மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை நகராட்சியில் 36 வார்டுகள் உள்ளன. இங்கு வீடுகள், அலுவலகம், நிறுவனங்கள், கடைகள் என பல்வேறு வகைகளில் சேரும் குப்பைகளை மயிலாடுதுறை நகராட்சி சார்பில் சேகரிக்கப்படுகிறது. அவ்வாறு சேகரிக்கும் குப்பைகளை மயிலாடுதுறை அருகே ஆனந்ததாண்டவபுரம் சாலையில் அமைக்கப்பட்டுள்ள குப்பைக்கிடங்கில் கொட்டி, மறுசுழற்சி செய்வது வழக்கம். 




அவ்வாறு செய்யும் வேலையில் அவ்வப்போது இந்த குப்பை கிடங்கில் தீ பற்றி எரிந்து சுற்றுவட்டார பகுதிகள் முழுவதும் புகைமண்டலம் மாறி அப்பகுதி மக்களுக்கு சுவாச கோளாறுகளை ஏற்படுத்தி வருகிறது. மேலும் குடியிருப்புகள் மத்தியில் உள்ள இந்த குப்பை கிடங்கை வேறோரு இடத்திற்கு மாற்ற கோரி அப்பகுதி பொதுமக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தியுள்ளனர். இருந்தபோதிலும் அந்த குப்பை கிடங்கு தொடர்ந்து அங்கேயே செயல்பாடு வருகிறது.




இந்நிலையில் தற்போது வழக்கமாக குப்பைகளை சேமிக்கும் இந்த குப்பைக்கிடங்கு முழுவதுமாக நிரம்பி விட்ட காரணத்தால் கடந்த பல மாதங்களாக நகராட்சி பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை அந்தந்த பகுதிகளில் கொட்டி கொளுத்துவதும், புறநகர் பகுதிகளில் கொட்டிவிட்டு செல்வதும் வாடிக்கையாகிவிட்டது.  இந்த சூழலில்  மயிலாடுதுறை இருந்து  மாப்படுகை செல்லும் சாலையில் கிட்டப்பா பாலம் காவிரி ஆற்றின் ஓரத்தில் கடந்த ஓராண்டாக நகராட்சி நிர்வாகத்தினர் குப்பைகளை கொட்டி செல்கின்றனர். 




இதனால் அப்பகுதி மக்களுக்கு பல்வேறு சுகாதார பாதிப்புகள் ஏற்படுவதாக கூறி அப்பகுதி மக்கள் ஏற்கனவே ஒருமுறை சாலைமறியல் போராட்டம் நடத்தினர். அதனைத் அடுத்து குப்பைகளை இனி கொட்ட மாட்டோம் என நகராட்சி நிர்வாகத்தினர் உறுதி அளித்திருந்தனர். ஆனாலும் அதன் பின்னரும் தொடர்ந்து குப்பைகளைக் கொட்டி வந்தனர். இதுகுறித்து நான்கு நாட்களுக்கு முன்பு நகராட்சி நிர்வாகத்தில் புகார் மனு அளித்தும் குப்பைகள் கொட்டப்படுவது நிறுத்தப்படாததால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் துரைராஜ் தலைமையில், பல்வேறு அமைப்பினரும், பொதுமக்களும் இணைந்து மயிலாடுதுறை மாப்படுகை சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.




மேலும் அவர்கள்  நகராட்சி ஆணையர் நேரில் வந்து குப்பைகளை கொட்ட மாட்டோம் என எழுத்து பூர்வமாக  உறுதி அளிக்க வேண்டும் அதுவரை சாலை மறியல் போராட்டத்தை கைவிட மாட்டோம் என தெரிவித்தனர். இதனை அடுத்து அங்கு விரைந்த நகராட்சி ஆணையர் இனி வரும் காலங்களில் அங்கு குப்பைகளை கொட்டாமல் நடவடிக்கை எடுப்பதாகவும், தற்போது கொட்டப்பட்டுள்ள குப்பைகளை 10 நாட்களுக்குள் அகற்றி அந்த இடத்தை சுத்தம் செய்து சாலையில் மின் விளக்கு அமைத்து தருவதாக எழுத்து பூர்வமாக உறுதி அளித்ததின் பேரில் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.