திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பள்ளிக்கல்வி துறையின் சார்பில் 2019-20ஆம் ஆண்டின் தமிழக அரசின் சிறந்த பள்ளிக்கான விருது பெற்ற பள்ளிகள் மற்றும் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி இயக்கத்தின் சார்பில் மாநில அளவில் நடைபெற்ற கலா உத்சவ் போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளை திருவாரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் காயத்ரி கிருஷ்ணன் மற்றும் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி.கே.கலைவாணன் அவர்கள் பாராட்டி கௌரவித்தார்கள். 2019-20 ஆண்டின் சிறந்த பள்ளிகளுக்கான விருது தமிழக அரசால் திருவாரூர் மாவட்டம், திருவாரூர் ஒன்றியத்திற்குட்பட்ட கொட்டாரக்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, மன்னார்குடி ஒன்றியத்திற்குட்பட்ட பரவாக்கோட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, நன்னிலம் ஒன்றியத்திற்குட்பட்ட செருவலூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி பள்ளிகளுக்கு வழங்கப்பட்டது. இவ்விருதுகளை பெற்ற வட்டார கல்வி அலுவலர்கள் மற்றும் தலைமையாசிரியர்களை மாவட்ட ஆட்சியர் அவர்கள் மற்றும் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் ஆகியோர் பாராட்டி, பள்ளி மாணவ, மாணவிகள் கல்வியில் தொடர்ந்து சிறந்து விளங்குவதற்கான தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென அறிவுறுத்தினர்.



 

அதனை தொடர்ந்து, ஒன்றிய மனிதவள மேம்பாட்டு அமைச்சகமும், மாநில ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி இயக்கமும் இணைந்து 2021-2022ம் ஆண்டிற்கான மாநில அளவில் நடைபெற்ற கலா உத்சவ் போட்டி கடந்த நவம்பர் 16,17, மற்றும் 18ஆம் தேதிகளில் சேலத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் கலந்து கொண்டு மன்னார்குடி, சண்முகா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 11ஆம் வகுப்பு பயிலும் மாணவி அமிர்தவர்ஷினி தவில் இசையில் மாநில அளவில் முதலிடமும், திருத்துறைப்பூண்டி, தூய அந்தோணியர் மேல்நிலைப்பள்ளியில் 12ஆம் வகுப்பு பயிலும் மாணவி தொல்காப்பியா பரதநாட்டிய கலையில் மாநில அளவில் முதலிடமும் பெற்று விருதினை பெற்றுள்ளனர். இவ்விருதினை பெற்ற மாணவிகளை மாவட்ட ஆட்சியர் அவர்களும், திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் அவர்களும் பாராட்டி புத்தகங்களை பரிசாக வழங்கினார்கள். மேன்மேலும், பல்வேறு சாதனைகளை படைக்குமாறு விருது பெற்ற மாணவிகளை வாழ்த்தினார்கள்.
  



 

குறிப்பாக மன்னார்குடி சண்முகா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 11 ஆம் வகுப்பு பயிலும் மாணவி அமிர்தவர்ஷினி தவில் இசையில் மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளார். இவர் இந்தியா மட்டும் இல்லாமல் பல்வேறு நாடுகளுக்குச் சென்று தவில் வாசித்து பல்வேறு பரிசுகளைப் பெற்றுள்ளார். இவர் பற்றிய செய்தி தொகுப்பு ஏற்கனவே ஏபிபி நாடுவில் செய்தி வெளியிட்டிருந்த நிலையில் தற்பொழுது தமிழக அளவிலான போட்டியில் முதலிடம் பெற்று சிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்க ஒன்றாகும். இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் சிதம்பரம், முதன்மை கல்வி அலுவலர் தியாகராஜன், மாவட்ட கல்வி அலுவலர்கள் திருவாரூர் பார்த்தசாரதி, மணிவண்ணன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் புண்ணியகோட்டி மற்றும் வட்டார கல்வி அலுவலர்கள், தலைமையாசிரியர்கள் கலந்து கொண்டனர்.