நாகையில் அங்கன்வாடி மின் கட்டணங்களை பணியாளர்கள் தலையில் சுமத்தாமல் அரசு செலுத்த வேண்டும், அங்கன்வாடி மையங்களுக்கு கோடை விடுமுறை அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 8 அம்ச  கோரிக்கைகளை வலியுறுத்தி சீருடை அணிந்தபடி ஆட்சியர் அலுவகம் முன்பாக தரையில் அமர்ந்தும் முற்றுகையிட்டும் அங்கன்வாடி ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


குழந்தைகளின் நலன் கருதி வெயிலின் தாக்கத்தை கருத்தில் கொண்டு கோடை விடுமுறை அளிக்க வேண்டும் சிலிண்டருக்கு வழங்கப்படும் தொகை 1205 முழுமையாக வழங்க வேண்டும், அங்கன்வாடி மையங்களுக்கு மின்கட்டனம் அரசே செலுத்த வேண்டும் உள்ளிட்ட 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில் மாநில தழுவிய கோரிக்கை ஆர்ப்பட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.




அதன் ஒருபகுதியாக நாகை ஆட்சியர் அலுவலகம் முன்பாக அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் கோரிக்கை வலியுறுத்தி ஆட்சியர் அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டத்தில்  ஈடுபட்டனர். மாநில பொருளாளர் தேவமணி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சீருடையோடு வந்த அங்கன்வாடி ஊழியர்கள் தரையில் அமர்ந்தும் முற்றுகையிட்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் சிலிண்டர் மானியத்தை முழுமையாக வழங்க வேண்டும், அங்கன்வாடி மின்சார கட்டணத்தை அங்கன்வாடி ஊழியர்கள் தங்களது ஊதியத்தில் இருந்து செலுத்த வேண்டும் என்பது எந்த விதத்தில் நியாயம் என கேள்வி எழுப்பி மின்சார கட்டணத்தை அரசே கட்ட வேண்டும் எனவும், காலி பணியிடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும், 10 ஆண்டுகள் பணி முடித்த தகுதி வாய்ந்த உதவியாளர்களுக்கு உடனடியாக பதவி உயர்வு வழங்குவதோடு பணியிட மாறுதல் வழங்கிட வேண்டும், பிரதான அங்கன்வாடி மையங்களை மினி மையங்கள் ஆக்குவதையும் குறு மையத்தை பிரத மையத்தோடு இணைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும்,கோடை விடுமுறை அளிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் முழக்கங்களை எழுப்பினர்.


இதில் நாகை, கீழ்வேளூர், வேதாரண்யம், கீழையூர், திருமருகள் ஒன்றியங்களைச் சேர்ந்த 500 க்கும் மேற்பட்ட அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்துக் கொண்டனர்.