இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலுக்கு இணங்க தஞ்சை மாவட்டத்தில் உள்ள 8 சட்டசபை தொகுதிகளிலும் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க வரும் 11-ம் தேதி தஞ்சை மாவட்டத்தில் உள்ள 2350 வாக்குச்சாவடிகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது என்று மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்துள்ளார்.



இதுகுறித்து கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலுக்கு இணங்க தஞ்சை மாவட்டத்தில் உள்ள 8 சட்டசபை தொகுதிகளிலும் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான பணி முழுவீச்சில் நடந்து வருகிறது. இதுவரை 6 லட்சம் வாக்காளர்கள் தங்களது ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைத்துள்ளனர்.

பொதுமக்கள் நலன் கருதி வரும் 11-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை தஞ்சை மாவட்டத்தில் உள்ள 2350 வாக்குச்சாவடிகளிலும் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு ஏதுவாக சிறப்பு முகாம் நடக்கிறது. எனவே பொதுமக்கள் அனைவரும் முன்வந்து வழக்கமாக வாக்கு செலுத்தக்கூடிய வாக்குச்சாவடிகளில் ஆதார் எண், வாக்காளர் அடையாள அட்டை எண் மற்றும் செல்போனின் ஆகிய விவரங்களை வாக்கு சாவடி நிலை அலுவலர்களிடம் பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும்



ஆதார் எண் மற்றும் வாக்காளர் அடையாள அட்டையின் ஜெராக்ஸ் நகலை கொடுக்க வேண்டிய கட்டாயம் இல்லை. ஆதார் எண் இல்லாதவர்கள் இந்திய தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்துள்ள 100 நாள் வேலை அடையாள அட்டை, தபால் வங்கி கணக்கு புத்தகம், ஓட்டுனர் உரிமம், பான் கார்டு உட்பட 11 வகையான இதர ஆவணங்களில் ஏதேனும் ஒரு ஆவணத்தின் விபரத்தை வழங்கலாம். வரும் 11-ம் தேதி நடைபெற உள்ள சிறப்பு முகாமில் பொதுமக்கள் அனைவரும் பங்கேற்று தங்களது முழு பங்களிப்பையும், ஒத்துழைப்பும் வழங்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.