இலங்கையிலிருந்து படகு மூலம் ரூபாய் 2 லட்சம் பணம் கொடுத்து நாகை வந்த இலங்கை அரசால் தேடப்பட்டு வரும் குற்றவாளி மோகனராசா கைது செய்யப்பட்டார். போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

நாகை மாவட்டம் வெள்ளப் பள்ளம் மீனவ கிராமத்தில் நேற்று முன்தினம்  இரவு 08.30 மணியளவில், கடற்கரையில் நின்று கொண்டிருந்த இலங்கை நாட்டைச் சேர்ந்த நபரை பிடித்த வெள்ளப்பள்ளம், மீனவர் தெருவைச் சேர்ந்த மீனவர்கள், காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த வேட்டைக்காரனிருப்பு காவல்துறையினர் அவரை கைது செய்து காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். அதில், மோகனராசா 43 வயது ( மீனவர் - மீன்பிடி தொழில்) த.பெ.மாணிக்கவாசகர் , அம்மன் கோவிலடி, தொண்டைமன்னார், வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம் எனவும், இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக, தான் இலங்கையைச் சேர்ந்த காந்தன் என்பவரை தொடர்பு கொண்டு, ரூ 2,00,000 பணம் கொடுத்து, பைபர் படகு மூலம் பருத்தித்துறை கடற்கரையிலிருந்து  அழைத்து வந்து நேற்று இரவு சுமார் இரவு 08.00 மணியளவில் வெள்ளப்பள்ளம் கடற்கரை பகுதியில் இறக்கி விட்டு சென்று விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.



 

போலீஸ் விசாரணையில் அகதியாக வந்ததாக கூறிய  மோகனராசா, இலங்கையில் போதைப்பொருள் கடத்தல் வழக்குகளில்  தொடர்புடைய இலங்கை அரசால் தேடப்படும் குற்றவாளி என இலங்கை பாதுகாப்பு அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ள நிலையில், மோகன ராசாவிடம் மத்திய, மாநில உளவுத்துறை போலீசார் மற்றும் கடலோர காவல் குழும தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.