுசுழற்சிக்கு எடுக்காமல் இருப்பதற்கு பல காரணங்கள் உள்ளன. கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்னர் கண்ணாடி மது பாட்டிலின் விலை ரூ.1. க்கு பழைய பாட்டில்கள் சேகரிக்கும் கடைகளில் கொள்முதல் செய்யப்பட்டது. இதனால் ஆங்காங்கே கிடக்கும் பாட்டில்களை சேகரித்து அன்றாடம் பழைய பாட்டில்களை பலரும் விற்பனை செய்து வந்தனர். நாளடைவில் காலி மது பாட்டில்கள் விலை குறைந்துவிட்டது.
  



 

மது உற்பத்தி ஆலைகளின் எண்ணிக்கை அதிகரித்த நிலையில், தங்களுடைய தனித்துவத்தை காட்டுவதற்காக பாட்டிலில் தங்களின் நிறுவனத்தின் பெயரை பதித்து பாட்டில்களை அச்சடித்து உற்பத்தி செய்தனர். இதனால் எந்த நிறுவனத்துக்கு வேண்டுமானாலும் காலி மது பாட்டில்களை கழுவி சுத்தம் செய்து அனுப்பலாம் என்ற நிலை மாறி, பாட்டிலில் அச்சடிக்கப்பட்ட நிறுவனங்களுக்கு மட்டுமே பழைய பாட்டில்களை அனுப்ப முடியும் என்ற நிலை உருவானது. அதனைத் தொடர்ந்து, ஒவ்வொரு நிறுவனமும் வெவ்வேறு வடிவங்களில் பாட்டில்களை வடிவமைக்க தொடங்கியபோது, போட்டியின் காரணமாக ஏற்கனவே வெளியிடப்பட்ட வடிவங்களை அடிக்கடி மாற்றி விடுவதாலும், பழைய பாட்டில்கள் கொள்முதல் தடைபட்டது. கண்ணாடி பாட்டில்களை பொறுத்தவரை சிலிகான் கலந்து செய்யப்படுவதாகும்.

 

பிளாஸ்டிக் பாட்டில்களை ஒப்பிடும்போது, பிளாஸ்டிக் பாட்டில்கள் மற்றும் தன்மை உடையது அல்ல. ஆனால் கண்ணாடி பாட்டில்கள் 25 ஆண்டுகளிலேயே மக்கிவிடும் தன்மை கொண்டதாகும். இந்த நிலையில் கண்ணாடி பாட்டில்களை மறுசுழற்சிக்கு கொண்டு வரும் காரணிகளை ஆராயாமல், கண்ணாடி பாட்டில்கள் சுற்றுச்சூழலுக்கு கேடுகளை விளைவிப்பதாகக் கூறி ஒட்டுமொத்தமாக கண்ணாடி பாட்டில்களை புறக்கணிப்பது என்பது முற்றிலும் தவறு. தமிழக அரசு டெட்ரோ பேக் மூலம் மது விற்பனை செய்தால், கண்ணாடி பாட்டில்களை கழுவும் தொழிலாளர்கள் 5 லட்சம் பேர் வேலை இழக்கச் செய்யும் நடவடிக்கையாகும். குறிப்பாக திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி திருவாரூர் திருத்துறைப்பூண்டி உள்ளிட்ட பகுதிகளில் 2000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் அதிலும் பெண் தொழிலாளர்கள் அதிகளவில் இந்த தொழிலை நம்பி தங்களது குடும்ப வாழ்வாதாரத்தினை மேம்படுத்தி வருகின்றனர். மத்திய பிரதேசம் டெட்ரா பேக்கால் மிகவும் பாதிப்படைந்துள்ளதை சூழலியல் செயல்பாட்டாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். கர்நாடகத்திலும் இதற்கு எதிர்ப்பு கிளம்பி உள்ள சூழலில் தமிழகத்தில் டெட்ரா பேக் அறிமுகம் செய்வதை தமிழக அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்.



 

மாறாக மது உற்பத்தி ஆலைகள் அனைத்திலும் ஒரே மாதிரியான பாட்டில்களை பயன்படுத்த அரசு உத்தரவிட வேண்டும். பாட்டில்களில் தங்களுடைய நிறுவனங்களின் பெயரை அச்சிடுவதை தடை செய்ய வேண்டும். புதிய பாட்டில்கள் பயன்படுத்தும் சதவீதத்தை குறைத்து பழைய பாட்டில்களை பயன்படுத்துவதை அரசு ஊக்கப்படுத்த வேண்டும். இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது பழைய பாட்டில்களுக்கான கொள்முதல் விலை அதிகரிக்கும்.

 

இதன் மூலம், வயல்வெளிகளிலும் நீர் நிலைகளிலும் தேங்கி கிடக்கின்ற காலி மது பாட்டில்களின் விலை, இதன் மூலம் சுற்றுச்சூழலுக்கு தீங்கு என கருதப்படும் காளி மது பாட்டில்கள் அனைத்தும் மது ஆலைகளின் மூலமாகவே கொள்முதல் செய்யப்பட்டு மறுசுழற்சிக்கு பயன்படுத்தப்படும். குறிப்பாக பாட்டில் தொழிலை நம்பி உள்ள தொழிலாளர்கள் அதில் வரும் வருமானத்தின் மூலமாகத்தான் தங்களது குழந்தைகளின் படிப்பு மற்றும் வீட்டில் தேவைகளை பூர்த்தி செய்து வருவதாகவும் தற்பொழுது பாட்டில் தடை செய்யப்பட்டால் எங்களுக்கு வேலையில்லா நிலைமை ஏற்படும் எனவும் ஒட்டுமொத்த தொழிலாளர்கள் வாழ்வாதம் கேள்விக்குறியாகிவிடும் எனவும் பெண் தொழிலாளர்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர் ஆகவே தமிழக அரசு எப்பொழுதும் போல் அரசு மதுபான கடைகளில் பாட்டில்கள் மூலமாக அதை விற்பனை செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.